திங்கள், 3 மார்ச், 2025

மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லூரி நிகழ்வில் எழுத்தாளர் செங்குட்டுவன் பேச்சு!

தேடல்... உங்கள் வாழ்க்கயை வளப்படுத்தட்டும்!

எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், விழுப்புரம்.‌

(02.03.25 – செண்டூர்: நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம். இரண்டாம் நாள் நிகழ்வில் ஆற்றிய உரை)

 மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமின் இரண்டாவது நாள் நிகழ்வில் பங்கேற்று உங்களை எல்லாம் சந்திக்கவும், உங்களிடையே உரையாற்றவும் வாய்ப்பு கிடைத்தது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இத்தகைய வாய்ப்பினை வழங்கிய மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்!

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பு உங்களுக்கு எல்லாம் கிடைத்திருப்பதற்கு உள்ளபடியே நீங்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைய வேண்டும்! 85 ஆண்டுகளைக் கடந்து தனது தமிழ்ச் சேவையை கல்விச்சேவையை நமது கல்லூரி தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எண்ணற்ற ஆன்றோர் சான்றோர் பெருமக்களை உருவாக்கிக் கொடுத்தப் பெருமை நம் கல்லூரிக்கு இருக்கிறது!

செண்டூர் கிராமத்தில் உங்கள் முகாமை நீங்கள் துவக்கி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இந்த ஊருக்கானப் பெயர்க் காரணம் ஏதேனும் தெரியுமா உங்களுக்கு?

மகாபாரதத்திலே ஒரு காட்சி. திரௌபதியை துச்சாதனன் அரசவைக்கு அழைத்து வருகிறான். “கைச் செண்டால் அவள் பைங்குழல் பற்றி“ அவளை அழைத்து வந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் செண்டு என்பது யாது? இதுபற்றி தமிழ்த் தாத்தா உவேசா அவர்கள் மிகவும் ஆய்வு செய்தார். செண்டு என்பது பொதுவாகப் பூச்செண்டினைக் குறிக்கும். துச்சாதனன் கையில் எப்படி பூச்செண்டு இருக்கும்? செண்டு என்பது பந்து என்றும் பொருள்படும் பந்திற்கு இங்கு என்ன வேலை?

இந்த விஷயங்கள் எல்லாம் உவேசாவின் மூளையைக் குடைந்து கொண்டிருந்தன. இந்த நிலையில்தான் மாயவரம் அருகிலுள்ள ஆறுபாதி எனும் ஊருக்குச் சென்றிருந்தார் உவேசா அவர்கள். அங்கிருந்தப் பெருமாளை தரிசித்தபோது, அவரதுக் கரத்தில் பிரம்பு போல் ஒன்று இருந்தது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. பெருமாள் கையில் ஏந்தி நிற்கும் இதன் பெயர் என்ன என்று உவேசா கேட்டார். அங்கிருந்த அர்ச்சகர் சொன்னார்: ‘இதன் பெயர் செண்டு’. இது ஒரு வகையான ஆயுதம். இதைத்தான் பெருமாள் ஏந்தி நிற்கிறார். இப்படியான செண்டினைத்தான் ஐயனார் உள்ளிட்ட சில தெய்வங்களும் ஏந்தி நிற்கின்றன.

கைச் செண்டால் அவள் பைங்குழல் பற்றி“ எனும் பாரதத்தின் வார்த்தைக்கு உவேசா அவர்களுக்கு இப்போது பொருள் கிடைத்தது! அப்படியான செண்டினைத் தாங்கிய தெய்வம் இந்த ஊரில் இருக்கலாம். செண்டு இடம்பெற்ற ஊர், செண்டூராகி இருக்கலாம். அன்பிற்கினிய மாணவர்கள். இதுபற்றிய மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளலாம்!

இந்த நேரத்தில் டாக்டர் உவேசா அவர்கள் குறித்தான ஒரு சில விவரங்களை உங்களிடையே பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன். அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்தெல்லாம் கண்டிப்பாக நீங்கள் படித்து இருப்பீர்கள். படித்துக் கொண்டும் இருப்பீர்கள் .‌குறிப்பாக, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்களை எல்லாம் ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை எல்லாம் அச்சு நூலாக அவர் பதிப்பித்துக் கொண்டு வந்த வரலாறுகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள் என்றே கருதுகிறேன்.

இந்தச் சுவடிகளை எல்லாம் தேடித்தேடி அலைந்து திரிந்து அவர் மேற்கொண்ட பயணங்கள், ஆராய்ச்சிகள், கடுப்பு உழைப்பு... அப்பப்பா... அவரது வரலாற்றைப் படிக்கும் போது நமக்கு மலைப்பு ஏற்படுகிறது. எந்த நேரத்திலும் அவர் மனம் தளரவில்லை. சோர்வு அடையவில்லை. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இப்படியான தேடலில் முழுநேரத் தேடலில் அவர் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்.

அதனால் தான் அவரை இன்று தமிழ்த் தாத்தா என்று நாம் உச்சிமுகர்ந்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவரதுத் தேடல், உழைப்பு மட்டும் இல்லாவிட்டால், நமக்கெல்லாம் புறநானூறு, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி எல்லாம் எப்படி கிடைத்திருக்கும்?

அன்பிற்கு உரிய மாணவர்களே, இந்த நேரத்தில் உவேசா அவர்களின் தேடல் குறித்தான இரண்டு விஷயங்களை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவர், அதன் ஏடுகளைத் தேடி, கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கோயிலுக்குச் சென்றார். அங்குச் சுவடிகள் இருப்பதாக அறிந்து. குறிப்பாக வரகுண பாண்டியன் என்பவரால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுவடிகள் அவை. ஆனால் இவர் சென்றபோது அந்தச் சுவடிகள் எதுவும் அங்கில்லை. விசாரித்தபோது, ஆகம சாஸ்திரங்களில் சொல்லியபடி செய்துவிட்டோம் என்று சொல்லி இருக்கின்றனர். ஆமாம். குப்பைக் கூலங்களாக இருந்தச் சுவடிகளை எல்லாம் குழிவெட்டி, அக்னி வளர்த்து நெய்யில் தோய்த்து அக்னி பகவானுக்கு இரையாக்கி விட்டார்கள். தீயில் போட்டு எரித்துவிட்டார்கள். இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா என்று மனம் நொந்தார் உவேசா அவர்கள்.

களக்காடு என்ற ஊருக்குச் சென்றபோது, ஒருவரது வீட்டில் வண்டிக் கணக்கில் சேகரித்து வைத்திருந்த சுவடிகளை எல்லாம், இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கிறது என்று சொல்லி, ஆடி பதினெட்டு அன்று ஆற்றில் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். ஒரு இடத்தில் நெருப்புக்கு, இன்னொரு இடத்தில் நீருக்கு! சுவடிகளைத் தேடி அலைந்த உவேசாவின் உள்ளம் எப்படி எல்லாம் துடிதுடித்துப் போயிருக்கும்?

நண்பர்களே! இதனால் எல்லாம் அவர் சோர்ந்து விடவில்லை. மனம் தளர்வடையவில்லை. தனதுத் தேடலை, தேடல் யாத்திரைகளைத் தொடர்ந்தார். தனது வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தார்.

நான் முன்பே குறிபிட்டதுபோல் இந்த அயராத உழைப்பு தான், இந்த கடுமையான தேடல் தான் இந்த நேரத்திலும் அவர் குறித்து நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

இத்தனைக்கும் தமிழை மட்டுமே நன்கு அறிந்தவர் அவர். ஆனால் அவர் குறித்து உலகமே இன்று அறிந்து வைத்துள்ளது. பாரிஸ் நகரத்தில் வாழ்ந்த வின்சுலோ, உவேசாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி இருக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தமிழாசிரியர், திருக்குறளையும் புறநானூற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் ஆன ஜி.யு.போப் அவர்கள் உவேசா அவர்களை உச்சிமுகர்ந்து இருக்கிறார்.

சென்னையில் உள்ள உவேசாவின் இல்லத்திற்கு பெருங்கவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். திலகர் வந்திருக்கிறார். ஏராளமான தலைவர்கள் அறிஞர்கள் வந்து சென்று இருக்கின்றனர். அவர் காந்தியைச் சந்தித்து இருக்கிறார். மகாகவி பாரதியுடன் உரையாடி இருக்கிறார். பாண்டித்துரைத் தேவர் போன்ற வள்ளல் பெருமக்கள் அவரைப் பொன்னேபோல் போற்றிப் புகழ்ந்துள்ளனர். புரவலர்களாக இருந்துள்ளனர்.

இத்தனைக்கும் உவேசா அவர்கள், தமிழாசிரியர், கல்லூரிக் கல்வித் தமிழாசிரியர். நான் முன்பே குறிப்பிட்டபடி தமிழில் மட்டும் பாண்டித்தியம் உள்ள பெரியவர்.‌ ஆங்கிலம் உள்ளிட்ட இன்னபிற மொழிகளையும் மற்றவர்கள் துணைக்கொண்டு அறிந்தவர். இன்று நாநிலமும் போற்றப்படுகிறார். காரணம், தமிழின் மீது, தமிழ் இலக்கியங்களின் மீது அவருக்கு இருந்த தணியாத ஆர்வம், ஈடுபாடு, இதுதொடர்பான அவரதுத் தேடல்கள், உழைப்பு, அவரது ஆய்வுகள் இவை எல்லாம் அவரை உயர்த்தி இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்!

தமிழின் மீதான அந்தத் தேடல், ஆர்வம், உழைப்பு உங்களிடமும் ஏற்பட வேண்டும். கண்டிப்பாக நீங்கள் வாழ்க்கையில் இந்தச் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்! அதற்கான விதை, இதோ இந்த செண்டூரில் ஊன்றப்படட்டும்! விருட்சமாக வளர எனது வாழ்த்துகள்! நன்றி! வணக்கம்!

திங்கள், 24 பிப்ரவரி, 2025

பரிவட்டமாகவே இருக்கட்டும்: இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா மிஸ்டர் மனுஷ்ய புத்திரன்?

(23.2.25 இந்து தமிழ் திசை நாளிதழில் பிரசுரமான மனுஷ்ய புத்திரன் கட்டுரையை முன்வைத்து)


உள்ளூரில் பரிவட்டம்:

இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா?

2023 மார்ச் மாத இறுதியில் விழுப்புரத்தில் முதல் புத்தகத் திருவிழா நடந்தது. முதல் வாரத்திலேயே மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம்: தினசரி நிகழ்வுகளில் உள்ளூர் படைப்பாளர்களுக்கு முக்கியத்துவம், உள்ளூர் படைப்பாளர்களுக்கு என கட்டணமில்லா தனி அரங்கு (ஸ்டால்).

புத்தகத் திருவிழா தொடங்கும் முதல் நாள் வரை இதுபற்றி மாவட்ட நிர்வாகம் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. புத்தகத் திருவிழாவை உள்ளூர் படைப்பாளர்கள் புறக்கணிப்பது என முடிவு செய்தோம். இதனை விளக்கி தயாரிக்கப்பட்ட துண்டறிக்கையை, புத்தகத் திருவிழா தொடக்க விழாவிற்கு வரும் விஐபிக்களின் முன்னிலையில் வீசுவது என முடிவெடுத்தோம்.

பதற்றமடைந்த மாவட்ட நிர்வாகம், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

பிரதான அழைப்பிதழில் ஸ்டார் பேச்சாளர்களுடன் உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும். இது எங்கள் உள் கோரிக்கையாக இருந்தது. புதிதாக அழைப்பிதழ் அச்சிட போதிய அவகாசம் இல்லாததால், தினசரி பங்கேற்கும் உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்ற தனித்தனி பேனர்கள் நாள்தோறும் வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பிரதான அழைப்பிதழில் நாள் ஒன்றுக்கு 10 உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்கள் (இவர்கள் அனைவருக்குமான நேரம் ஒரு மணி நேரம்) இடம்பெற்றன.

மனுஷ்ய புத்திரன் கருத்துப்படி இது உள்ளூர் படைப்பாளர்களுக்கான பரிவட்டமாகவே இருக்கட்டும். இதில் உங்களுக்கென பிரச்சினை? உங்களைப் போன்றவர்களுக்குத்தான், புத்தகத் திருவிழா உள்ளிட்ட பெயர்களில் மாவட்டங்கள் தோறும் அரசாங்கமே பரிவட்டம் கட்டி, ஆஸ்தான வித்வான்களாக அனுப்பி வைக்கிறதே!

சாமானிய படைப்பாளனுக்கு உள்ளூரில்கூட பரிவட்டம் இல்லையானால், அவன் வேறெங்கு போவான்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்கள் பரிவட்டத்தின் மதிப்பு ரூ.50,000 இல் இருந்து ஒரு இலட்சம் வரை. அதுவும் உடனடித் தொகையாக. ஆனால், உள்ளூர் படைப்பாளிக்குக் கிடைக்கும் பரிவட்டமோ அந்த ஊரில் அந்த நேரத்தில் ரூ.50ல் இருந்து 100 வரை. துண்டு அல்லது சால்வையாக! அடடா, இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா மிஸ்டர் மனுஷ்ய புத்திரன்?

இங்குத் துண்டோ சால்வையோ பிரச்சினை அல்ல: அங்கீகாரம். உள்ளூர் படைப்பாளனுக்கு அவன் சொந்த மண்ணில் அவனுக்கான ஒரு அங்கீகாரம்! மனுஷ்ய புத்திரன்களிடம் இதை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை! அரசாங்கத்திடம் கூட பணிந்து கேட்கவில்லை! நாங்களாகவே எடுத்துக் கொள்கிறோம். இதுதான் விழுப்புரத்தில் நடந்தது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கப் போவது!

மாவட்டங்களில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கு எதன் அடிப்படையில் ஸ்டார் பேச்சாளர்கள் அனுப்பப்படுகிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது? இதுபற்றி எல்லாம் தமிழ்நாடு அரசும் பபாசியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!

எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், விழுப்புரம்.

Writer.senguttuvan@gmail.com



தினத்தந்தி 3.3.2023

                     தினமணி 6.3.2023


சனி, 18 ஜனவரி, 2025

வளவனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் முதலாம் இராஜாதி ராஜன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!



விழுப்புரம் அருகே வளவனூர் நகரில் அமைந்துள்ளது இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். இக்கோயிலின் கருவறை பின்பக்கச் சுவற்றில் மூன்று வரிகளில் அமைந்த துண்டு கல்வெட்டு ஒன்று தலைகீழாகப் பதிக்கப்பட்டுள்ளது. 

இதனை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.இராஜகோபால், “இதன் முதல் வரியில், புரவியொடும் பிடித்து தன்னடை ஜெயம்கொண்டு எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இது திங்கீர் திருடன் தொங்கல் எனத் தொடங்கும் முதலாம் இராஜாதி ராஜனின் (கி.பி.1018-1054) மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியாகும். இரண்டாவது வரியில் பிரம்மதேசத்து திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், மூன்றாவது வரி, ஸ்ரீ மாகேஸ்வர ரக்ஷை என்றும் முடிகிறது. இது சிவனடியார்கள் பாதுகாப்பு எனும் பொருள் தரும். இக்கல்வெட்டு சிவன் கோயிலுக்கு உரியதாக இருக்கலாம்” என்று விளக்கமளித்துள்ளார்.

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலின் கட்டுமானப் பணிகளின் போது இந்தத் துண்டுக் கல்வெட்டு சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவன மஹாதேவி சதுர்வேதி மங்கலம் குறித்த மேலதிக ஆய்வுகள் தேவை. 

                      தினகரன் 19.01.25

நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேயமாக இப்பகுதி இருந்துள்ளதையும் 970 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. 

                    தினத்தந்தி 19.01.25

மேற்காணும் கல்வெட்டில் குறிப்பிடப்படும் இராஜாதிராஜன் சோழப் பேரரசர் இராஜராஜ சோழனின் பேரனும் இராஜேந்திர சோழனின் மகனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலைச் சாளுக்கியருடன் நடந்த கொப்பத்துப் போரில் இம்மன்னர் உயிர் துறந்தார். 

வளவனூரில் உள்ள ஜகந்நாத ஈஸ்வரர் கோயிலில் இராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் முற்று பெறாத கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தற்போது பெருமாள் கோயிலில் இராஜாதிராஜன் கல்வெட்டு கண்டறியப்பட்டதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பெரிய அளவில் சிவாலயம் சிதைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 

வளவனூர் பகுதியில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் சோழர் கால தடயங்கள் மேலும் கிடைக்கலாம்.

                     தினமணி 19.01.25

இது தொடர்பான செய்தி இன்றைய (19.01.25) தினகரன், தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில்... பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி!

கல்வெட்டினை வாசித்து உதவிய மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ஐயா ராஜகோபால் சுப்பையா அவர்களுக்கு 

மிக்க நன்றி!

அன்புடன் 

விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

19.01.25

சனி, 28 டிசம்பர், 2024

1897இல் கட்டப்பட்ட பழைய கலெக்டர் அலுவலகம் - கடலூர்/ 127 YEAR'S OLD COLLECTOR OFFICE CUDDALORE

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு எதிர்ல நிற்கும் பிரம்மாண்டமான இந்தக் கட்டடம். பார்த்த உடனே நீங்க சொல்லிடலாம் பழைய கலெக்டர் ஆபிஸ் னு.

ஆங்கிலேயர் கால கட்டடக் கலைக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது இந்தக் கட்டடம்.

ஆயிரம் எழுநூறுகளின் இறுதியில் கடலூரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிர்வாகம் தொடங்கிடுச்சு. ஆனாலும் 1801ல தான் கடலூரைத் தலைநகராகக் கொண்டு தென்னாற்காடு மாவட்டம் எனும் புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் முதல் ஆட்சியர் கேப்டன் கிரஹாம்.

தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் தங்களுக்கான கார்டன் ஹவுஸ் ல நிர்வாகப் பொறுப்பை கவனிச்சுட்டு வந்தாங்க.

ஆனாலும் கலெக்டர்களுக்கு ன்னு தனியா ஒரு அலுவலகம் இல்லாம இருந்துச்சு. இந்த நிலை 95 ஆண்டுகள் நீடித்தன.

அதன் பிறகு தான் கலெக்டர் அலுவலகம் அப்படிங்கற விஷயத்தை கவனத்தில் எடுத்தது கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேய நிர்வாகம்.

ஆமாம் ங்க. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மாவட்டத்திற்கு, ஆட்சியர் அலுவலகம் என்பது அந்த ஆண்டின் இறுதியில் தான் அமைந்தது.

மஞ்சக்குப்பம் மைதானம் எதிரே கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தினை 1895 செப்டம்பரில் தேர்வு செய்தனர்.

கட்டுமானப் பணிகள் 1896 ஜனவரியில் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் சுமார் 23 மாதங்களிலேயே அதாவது 1897 நவம்பரில் முடிவடைந்தது. பிரம்மாண்டமான, அழகிய கட்டடம் எழுந்து நின்றது.

இதற்கு ஆன செலவுத் தொகை ஒரு லட்சத்து பதினாராயிரத்து முன்னூற்று தொன்னூறு ரூபாய்.

செங்கற்களைக் கொண்ட செந்நிற மாளிகையாக ரெட் போர்ட் என்று சொல்லக் கூடிய வகையில் சிறிய செங்கோட்டையாகக் காட்சியளிக்கிறது இந்தக் கட்டடம்.

கருங்கற்களால் ஆன இதன் படிக்கட்டுகளும் அதன் கைப்பிடிகளும் தனது கம்பீரத்தை இன்று வரை இழக்காமல் உள்ளன.

நாடு விடுதலைக்கு முன்பும் பின்பும் 92 கலெக்டர்களை சந்தித்துள்ளது இந்தப் பழம்பெரும் கட்டடம்.

2015ல் கடலூரில் புதிய ஆட்சியர் அலுவலகத்தின் வருகையால் தனது இருப்பை தற்காலிகமாக இழந்து நிற்கிறது இந்தப் பரம்பரிய கட்டடம்.

கருவூலம், வனம், ஆவணப் பாதுகாப்பு, அருங்காட்சியகம் என விரல்விட்டு எண்ணக் கூடிய அரசு அலுவலகங்கள் மட்டுமே இருக்கும் சிலவற்றில் தற்போது இயங்கி வருகின்றன.

மற்ற இடங்களை வவ்வால்கள் ஆக்கிரமித்து உள்ளன.

தொடர் பராமரிப்பு இல்லாததால் செடிகொடிகள் முளைத்து, மரங்களும் கூட வேர்விட்டு கட்டடத்தின் உறுதித் தன்மைக்கு உலை வைக்கின்றன.

கட்டப்பட்ட ஓரிரு ஆண்டுகளில் விரிசல் விடும் அரசுக் கட்டிடங்கள், ஆற்று நீரில் அடித்துச் செல்லும் அண்மைக்கால அணைகள், பாலங்களுக்கு மத்தியில்

இதோ 127 ஆண்டுகளுடன் இன்னும் கம்பீரம் குறையாமல் மிடுக்காக நிற்கிறது இந்த ஆங்கிலேயர் கால கட்டடம்.

பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய அத்தனைத் தகுதிகளும் இந்தக் கட்டடத்துக்கு இருக்கிறது.

26.12.24 வியாழன்று கடலூர் சென்று, இந்தப் பழமையான கட்டடத்தைப் பார்த்து வியந்தேன்!

இதுபற்றி appuram Villupuram YouTube channel ல்ல விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன்! இணைப்பு: கீழே 

https://youtu.be/XLNKhseZ5rA?si=SAbFpzkcgx0Hy_xA




விழுப்புரம் அருங்காட்சியகம்: அரசாணை வெளியீடு!

 விழுப்புரம் அருகே

பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம்

அரசாணை வெளியீடு!

 

விழுப்புரம் அருகே பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அருங்காட்சியகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் இந்த இடம் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்றும் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேவை என்றும் அருங்காட்சியகங்கள் துறை கடந்த ஆண்டு ஜூலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தது.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் அருகே பனங்குப்பம் கிராமத்தில் புதுச்சேரி, கும்பகோணம் நெடுஞ்சாலைகளையொட்டியுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி பரிந்துரை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் ம.அரவிந்த் பனங்குப்பத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் இந்த இடத்தை அருங்காட்சியகங்கள் துறைக்கு நிலமாற்றம் செய்யலாம் என நிலநிர்வாக ஆணையரும் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 3ம் தேதி அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில், “விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோரின் பரிந்துரைகளை ஏற்று விழுப்புரம் வட்டம் பனங்குப்பம் கிராமத்தில் ‘முசாபரி பங்களா நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பொதுப்பணிகள்துறை‘ என்ற வகைப்பாடுடைய நிலத்தினை அருங்காட்சியகம் அமைத்திட சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறைக்கு நில மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: 

“இந்த அரசாணையின் மூலம் பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரவேற்கிறோம். இதற்கானப் பணிகளை காலதாமதம் இல்லாமல் உடனடியாக தொடங்க வேண்டும். நிரந்தர அருங்காட்சியகப் பணிகள் தொடங்கி முடியும் வரை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தலின்படி விழுப்புரத்தில் தற்காலிக அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளிலும் அருங்காட்சியகங்கள் துறையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் உடனடி கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.


(இதுதொடர்பாக பிரசுரமாகி இருக்கும் பத்திரிகை செய்திகள்)


தினகரன் 28.12.24


தினத்தந்தி 28.12.24


தினமலர் 28.12.24


இந்து தமிழ் திசை 29.12.24



வெள்ளி, 29 நவம்பர், 2024

விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம்

 பெரியவர் ஏ.கோவிந்தசாமி அவர்கள்...


15.06.1928இல் புதுச்சேரி தேங்காய்த்திட்டு பட்டாளத்தார் ஆனையப்ப நாயகர் – மீனாட்சியம்மாள் இணையருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.

கடலூர் நகராட்சித் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றார். 

1940இல் தென்னார்க்காடு மாவட்ட மார்க்கெட் கமிட்டியில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். 

1945இல் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாருடன் இணைந்து "தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் சங்கம்" எனும் அமைப்பினை ஏற்படுத்தினார். இதுவே 1951இல் “தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி” ஆக உருவெடுத்தது. கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சி. பொதுச்செயலாளர்கள்:  ஏ.கோவிந்தசாமி, மரப்பட்டறை பி.ஜி.நாராயணசாமி. 

1952இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பாராளுமன்ற மற்றும் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி.

திண்டிவனம் பாராளுமன்றத் தொகுதியில் பலம் வாய்ந்த பத்திரிகை அதிபரும் காங்கிரஸ் வேட்பாளருமான ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவை எதிர்த்து திருக்குறளார் வீ.முனிசாமியும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் செல்வாக்குப் பெற்ற பஸ் அதிபர் பாஷ்யம் ரெட்டியாரை எதிர்த்து ஏ.கோவிந்தசாமியும் உழைப்பாளர் கட்சி வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர்.

தேர்தல் முடிவில் 19 சட்டமன்றத் தொகுதிகளிலும், 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் உழைப்பாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. திருக்குறளார் இந்திய நாடாளுமன்றத்துக்குள்ளும், ஏ.ஜி. சென்னை மாகாண சட்டமன்றத்திற்குள்ளும் அடியெடுத்து வைத்தனர். 

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றார் எஸ்.எஸ்.ஆர். இதனால் “உழவர் கட்சி” எனும் புதிய கட்சியைத் தொடங்கினார் ஏ.ஜி. 

