சனி, 27 ஜூன், 2020

விழுப்புரம் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் காலமானார்

பி.கிருஷ்ணன்.
விழுப்புரத்தில் இவரை “சோடா கடை” கிருஷ்ணன் என்று அழைத்தால் தான் அனைவருக்கும் தெரியும்.

நேரு வீதியில் பல்லாண்டு காலம் இயங்கி வந்த இவரது சோடா கடை அந்தளவிற்கு பிரபலம்.

எம்.ஜி.ஆ.ரின் தீவிர விசுவாசி. விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். மன்றத்தை ஏற்படுத்தியவர்களில் இவரும் குறிப்பிடத்தகுந்தவர்.


1977இல் முதன் முதலாக ஏம்.ஜி.ஆர். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போது, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தவர் பி.கிருஷ்ணன்.

ஆனால், இவரால் ஐந்தாண்டு காலம் அந்தப் பதவியைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. 1980இல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் கிருஷ்ணனும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பணி என்பது மூன்று ஆண்டுகள் தான். ஆனாலும் அதுவும் இவருக்கு நிறைவாக இல்லை.

ஆமாம். 1978இல் நடந்த விழுப்புரம் கலவரமும் இதில் தாழ்த்தப்பட்டவர்கள் 12 பேர் கொல்லப்பட்டதும் மாபெரும் வரலாற்றுச் சோகம்.

அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரை சிலர், அந்தச் சம்பவத்தோடு தொடர்புபடுத்தினர்.

இந்தக் கலவரம் தொடர்பான விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான காலஞ்சென்ற வை.பாலசுந்தரம், “இக்கலவரத்தில் எம்எல்ஏவுக்கும் தொடர்பு இருப்பதாகத்"  தெரிவித்தார்.

ஆனால் குறுக்கு விசாரணையின் போது “தனது வாக்குமூலம் யூகத்தின் அடிப்படையிலானது” எனத் தெரிவித்தார். (மக்கள் குரல் 20.8.1978).


விழுப்புரம் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷனும் தனது அறிக்கையில், எம்எல்ஏவுக்குத் தொடர்பு என்பதை மறுத்தது.

2010ஆம் ஆண்டு, எனது “விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்” நூலுக்காக, கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது பழைய நினைவுகள் குறித்துப் பேசினேன்.

“கலவரம் நடந்த போது நான் புதுச்சேரியில் இருந்தேன். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அவருக்கு அருகிலேயே இருந்தேன். தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்திவிட்டார்கள்” என வருத்தப்பட்டார்.

மேலும், அந்தச் சம்பவம் குறித்து விரிவாகப் பதிவு செய்யும் முயற்சியில் அண்மையில் நான் மீண்டும் ஈடுபட்டேன்.

ஊரடங்கு காலத்தில், ஏப்ரல் 23ஆம் தேதி, காலை 7 மணிக்கு, விழுப்புரம் நாலாயிரம் தெருவில் உள்ள திரு.கிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றேன். “அவர் தூங்குகிறார்” என அவரது மனைவி சொன்னார். காலை 10 மணிக்கு மீண்டும் சென்றேன். அப்போதும் அதே பதில் தான்.

இப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.சோடா கடை கிருஷ்ணன் நிரந்தரமாக உறங்கி விட்டார்.

ஆமாம். நேற்றிரவு அவர் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கி விட்டார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக