செவ்வாய், 15 ஏப்ரல், 2025

அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்/ ASHOK VARTHAN SHETTY IAS

 கே.அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் (ஓய்வு) ... 


செப்டம்பர் 30, 1993 அன்று விழுப்புரம் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவான போது, அன்றைய தினம் மாலையே முதல் மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்றார் அசோக் வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் அவர்கள். 


இளம் வயது. தமிழைக் கடித்து கடித்துப் பேசினார். பணிகளில் கறாராக இருந்தார். ஆய்வுக் கூட்டங்கள் மணிக்கணக்கில் நடக்கும். ஆர்டிஓ நிலையிலான அதிகாரிகள் மயக்கம் போட்டு விழுந்ததுண்டு.


இவரைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்தச் செய்தியை பத்திரிகைகள் பிரசுரிக்கக் கூடாது என்பது ஏபிஆர்ஓ வின் அன்புக் கட்டளை. அதையும் மீறி அந்தச் செய்தியைப் பிரசுரம் செய்த பத்திரிகை தினகரன் மட்டுமே. அதன் செய்தியாளர் அடியேன்.


சக பத்திரிகையாளர் அசோக்குமார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தபோது, மாவட்ட ஆட்சியர் ஷெட்டியைச் சந்தித்தோம். 


அப்போது அவர் சொன்னது: “தலித் வாய்ஸ் எடிட்டர் விடிஆர் (வி.டி.ராஜசேகர்) என் உறவினர்தான். கை விலங்கு போட்டு அவரை அழைத்துச்சென்று இருக்கின்றனர். பத்திரிகையாளர் என்றால் இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்.”


மாவட்ட ஆட்சியராகி ஓராண்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சேலம், சோகோ பாக்டரியின் தனிஅலுவலராக ‘டம்மிப்’ பதவியில் நியமிக்கப்பட்டார்.


இதற்கிடையே 2006இல் திமுக ஆட்சி அமைந்தபோது  உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பேற்றிருந்த ஸ்டாலின் அவர்களுக்கு நிர்வாக ரீதியான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கும் முக்கிய பொறுப்பில், உள்ளாட்சித்துறை செயலாளர் பொறுப்பில் இருந்தார் ஷெட்டி அவர்கள்.


அடுத்த ஆட்சிமாற்றத்தின் போது முந்தைய ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்கும் பணியில் அதிமுக அரசு ஈடுபட்டது. இதற்கிடையே தனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் பணிக்காலம் இருந்தாலும் விருப்ப ஓய்வு (நீதிமன்றம் சென்று) பெற்றுக்கொண்டார் ஷெட்டி அவர்கள்.


கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு அமைந்த போதே,  அரசு ஆலோசகராக ஷெட்டி அவர்கள் வரப்போகிறார் என பலமாகப் பேசப்பட்டது. ஆனால் அப்படி அப்போது எதுவும் நடக்கவில்லை.


ஷெட்டி அவர்கள் மிகுந்த வாசிப்பு வழக்கம் கொண்டவர். ஆவணக் காப்பகத்தின் ஆணையராக இருந்தபோது அவரை சந்தித்தேன். “குலக் கல்வித் திட்டம் தொடர்பான ஆவணங்கள் உடனடியாகக் கொண்டு வாருங்கள்” என ஊழியர்களை அப்போது அவர் விரட்டிக் கொண்டிருந்தார். 


கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பொதுவெளியில், ஷெட்டி அவர்களைப் பரவலாகப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, கல்வி, இட ஒதுக்கீடு தொடர்பான உரையாடல்களில், அண்மையில்கூட அவரதுக் குரலைக் கேட்க முடிந்தது.


முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் வரிசையில் மீண்டும் ஏதோ நடக்கப் போகிறது என யூகித்தேன். நடந்துவிட்டது...


மாநிலங்களின் உரிமைகள்  தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (15.4.25) அமைத்துள்ள உயர்மட்டக் குழுவில் கே.அசோக் வர்தன் ஷெட்டி அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்! 


ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் முதன்மைச் செயலாளராக (2009) இருந்த போது கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அசோக் வர்தன் ஷெட்டி ஐஏஎஸ் அவர்கள் தனது உரையை சாணக்கியரின் மேற்கோளுடன் இவ்வாறு முடித்திருந்தார்:


"உங்கள் நடவடிக்கைகளில் மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள், ஏனென்றால் காட்டிற்குச் செல்வதன் மூலம் நேரான மரங்கள் வெட்டப்படுகின்றன, வளைந்தவை நிற்கின்றன என்பதை நீங்கள் காண்பீர்கள்".