வியாழன், 8 டிசம்பர், 2016

சங்கு ஊதுமா?





இன்றைக்குச் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தச் சம்பவம்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
அப்போது, கண்ணப்பநாயனார் தெருவில் குடியிருந்தோம். இதனால் பெரும்பாலும் நண்பர்களுடன், அருகிலுள்ள நகராட்சிப் பூங்காவில்தான் வாசம்.
ஒருநாள் இரவு 8மணி. திடீரென எங்கள் கூட்டத்துக்கு ஒரு யோசனை. பூங்கா வாட்ச்மேன் வெளியில் இருந்தார்.
அங்கிருந்த அறைக்குள் நுழைந்த நாங்கள், சின்னதாக இருந்த அந்தக் கடிகாரத்தை எடுத்தோம். மணி 9ஆக திருத்தப்பட்டது.
பின்னர் வாட்ச்மேனிடம் சென்று, ‘மணி 9ஆகுது என்ன சங்குப் புடிக்கலியா?கேட்டோம்.
பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடிவந்த அவர், மணி என்ன என்று பார்த்தார். கடிகாரம் 9ஐ காட்டியது. உடனே சங்கை ஒலிக்கச் செய்துவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் பார்க்க வேண்டுமே! ஏகப்பட்டபேர் பூங்காவுக்கு வந்துவிட்டனர்.
‘மணி 8தான் ஆவுது. அதுக்குள்ளே சங்கு போட்டுட்டுயே என்று வாட்ச்மேனிடம் சண்டைப்போடுகின்றனர்.
ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்ந்த அந்த மனிதர், ‘கடிகாரம் பாஸ்டா ஓடியிருக்கு என்று சொல்லி சமாளித்தார்.
உண்மையில் நாங்கள் அப்படி செய்திருக்கக் கூடாதுதான். விளையாட்டுப் புத்தி எங்களை செய்ய வைத்துவிட்டது. பிறகு, வருத்தப்பட்டோம்.
ஆமாம். இப்படித்தான். காலை 9 மணி, பிற்பகல் 12மணி, இரவு 9மணி மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போதும் நகராட்சிப் பூங்காவில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தச் சங்கை விழுப்புரம்வாசிகள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
பல சமயங்களில் நம்முடைய நேரத்தை நமக்கு நினைவூட்டி வந்தது இந்தச் சங்கு.
ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இது, திடீரென தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. நிறுத்திக் கொண்டது என்றுகூட சொல்ல முடியாது. நிறுத்திவிட்டார்கள். அதுதான் உண்மை.
ஒலி மாசடைகிறது என்று காரணம் சொன்னார்கள்.
இப்போதைய வாகனங்களின் ஓயாத இரைச்சலை ஒப்பிடும்போது, பூங்காவில் ஒலித்த சங்கின் ஒலி அப்படி ஒன்றும் பெரிதல்ல.
இந்த சத்தங்களையெல்லாம் அனுமதித்திருக்கும் அரசாங்கம்,

நகராட்சிப் பூங்காவில் இருக்கும் சங்கை மீண்டும் ஒலிக்கச் செய்யலாம்..!  

வெள்ளி, 2 டிசம்பர், 2016

“மனுசங்கடாபாடலுடன் நின்றுவிடலாமா..?





செங்கதிரைப் பாய்ச்சும் சூரியனைச் சுமந்த
அந்த உடல் இப்போது
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்குள் சென்றுவிட்டது!

அவரது எழுத்துக்களைப் போலவே
அவரது உடலும்கூட இந்தச் சமுதாயத்துக்குப் பயன்படும்.

எந்தத் தருணத்திலும் கலங்காத
எங்கள் பழமலய்
இன்குலாப் உடலைப் பார்த்துக்
குலுங்கிக் குலுங்கி அழுதாராம்,
தோழர் இரவி நேற்றிரவுச் சொன்னார்.

அவரதுப் பேனாவைப் போலவே
மரணமும்கூட எல்லோரையும் அசைத்துவிட்டது.

அந்த மகத்தான மக்கள் கவிஞனுக்கு
எழுந்து நின்று வணக்கம் சொல்லுவோம்.

இந்த நேரத்தில் எனக்கு ஒன்று கேட்கத் தோணுது,
பலரும் ஏன் “மனுசங்கடா பாடலுடன் நின்று விடுகின்றனர்?

அந்தப் பாடல் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய கீதம்
என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு காலத்தில் நானும் கிடைக்கும் இடங்களில் எல்லாம்
அதைப் பாடித் திரிந்தவன்தான்.

ஆனாலும் அதையும் தாண்டி...  
மதத்தைக் கடந்து அவர் நடந்து வந்தப் பாதை
மார்க்சீய லெனினிய புரட்சிகர அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டது
இதனால் அவர் எதிர்கொண்ட இன்னல்கள்
ஆனாலும் அந்தக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தது
தோழர் அப்புவின் நினைவாக எழுதிய “ஏதோ ஒருநாள்
உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது “தோண்டிகளுக்கு அவர் விடுத்த வேண்டுகோள்
இராசராசனின் பிம்பத்தை அடித்து நொறுக்கிய “கண்மணி ராஜம்
திமுக அரசு வழங்கிய விருதைத் திருப்பி அளித்தது
அவரது நாடக ஆக்கங்கள்...

இன்னும் எவ்வளவோ விசயங்களை விரிவாகப் பேச வேண்டும்.
இப்போதுப் பேசாவிட்டால் நாம் எப்போது பேசப் போகிறோம்?
அடுத்த டிசம்பர் 1இல் மீண்டும் ஒப்பாரி வைக்கும் போதா?