சனி, 27 ஜூன், 2020

விழுப்புரம் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் காலமானார்

பி.கிருஷ்ணன்.
விழுப்புரத்தில் இவரை “சோடா கடை” கிருஷ்ணன் என்று அழைத்தால் தான் அனைவருக்கும் தெரியும்.

நேரு வீதியில் பல்லாண்டு காலம் இயங்கி வந்த இவரது சோடா கடை அந்தளவிற்கு பிரபலம்.

எம்.ஜி.ஆ.ரின் தீவிர விசுவாசி. விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். மன்றத்தை ஏற்படுத்தியவர்களில் இவரும் குறிப்பிடத்தகுந்தவர்.


1977இல் முதன் முதலாக ஏம்.ஜி.ஆர். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போது, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தவர் பி.கிருஷ்ணன்.

ஆனால், இவரால் ஐந்தாண்டு காலம் அந்தப் பதவியைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. 1980இல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் கிருஷ்ணனும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பணி என்பது மூன்று ஆண்டுகள் தான். ஆனாலும் அதுவும் இவருக்கு நிறைவாக இல்லை.

ஆமாம். 1978இல் நடந்த விழுப்புரம் கலவரமும் இதில் தாழ்த்தப்பட்டவர்கள் 12 பேர் கொல்லப்பட்டதும் மாபெரும் வரலாற்றுச் சோகம்.

அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரை சிலர், அந்தச் சம்பவத்தோடு தொடர்புபடுத்தினர்.

இந்தக் கலவரம் தொடர்பான விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான காலஞ்சென்ற வை.பாலசுந்தரம், “இக்கலவரத்தில் எம்எல்ஏவுக்கும் தொடர்பு இருப்பதாகத்"  தெரிவித்தார்.

ஆனால் குறுக்கு விசாரணையின் போது “தனது வாக்குமூலம் யூகத்தின் அடிப்படையிலானது” எனத் தெரிவித்தார். (மக்கள் குரல் 20.8.1978).


விழுப்புரம் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷனும் தனது அறிக்கையில், எம்எல்ஏவுக்குத் தொடர்பு என்பதை மறுத்தது.

2010ஆம் ஆண்டு, எனது “விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்” நூலுக்காக, கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது பழைய நினைவுகள் குறித்துப் பேசினேன்.

“கலவரம் நடந்த போது நான் புதுச்சேரியில் இருந்தேன். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அவருக்கு அருகிலேயே இருந்தேன். தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்திவிட்டார்கள்” என வருத்தப்பட்டார்.

மேலும், அந்தச் சம்பவம் குறித்து விரிவாகப் பதிவு செய்யும் முயற்சியில் அண்மையில் நான் மீண்டும் ஈடுபட்டேன்.

ஊரடங்கு காலத்தில், ஏப்ரல் 23ஆம் தேதி, காலை 7 மணிக்கு, விழுப்புரம் நாலாயிரம் தெருவில் உள்ள திரு.கிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றேன். “அவர் தூங்குகிறார்” என அவரது மனைவி சொன்னார். காலை 10 மணிக்கு மீண்டும் சென்றேன். அப்போதும் அதே பதில் தான்.

இப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.சோடா கடை கிருஷ்ணன் நிரந்தரமாக உறங்கி விட்டார்.

ஆமாம். நேற்றிரவு அவர் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கி விட்டார்!

செவ்வாய், 23 ஜூன், 2020

விழுப்புரம் காந்தி சிலைக்குக் கீழே...

விழுப்புரத்தில்

பொதுக் கிணறு இருந்த இடம்

எப்படியான மாற்றத்தைப் பெற்றுள்ளது?

"அப்புறம் விழுப்புரம்" சேனலின்
முதல் பதிவு,
பயணம் இனிதே
தொடங்குகிறது!

உங்களின் அன்பான
வாழ்த்துகளுடன்..!

பாருங்கள் நண்பர்களே...

https://youtu.be/vp4MOVMBJmc

ஞாயிறு, 21 ஜூன், 2020

அப்புறம் விழுப்புரம்


விழுப்புரத்தின், விழுப்புரம் மாவட்டத்தின் கலை, இலக்கியம்,  வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை எடுத்துச் சொல்ல இருக்கும் தளம் குறித்தான அறிமுகப் பதிவு இது:


https://youtu.be/O5ncnpJS_GU

வியாழன், 11 ஜூன், 2020

சமணர் கழுவேற்றம்

இன்றைய (11.06.2020) மதுரை பதிப்பு தினமலர் நாளிதழில்...

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்...

நூல் குறித்த அறிமுகம்...



புதன், 10 ஜூன், 2020

விழுப்புரம் இனி Vizhuppuram

விழுப்புரம் - Vizhuppuram
திண்டிவனம் - Thindivanam
செஞ்சி - Senji

ஊர்ப் பெயர்கள்: அரசாணை வெளியீடு!

ஊர்ப் பெயர்கள், தமிழ் உச்சரிப்பில் உள்ளது போன்றே ஆங்கிலத்திலும் அமைய வேண்டும். இது, தமிழக அரசின் கொள்கை முடிவு!

இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்  உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருந்தோம்.


இந்தக் குழுவின் முதல் கூட்டம் 2018 டிசம்பரிலும் இரண்டாவது கூட்டம் 2019 ஜனவரியிலும் நடந்தன.


200க்கும் மேற்பட்ட ஊர்ப் பெயர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதுபற்றிய பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார், அப்போதைய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.

இதன் மீது முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இதுபற்றிய அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.


இதில், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட 40 ஊர்கள் இடம்பெற்று உள்ளன.


இனி, இந்த ஊர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் அழைக்கப்படும்.

மகிழ்ச்சி. மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி!

இதற்கான முன்னெடுப்பில் நம்முடன் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், பாவரசு பாரதி சுகுமாரன், கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருக்கு நம் நன்றிகள்..!