ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

செட்டிப்பட்டு உணர்த்தும் செய்தி


செட்டிப்பட்டு.
புதுவை மாநிலம், திருக்கனூர் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம். செஞ்சியாற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
இங்கு வயல்வெளியில் வீற்றிருக்கும் ஐயனார் சிற்பம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்று, நண்பரும் புதுவை மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஏ.வி.வீரராகவன் எப்போதோ என்னைக் கேட்டுக் கொண்டார்.
நேற்று (11.09.16) தான் அதற்கு நேரம் வந்தது. விழுப்புரத்தில் இருந்து ஆய்வாள பெருமக்கள் சி.வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோருடன், செட்டிப்பட்டு கிராமத்துக்குப் புறப்பட்டேன்.
காங்கிரஸ் பிரமுகர் வீரராகவன் மற்றும் கிராமத்து இளைஞர்கள் புடைசூழ செட்டிப்பட்டிற்குள் நுழைந்தோம். ஆற்றின் கரையோரமாகவே இருசக்கர வாகனத்தில் பயணம்.
அக்கரையில் பார்த்தால் திருவக்கரைக் கோயில். குவாரிக்கு இரையாகிப்போன மலை. பின்னர் பாதையைவிட்டு விலகி வயல்வெளியில் நடக்கத் தொடங்கினோம்.
அதோ பிரம்மாண்டமான குதிரைச் (சுடுமண்) சிற்பம். பார்த்தவுடன் வீரராகவன் சொல்லிவிட்டார், “இருநூறு வருடங்களுக்குள் இருக்கும்”. 


அருகிலேயே இருக்க வேண்டிய ஐயனார் சற்றுத் தள்ளி, பூரணி பொற்கலையுடன் தரையில் அமர்ந்திருக்கிறார். எழுத்துப் பொறிப்புகள் ஏதும் இல்லை. 

“விஜய நகரர் காலத்தியது வீரராகவன், மங்கையர்க்கரசி இருவரும் அறிவித்தனர். 


மேலும், தமிழ்நாட்டில் ஐயனார் வழிபாடு மற்றும் காலத்தால் முந்திய ஐயனார் சிற்பங்கள் குறித்து கிராமத்து இளைஞர்களிடம் அங்கேயே வகுப்பெடுத்தார், ஆய்வாளர் வீரராகவன்.
அதனை வந்திருந்தவர்கள் எந்தளவு உள்வாங்கியிருப்பார்கள் என்று தெரியவில்லை?  ஆனாலும் அவர்களுக்குள் ஒரு திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும். நம்ம ஊர் ஐயனாரின் காலம் தெரிந்ததே!
மீண்டும் உழுத வயல்வெளியின் ஊடாக நடக்கத் தொடங்கினோம். அப்போது வயல்வெளியில் கிடந்த சில பானை ஓடுகளை ஆய்வாளர்களிடம் இளைஞர்கள் காட்டினர். ‘ஆம். இவை சங்க காலப் பானை ஓடுகள்தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

பலகோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் மரங்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டக் கோயில் ஆகியவற்றைக் கொண்டுள்ள திருவக்கரை அருகிலேயே இருக்கிறது.
வராக நதி என்றழைக்கப்படும் இந்த செஞ்சியாற்றின் மருங்கில் இன்னும் விரிவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
மண்ணில் புதையுண்டிருக்கும் பழமையான வரலாறுகள் வெளிப்படக்கூடும். செட்டிப்பட்டு உணர்த்தும் செய்தி இதுதான்! 

இன்றைய (12.09.16) தினமலரில் இது செய்தியாகவும் வந்துள்ளது
நன்றி தினமலர்!

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

இந்த வார குங்குமம் இதழில்...



