விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோயில்
வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகியப் பூந்தோட்டம். நடுவே
அந்தணர்களுக்கான அக்ரகாரம். கிழக்கிலும் மேற்கிலும் மேல் மற்றும் கீழ் வன்னியர்
தெருக்கள். வடக்கே பூந்தோட்டம் பாட்டை. மற்றும் பூந்தோட்டம் பெயரிலான மேட்டுத்
தெரு, நெடுந்தெருக்களும் இருக்கின்றன.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் அமைந்திருக்கும் பூந்தோட்டம்
பகுதியைத்தான் சொல்கிறேன். நகரத்தின் ஒருபகுதியாக இருந்தாலும் இன்றும் இந்தப்
பகுதி ஒரு கிராமம்தான். வருவாய்த்துறை ஆவணங்களும் அப்படித்தான் குறிப்பிடுகின்றன.
ஊர் என்றிருந்தால் குளம் இருக்க வேண்டுமே. இருக்கிறதே..!
மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்று நீர் இந்தக் குளத்தை வந்தடைய வழிவகைச்
செய்துள்ளனர்.
இந்தக் குளக்கரையில்தான் ஆதிவாலீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.
கோயிலில், முதலாம் இராசராசன் காலக்க ல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இக்கல்வெட்டுகள் இந்த ஊரை வடகரை பிரம்மதேயம் என்றும், நிருபதுங்க செயந்தாங்கி
சதுர்வேதி மங்கலம் என்றும், ஸ்ரீஜனநாத சதுர்வேதி மங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன.
கோயில் கொண்டுள்ள இறைவன், திருவாலீஸ்வரத்துப் பரமசுவாமி என்று
குறிப்பிடப் பட்டுள்ளார்.
இப்போது, ஆதிவாலீஸ்வரர்க் கோயில் என்றழைக்கப்படுகின்றது.
சோழர்கால கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயிலின்
திருச்சுற்றில் அழகியச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
80களின் இறுதியின் வாலீஸ்வரர்க் கோயில் கல்வெட்டுக்களைப்
படியெடுப்பதற்கு ஆய்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். காரணம், அப்பகுதி
குடியிருப்புகள் கோயிலை நெருக்கிக் கொண்டிருந்ததுதான்.
பின்னர் அந்த ஆக்கிரமிப்புகள் ஒருவாறாக அகற்றப்பட்டன. இப்போது கோயில்
விசாலமாகக் காட்சியளிக்கிறது. சிற்பங்களை இரசிக்கலாம். கல்லெழுத்துக்களையும் வாசிக்கலாம்.
மேலும், கோயில் திருச்சுற்றில் அம்மன் ஆலயம், நாயன்மார்கள்
உருவங்கள், பைரவர், நவக்கிரகங்கள் என ஆலயம்
முழுமைப் பெற்றிருப்பதும் நல்ல முறையில் வளர்ச்சிப் பெற்றிருப்பதும் நமக்கு
மகிழ்ச்சியளிக்கிறது.
எல்லாம் பூந்தோட்டம் மக்களின் உழைப்புதான்.
இன்று (26.11.16) மாலைகூட, சனிப் பிரதோஷம் என்பதால் நல்ல கூட்டம்.
நகரத்தின் பல்வேறு பகுதியினரும் நூற்றுக்கணக்கில் வந்துக் குவிந்திருந்தனர்.