1954இல் நடந்த காணை கஞ்சனூர் ஜில்லா போர்டு தேர்தலில் உழவர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஏ.ஜி. அப்போது அவரதுச் சின்னம் ‘உதய சூரியன்’. பின்னாளில் இது திமுகவின் அதிகாரபூர்வ சின்னமானது.

உழவர் கட்சியை நடத்திக் கொண்டிருந்த அதே காலத்தில் திமுகவின் தலைமை நிலைய பொறுப்பாளராக ஏ.ஜி.யை நியமித்தார் அண்ணா. 

1957 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டது திமுக. வளவனூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் ஏ.ஜி. 

வெற்றி பெற்று அண்ணாவுடன் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 15 பேர்களில் இவரும் ஒருவராவார்.

1967இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக, அண்ணா தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. முகையூர் சட்டமன்ற உறுப்பினரான ஏ.ஜி. அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். அண்ணா மறைவினைத் தொடர்ந்து கலைஞர் தலைமையிலான அமைச்சரவையிலும் ஏ.ஜி. இடம்பெற்றார்.

புதுவை உள்ளடக்கிய தென்னாற்காடு மாவட்ட திமுக செயலாளர், தொமுச செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் திமுகவில் ஏற்றிருந்தார்.  கட்சி நடத்திய குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்டப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று சிறை சென்றார் ஏ.ஜி.

திராவிட நாடு, இந்தி மற்றும் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு குறித்த இவரது சட்டமன்ற உரைகள் குறிப்பிடத்தகுந்தன.

இவர் அமைச்சராக இருந்தபோது தான் ‘நந்தன் கால்வாய்த் திட்டம்’ கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1969 மே 18ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி. 

இறக்கும் தருவாயில் அவர் உச்சரித்த வார்த்தை: “ஏழையாகப் பிறந்தேன். ஏழையாகவே சாகிறேன். நான் யாரிடமும் லஞ்சம் வாங்கியது கிடையாது.”

தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் விசுவாசமாகவும் கடைசி வரை வாழ்ந்தவர் ஏ.ஜி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பெரியவர் ஏ.கோவிந்தசாமி அவர்கள். 

அன்னாரின் நினைவைப் போற்றும் வகையில், விழுப்புரம் வழுதரெட்டிப் பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவரங்கம் எழுப்பப்பட்டுள்ளது.



விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த கடலூர் முதுநகர் இல்லத்தில் ...

நேற்றைய (10.11.24) பொழுது இனிய பொழுதாக கழிந்தது கடலூரில்...

விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் மகன் (ஜெயில் வீரன்) வழிப் பெயர்த்திகளான மஞ்சக்குப்பம் ஜான்சிராணி திருநாராயணன், குறிஞ்சிப்பாடி தாரா சூரியமூர்த்தி, விழுப்புரம் சந்திரா முரளி, தீர்த்தான் பாளையம் ஆறுமுகம் ஆகியோர், கடலூர் முதுநகர், சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள தங்களது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.

ஆமாம்; இந்த வீட்டில் தான் அஞ்சலை அம்மாள் அவர்கள் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார்!

ஏராளமான வரலாற்று நினைவுகளைச் சுமந்து நிற்கிறது, சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள இந்த வீடு.

வீரஞ்செறிந்த பெண்மணியை ஈன்றெடுத்த புகழ் மண்ணில், அவர்தம் நேரடி வாரிசுகளுடன் நெருக்கமாக அமர்ந்து உரையாடியது, மனதிற்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

சுண்ணாம்புக்கார தெருவின் பின்புறத்தில் தான் காந்தி பூங்கா அமைந்துள்ளது. பூங்காவின் முகப்பில் அஞ்சலை அம்மாள் அவர்களின் முழு உருவச்சிலை, தமிழ்நாடு அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.

சிலைதான், ஆனாலும் கம்பீரம் குறையாமல் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நல்வாய்ப்பினையும் அவர்தம் குடும்பத்தினர் எனக்கு வழங்கினர். அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்!

விழுப்புரத்தில் இருந்து இவ்வளவு தூரம் என்னை அழைத்துச் சென்று வரலாறு நிகழ்வினை ஏற்படுத்தித் தந்திருக்கும் மகாத்மா காந்தி பாடசாலை நிர்வாகி இரவீந்திரன் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றி!