சனி, 12 ஆகஸ்ட், 2023

எசாலம் செப்பேடு

 சிவபெருமானின் திருவடிகளில் பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்த இராஜேந்திர சோழரின் பிறந்த நாள் இன்று 12 ஆகஸ்ட் ...

--------------------------------------------------------------------

விழுப்புரம் மாவட்டம், எசாலம், இராமநாத ஈஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 


"எசாலம் செப்பேட்டின்"‌‌ காலம்: 

பொது ஆண்டு 1027 


கண்டெடுக்கப்பட்ட நாள்:

11.08.1987


செப்பேட்டின் தற்போதைய இருப்பிடம்: தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலகம், எழும்பூர், சென்னை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


எசாலம் செப்பேட்டின் வடமொழி சுலோகத்தின் ஒரு பகுதி, இராஜேந்திரச் சோழரை இப்படியாகப் புகழ்கிறது...

*******************************************


“ராஜராஜனுடைய மகனான ராஜேந்திர சோழன் சௌந்தர்யத்தின் திருமாளிகை. வீரத்தின் விசால விளையாட்டுத் திடல். துணிவு, பேரறிவு, காதல், கருணை போன்றவற்றின் பிறப்பிடம். உலக உயிர்களை மகிழ்விக்கும் சக்ரவர்த்தி. கல்வியாகிய நதிக்குக் கடல் போன்றவன். உதயத்தின் இருப்பிடம்.


சாளுக்கிய அரசனான ஜெயசிம்மனை போர்க்களத்தில் தோற்கடித்து அவன் புகழை மங்கச் செய்தான். வீரம் நிறைந்த தம் படைவீரர்களாலும் கீர்த்தியாலும் திசைகளை மறைத்தான். எடுப்பான நகில்களை உடையவளும் குணங்கள் நிறைந்தவளுமான கங்கையை தன் நாட்டிற்குக் கொண்டு சென்றான். செல்வத்தை அடைந்த அவன் கடினமின்றியே கங்கை நீரை பெற்றதினால் ஆகாய கங்கையைக் கொண்டு வந்த பகீரதனை வென்றவன் ஆனான்.


நற்குணங்களின் தொகுதியான ராஜேந்திர சோழன் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினான். சிவபெருமானின் திருவடிகளில் பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்தான்.”





ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

விழுப்புரம் அருங்காட்சியகம்: ஐஏஎஸ் அதிகாரி நேரில் ஆய்வு

 திருமிகு. ம.அரவிந்த் ஐஏஎஸ் அவர்கள்.. தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை ஆணையர்... இன்று 6.8.23 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விழுப்புரம் வருகை தந்தார்!

சர்க்யூட் ஹவுசில் ஆணையரைச் சந்தித்த நான், 2005ஆம் ஆண்டில் இருந்து அருங்காட்சியகத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை எடுத்துச் சொன்னேன்...

உன்னிப்பாகக் கவனித்த ஆணையர், “வருவதற்கு முன்பாகக் கூட உங்கள் மின்னஞ்சல் பார்த்துவிட்டு தான் வந்தேன்” என்றார். மகிழ்ச்சி!


தொடர்ந்து, பெருந்திட்ட வளாகத்தில் ஏற்கனவே அருங்காட்சியகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆணையர் பார்வையிட்டார். 




பின்னர், கோலியனூரில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...

ஆனாலும், இன்னும் ஏதாவது இடங்கள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரியப்படுத்துங்கள் என வருவாய்த் துறையினரைக் கேட்டுக்கொண்டார்.

அங்கிருந்துப் புறப்படும் போது அவரிடம் சொன்னேன்: விழுப்புரம் அருங்காட்சியகத்திற்கான அறிவிப்பு மற்றும் அரசாணை வெளியிடப்பட்டு ஓராண்டு ஆகிறது. இடத்தை முடிவு செய்து பணிகளை விரைவுப்படுத்துங்கள் சார்.”

“கண்டிப்பாக” என்றார். நம்முடைய கால் நூற்றாண்டுக் கனவு நனவாகும் அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்..!

(நாள் முழுவதும் உடனிருந்து புகைப்படங்கள் எடுத்து உதவிய நண்பர் ஜவகர் அவர்களுக்கு மிக்க நன்றி!)