“தேர்ந்த பத்திரிகையாளரின் பங்கு ஒரு போர் வீரன் போன்றது. சூழலுக்குத் தக்கவாறு பணியாற்றுவதும், நல்ல வண்ணம் அந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் சாதாரண வேலையில்லை. அதிலும் வெளியூரில் இருந்து செய்தி சேகரிக்கும் நிருபரின் பணி சுவாரஸ்யங்கள் நிறைந்தது. திடீர் திருப்பங்கள் கொண்டது.
இவ்வளவு செய்திகள் உருவான அத்தனை பின்னணிகளையும் துறுதுறு நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் செங்குட்டுவன்.
சதா நுண்ணுணர்வுடன் வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். அவரின் அனுபவங்கள், செய்தியாளர்களுக்கு கற்றுத்தரும் பாடங்களாகிவிடுகின்றன. ஒரே ஓட்டத்தில் படித்து முடித்துவிடலாம். செய்தி சேகரிப்பின் அத்தனை சூட்சமங்களும் புரிந்துவிடுகிறது. இதழியல் மாணவர்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்குமான புத்தகம்.
பெயர்தான் “பழைய பேப்பர்”.  விஷயங்கள் இன்றைக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியவை தான்.
“பழைய பேப்பர்குறித்தான புத்தக அறிமுகம், குங்குமம் வார இதழில் மேற்கண்டவாறு  பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்கூறு நல்லுலகிற்கு என்னுடைய நூலினை நல்லவண்ணம் அறிமுகப்படுத்தி வைத்த குங்குமம் முதன்மை ஆசிரியர் திரு.தி.முருகன் அவர்களுக்கும், குங்குமம் நிர்வாகத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இத்தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே மகிழ்ச்சிதான்..!

வியாழன், 1 செப்டம்பர், 2016

புத்தகத்தைப் படித்தவர்களுக்கு எழுத நேரமில்லை.



“அரிதுஅரிது நூல்களைப் படிப்பதறிது
அதனினும் அறிது படித்த நூல்கள் குறித்து எழுதுவது.
இப்படித்தான் சொல்லத் தோணுது!

பின்னே பாருங்களேன்,

என்னுடையப் “பழையு பேப்பர்நூல் வெளியிடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது.

வெளியீட்டு விழாவில், முன்னமேயே படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தவர்கள், நூல் குறித்து விலாவாரியாகப் பேசிவிட்டார்கள். மகிழ்ச்சி!  

விழா முடிந்த அடுத்த நாளே தோழர் கார்க்கி உதயன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நூல் குறித்துப் பேசினார். கிழக்குப் பதிப்பகம் திரு.மருதன், “பழைய பேப்பர்குறித்து முகநூலில் சிறு அறிமுகம் செய்து வைத்தார். நண்பர் பாப்பனப்பட்டு வ.முருகன், நூல் வெளியீட்டு விழா குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அப்புறம், விழுப்புரம்தான்!

ஒருசிலருக்கு நானே போன் போட்டுக் கேட்டேன் “வாசிச்சீங்களா?நூலின் சில பகுதிகளைச் சுட்டிக்காட்டினார்கள். உண்மையிலேயே வாசித்துத்தான் இருக்கிறார்கள்.

“பழைய பேப்பர்இதுவரை எப்படியும் குறைந்தப்பட்சம் 200 பேர்களின் கைகளுக்காவதுப் போயிருக்கும். இவர்களில் யாராவது கருத்துச் சொல்வார்கள் என்று பார்க்கிறேன். அப்படி எந்த அதிசயமும் நடக்கவில்லை.

ஒருவேளை எழுதுவதற்கு விருப்பமில்லையோ?

ச்சே ச்சே அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. விருப்பமில்லாமலா விழாவுக்கு வந்தார்கள்? புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கினார்கள்? நண்பர்களின் மீது எப்போதுமே நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான்.

புத்தகத்தைப் படித்தவர்களுக்கு, அதுபற்றி எழுத நேரமில்லை. அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்ன நான் சொல்வது சரிதானே?




அன்புடன்,
கோ.செங்குட்டுவன்.
99 44 622 046.