வியாழன், 8 டிசம்பர், 2022

திருவக்கரையில் புதிதாக உருவாகி வரும் கல்மரப் பூங்கா

கடந்த 2019 ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில்…

“செம்மண் குவாரிகள் மூலம் சுரண்டப்படும் திருவக்கரை கல்மரங்கள்”, “திருவக்கரை கல்மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்” – இப்படியாகத்தான் இருந்தது உள்ளூர் பத்திரிகை செய்தியின் தலைப்புச் செய்திகள்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி ரயில் பாதை ஓரங்களில், ஆலாத்தூர் கிராமச் சாலைகளில் என சகல இடங்களிலும் கொட்டப்பட்டிருந்த செம்மண் இடையே, கல் மரங்கள் காணப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நாம் மேற்கொண்ட முயற்சிகள் தான் மேற்காணும் பத்திரிகை செய்திகள்!

கல்மரம் எனப்படும் கனிம வளம், இயற்கையின் அதிசயம் சுரண்டப்படும் தீவிரத்தை உணர்ந்து கொண்ட பத்திரிகை நண்பர்கள், முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டனர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் உணர்ந்தது!

அப்போதைய கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் திருவக்கரைப் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இதனைத் தொடர்ந்து அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டது.

விளைவு, மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் “கல்மரப் பூங்கா”விற்கான அடிக்கல்லினை கடந்த 31.01.2021இல் அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் நாட்டினார்.

நேற்று 8.12.22 திருவக்கரை போய் பார்த்தேன். அருங்காட்சியகம், ஆடிட்டோரியம், நூலகம் என பல்வேறு வசதிகளுடன் உருவாகிக் கொண்டிருக்கிறது கல்மரப் பூங்கா! பணிகள் முடிந்து ஓரிரு மாதங்களில் திறக்கப்படலாம்!

நாம் வைத்தக் கோரிக்கை நம் கண்முன்னே நிறைவேறுவது, செயல் வடிவம் பெறுவது நமக்கு மகிழ்ச்சி தான்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக