திங்கள், 24 பிப்ரவரி, 2025

பரிவட்டமாகவே இருக்கட்டும்: இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா மிஸ்டர் மனுஷ்ய புத்திரன்?

(23.2.25 இந்து தமிழ் திசை நாளிதழில் பிரசுரமான மனுஷ்ய புத்திரன் கட்டுரையை முன்வைத்து)


உள்ளூரில் பரிவட்டம்:

இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா?

2023 மார்ச் மாத இறுதியில் விழுப்புரத்தில் முதல் புத்தகத் திருவிழா நடந்தது. முதல் வாரத்திலேயே மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம்: தினசரி நிகழ்வுகளில் உள்ளூர் படைப்பாளர்களுக்கு முக்கியத்துவம், உள்ளூர் படைப்பாளர்களுக்கு என கட்டணமில்லா தனி அரங்கு (ஸ்டால்).

புத்தகத் திருவிழா தொடங்கும் முதல் நாள் வரை இதுபற்றி மாவட்ட நிர்வாகம் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. புத்தகத் திருவிழாவை உள்ளூர் படைப்பாளர்கள் புறக்கணிப்பது என முடிவு செய்தோம். இதனை விளக்கி தயாரிக்கப்பட்ட துண்டறிக்கையை, புத்தகத் திருவிழா தொடக்க விழாவிற்கு வரும் விஐபிக்களின் முன்னிலையில் வீசுவது என முடிவெடுத்தோம்.

பதற்றமடைந்த மாவட்ட நிர்வாகம், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

பிரதான அழைப்பிதழில் ஸ்டார் பேச்சாளர்களுடன் உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும். இது எங்கள் உள் கோரிக்கையாக இருந்தது. புதிதாக அழைப்பிதழ் அச்சிட போதிய அவகாசம் இல்லாததால், தினசரி பங்கேற்கும் உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்ற தனித்தனி பேனர்கள் நாள்தோறும் வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பிரதான அழைப்பிதழில் நாள் ஒன்றுக்கு 10 உள்ளூர் படைப்பாளர்களின் பெயர்கள் (இவர்கள் அனைவருக்குமான நேரம் ஒரு மணி நேரம்) இடம்பெற்றன.

மனுஷ்ய புத்திரன் கருத்துப்படி இது உள்ளூர் படைப்பாளர்களுக்கான பரிவட்டமாகவே இருக்கட்டும். இதில் உங்களுக்கென பிரச்சினை? உங்களைப் போன்றவர்களுக்குத்தான், புத்தகத் திருவிழா உள்ளிட்ட பெயர்களில் மாவட்டங்கள் தோறும் அரசாங்கமே பரிவட்டம் கட்டி, ஆஸ்தான வித்வான்களாக அனுப்பி வைக்கிறதே!

சாமானிய படைப்பாளனுக்கு உள்ளூரில்கூட பரிவட்டம் இல்லையானால், அவன் வேறெங்கு போவான்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்கள் பரிவட்டத்தின் மதிப்பு ரூ.50,000 இல் இருந்து ஒரு இலட்சம் வரை. அதுவும் உடனடித் தொகையாக. ஆனால், உள்ளூர் படைப்பாளிக்குக் கிடைக்கும் பரிவட்டமோ அந்த ஊரில் அந்த நேரத்தில் ரூ.50ல் இருந்து 100 வரை. துண்டு அல்லது சால்வையாக! அடடா, இதுகூட உங்களுக்குப் பொறுக்கவில்லையா மிஸ்டர் மனுஷ்ய புத்திரன்?

இங்குத் துண்டோ சால்வையோ பிரச்சினை அல்ல: அங்கீகாரம். உள்ளூர் படைப்பாளனுக்கு அவன் சொந்த மண்ணில் அவனுக்கான ஒரு அங்கீகாரம்! மனுஷ்ய புத்திரன்களிடம் இதை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை! அரசாங்கத்திடம் கூட பணிந்து கேட்கவில்லை! நாங்களாகவே எடுத்துக் கொள்கிறோம். இதுதான் விழுப்புரத்தில் நடந்தது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கப் போவது!

மாவட்டங்களில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கு எதன் அடிப்படையில் ஸ்டார் பேச்சாளர்கள் அனுப்பப்படுகிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது? இதுபற்றி எல்லாம் தமிழ்நாடு அரசும் பபாசியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!

எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், விழுப்புரம்.

Writer.senguttuvan@gmail.com



தினத்தந்தி 3.3.2023

                     தினமணி 6.3.2023


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக