திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை.
சாலையின் இரண்டு பக்கமும் அடர்ந்து நிற்கும் புளிய மரங்கள். தொலைந்து போன நம்ம கனவு மாதிரி கண் முன்னாடி விரிந்து நிக்குது.
மணலூர்பேட்டை பேரூராட்சி. இதுக்கு அடுத்த ஊருதான் ஜம்பை. அழகான அமைதியான கிராமம்.
இந்த அழகுக்கும் அமைதிக்கும் காரணம், நீண்டு படர்ந்து இருக்கும் ஏரி. சுற்றிலும் இயற்கை எழிலோடு நின்னுட்டு இருக்கும் பசுமைப் படர்ந்த மலைக் குன்றுகள்.
இந்த ஊரோட பழைய பேரு வாளையூர் நகரம். ஆமாம் ங்க ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்த ஊரு நகரம் னு அழைக்கப்பட்டு வந்துச்சு.
முதலாம் ராஜராஜன் காலத்தில் அவனோட சிறப்பு பெயரால நித்தவிநோத புரம் னும் வீரராஜேந்திரன் காலத்துல வீரராஜேந்திர சோழபுரம் னும் அழைக்கப்பட்டு வந்த இந்த ஊரு சண்பை ன்னும் சண்பை எனப்படும் சண்பையான வீரராஜேந்திர சோழபுரம் னும் அழைக்கப்பட்டுச்சு.
சம்பு ங்கறது ஒரு வகை கோரைப் புல். சம்புக் காடு இருந்த பகுதி. சம்பு ஜம்பை ஆயிடுச்சு.
சங்ககாலத்துல மலையமான்கள் ஆட்சிக்கு உட்பட்டும் பல்லவர் காலத்துல அவங்களுக்கு கீழ் ஆட்சி செய்த வாணகோ அரசர்களாலும் அப்புறம் சோழர்களாலும் ஜம்பை ஆளப்பட்டு வந்துச்சு. சோழர் காலத்துல இங்க அரன்மணையும் இருந்து இருக்கு.
ஜம்பையில நிறைய கோவில்கள். காசிநாதர் ஜம்புநாதர் கயிலை நாதர் அல்லி நாதர் கமல நாதர் னு சிவாலயங்களும் சைனி அம்மன் ங்கற சமணக் கோயில் னு நிறைய இருக்கு.
ஜம்பை பழமையான நகரம் அப்படிங்கறதுக்கான உதாரணம் நிறைய பானை ஓடுகள் இருக்கிறது தான். இதுல குறியீட்டோட கூடிய ஓடும் கிடைச்சு இருக்கு.
ஏரியை ஒட்டி நிற்கும் இந்த ஜேஷ்டா மூத்த தேவி பல்லவர் காலத்தவள். இவளுக்குப் பக்கத்திலேயே பாறையில் ஒரு கல்வெட்டு. ராஷ்டிரகூட மன்னனான கன்னரத் தேவன் ஆட்சி காலத்தை சேர்ந்ததாகும்.
இங்க இருக்கும் கோயில்கள்ல ஜம்புநாதர் கோயில் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலுக்குள்ள போன உடனே நம்மை வரவேற்கிறது இந்த அழகான சிம்மத் தூண்.
சோழர் கலைப் பாணிக்கு எடுத்துக் காட்டான கலைநயம் மிக்க தூண்கள் கோயில தாங்கி பிடிச்சு நிக்குது.
கருவறையில அருளே உருவாகக் காட்சி தர்றாரு ஜம்புநாதர்.
அழகிய சிற்பங்களோட தொகுப்பா இருக்கு இந்தக் கோயில்.
அப்புறம் கோயில் முழுக்க நிறைய கல்வெட்டுகள்.. இவை பராந்தகன் காலம் முதல் விஜயநகரர் காலம் வரையிலானவை. அந்தந்த காலக்கட்டங்கள் ல நிகழ்ந்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகள பட்டியலிட்டு சொல்லுது இந்தக் கல்வெட்டுகள்.
ஜம்புநாதர் கோயில் வளாகத்தில் தனி சன்னதியில இருக்காங்க அகிலாண்ட ஈஸ்வரி அம்மன்.
இதோ இவை கோயில் வளாகத்தில் இருக்கும் நடுகற்கள்.. தலைப்பலி சிற்பங்கள். காளையுடன் போரிட்டு இறந்த மற்றும் கோயில் பணி தடை இல்லாமல் நடக்க தன்னையே பலி கொடுத்தவன் னு ரெண்டு பேரோட நடுகல் சிற்பங்கள் தான் இது.
அப்புறம் கோயிலுக்கு வெளியே மண்ணுக்குள் புதைஞ்சு வணங்கும் நிலையில் இருக்கும் ரெண்டு சிற்பங்கள்.. இவங்க எப்ப வெளியே வருவாங்களோ தெரியல.