புதன், 16 மார்ச், 2022

அரிட்டாபட்டி குடைவரைக் கோயில்

அரிட்டாபட்டி.. மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் இருக்கும் இயற்கை எழிலார்ந்த அழகான கிராமம்.

மலைகள் சூழ்ந்த இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் வாழ்கின்றன.

அரசாங்கத்தால பல்லுயிர் சூழல் மண்டலமா அறிவிக்கப்பட்டு இருக்கு அரிட்டாபட்டி.

இந்த ஊருல தான் இதோ இந்தப் பாறையில் தான் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு தமிழிக் கல்வெட்டுகள் இருக்கின்றன.

பாறைக்கு அடியில் சமண முனிவர்கள் தங்குவதற்கான குகைக் தளங்களை அமைத்துக் கொடுத்ததைச் சொல்லும் கல்வெட்டுகள் இவை.

தமிழ் எழுத்து வரலாற்றில் அரிட்டாபட்டி கல்வெட்டுகள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

அதே பாறையில் சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் கீழுள்ள 10 ஆம் நூற்றாண்டையக் கல்வெட்டு இந்த மலையை பிணையன் மலை என்று குறிப்பிடுகிறது. ஆனால் இப்போது இது கழிஞ்ச மலை என்று வழங்கப்படுகிறது.

இதோ அழகான வழவழப்பானப் பாறைகளைக் கொண்ட கழிஞ்ச மலை.  இதன் மீது ஏறி அந்தப் பக்கம் இறங்கணும்.

பாறையில் குடையப்பட்ட குடைவரைக் கோயில். சிவாலயம்.

இது ஏழு எட்டாம் நூற்றாண்டில் முற்காலப்  பாண்டியர்களால் ஏற்படுத்தப்பட்டக் குடைவரை ஆகும். ஆனாலும் கல்வெட்டுகள் எதுவும் இங்க இல்லை.

கருவறையின் இரண்டு பக்கங்களிலும் அழகான வாயிற் காப்போர்.

உள்ளே தாய்ப்பாறையில் அமைந்திருக்கும் லிங்கத் திருமேனி. 

முன்மண்டபத்தின் இடதுபுறம் பிரம்மாண்டமான வலம்புரி விநாயகர் புடைப்புச் சிற்பம்.

வலது புறம் பிரம்மாண்டமான லகுலீசரோட புடைப்புச் சிற்பம். தலையில் கரண்ட மகுடம் மார்பில் பட்டையான யக்ஞோப வீதத்துடனும் கையில் தடியேந்தி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் லகுலீசர்.

பாண்டியர் கால குடைவரைகளில் இந்த இடத்தில் தான் லகுலீசர் சிற்பம் இடம் பெற்று இருக்கு அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது.

பறவைகளின் பல்லுயிர் சூழல் மண்டலமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிக் கல்வெட்டுகளும் சமணர் படுக்கைகளும் சிற்பமும் இடம்பெற்ற ஊராக பாண்டியர் கால குடைவரை அதிலும் அரியதொரு லகுலீசர் சிற்பம் இடம் பெற்று இருக்கும் குடைவரை என இத்தனை சிறப்புகளோட அதிசய கிராமமா  இருக்கு அரிட்டாபட்டி.


நீங்க மதுரைப் பக்கம் போனீங்க ன்னா அப்டியே ஒரு எட்டு அரிட்டாப்பட்டிக்கும் போய்ட்டு வாங்க.

அரிட்டாபட்டி குறித்த அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனல் பதிவைப் பார்க்க..

https://youtu.be/Ee7UE111uRU



புதன், 9 மார்ச், 2022

பழவலம் கோட்டை

 பழவலம்... 


செஞ்சி - மழவந்தாங்கல் காப்புக் காடுகளின் சாலையின் ஊடாகச் சென்றால் இந்தக் கிராமத்தை அடையலாம். 


விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையோர கிராமம்.. அடுத்து, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். 


இதோ, இங்கு நெடிதுயர்ந்து நிற்கும் 'பெரிய மலை'. இந்த மலையைச் சுற்றி, சுமார் மூன்று கி.மீ.க்குச் செல்கிறது கோட்டையின் சுற்றுச்சுவர்! 


கோட்டையின் பிரம்மாண்ட வாயில் நம்மை வரவேற்கிறது! 


கோட்டை எதுவும் இல்லை... 

உள்ளே அண்மைக் காலத்தியக் குடியிருப்புகள்... 


சில இடங்களில் பாறைகளின் மீது சிதைந்த செங்கல் கட்டுமானங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன! 


வயல்களின் ஊடாக ஒரு சிவாலயம். பாறைகளுக்கு மத்தியில் ஐயனார் கோயில். 


ஐயனார் கோயிலின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக, வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள குதிரைச் சிற்பங்கள். 

அனைத்தும் கருங்கல் சிற்பங்கள்! 

"பழவலம் கோட்டை"- வேட்டவலத்தை ஆட்சி செய்த 'வானாதிராயர்' காலத்தில் அதாவது 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 


உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பண்டமாற்று செய்துகொள்ளும் வணிகக் கோட்டையாக இந்த இடம் இயங்கி இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். 


ஆனால், அப்படி இந்த இடம் இருந்ததா என்பது ஆய்வுக்கு உரியதாகும். 


வருடக்கணக்கில் செஞ்சியை முற்றுகையிட்டிருந்த முகலாயப் படைகள்.. ஒரு கட்டத்தில் தங்கள் தானியத் தேவைகளுக்கு வந்தவாசியை நோக்கி தான் செல்ல வேண்டியிருந்தது. 


செஞ்சியின் வரலாறுகளிலும் ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளிலும் பழவலம் கோட்டை குறிப்பிடப்பட்டு இருப்பதாக எனக்கு நினைவில்லை! 


பழவலம் கோட்டை குறித்த மேலதிக தகவல்கள் உங்களிடம் இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்..! 


(அழைத்துச் சென்ற நண்பர் தேவகுமார் முருகன் க்கு என் நன்றி)