திங்கள், 15 பிப்ரவரி, 2021

அரளி : செக்குக் கல்வெட்டு

அரளி

இத்தாவரம் இந்தியா முழுவதும் தோட்டங்களில் அலங்காரமாக வளர்க்கப்படுகிறது. கோயில்களில் அன்றாட பூஜைகளுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இத்தாவரம் தற்கொலைக்கான முயற்சியுடனும் கருக்கலைப்புடனும் தொடர்பு படுத்தப்பட்டதாகும்என்கிறது, தமிழ் இணையக் கல்வி கழகக் கட்டுரை.

நாம இப்போது பார்க்கப் போவது, அரளி எனும் தாவரத்தைப் பற்றி அல்ல: இதன் பெயரால் அமைந்துள்ள கிராமத்தைத் தான்!

தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து நான்காவது கி.மீ.இல் இருக்கும் கிராமம் தான் அரளி.

இங்குக் கல்லெழுத்துடன் கூடிய கல்செக்கு இருப்பதாக இப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் எனும் இளைஞரின் அண்மைய முகநூல் பதிவில் தகவல். நண்பர் சரவணகுமாரின் அழைப்பினையேற்று நண்பர் விஷ்ணுவுடன் நேற்று மாலைஅரளிபயணம்.

கிராமத்தில் எதிர்ப்பட்ட பெண்மணிகளிடம் கல் செக்குக்குறித்துக் கேட்டோம்.

தங்களுக்குள் விவாதம் நடத்திய அவர்கள், ‘வாங்கஎன அழைத்துச் சென்றனர்.

ஐயனார் மற்றும் அம்மன் கோயில்கள். இவற்றின் எதிர்ப்புறம். குப்பைக் கூளங்கள் கொட்டும் இடம். ‘அதோ பாருங்கஅவர்கள் சுட்டிக்காட்டிய அந்த இடத்தில் தான் அந்தக் கல் செக்கு இருக்கிறது.

நெருங்கிப் பார்த்தோம்; “ஸ்வஸ்திஶ்ரீஎனத் தொடங்குகிறது. பிடாரியார்எண்ணெய்.. போன்ற வாசகங்கள் தென்படுகின்றன. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டு ஆகலாம்!

இக்கல்லெழுத்து, ஐயா வீரராகவன் அவர்களால் ஏற்கனவே ஆவணத்தில் ஆவணப்படுத்தப்பட்டு இருப்பதாக பின்னர் அறிந்தோம். மகிழ்ச்சி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஐயனார் கோயில் அருகில் இந்தக் கல்செக்கு இருந்திருக்கிறது. கோயிலுக்கு காம்பவுண்டு சுவர் கட்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த இந்த வரலாற்றுத் தடயம், அண்மையில் இந்த இடத்திற்கு வந்துள்ளது.

இதைப் பாதுகாக்க வேண்டும்அப்பகுதி மக்களிடம் உணர்த்தினோம்.