வெள்ளி, 30 ஜூன், 2023

"ஜிந்தாபாத் செங்குட்டுவன்" - எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்

நெம்புகோல் மற்றும் விழுப்புரம் தமிழியக்கம் அமைப்புகளின் சார்பில், பாவேந்தர் நூற்றாண்டு விழா, 20.05.1990 அன்று விழுப்புரம் ஜோதி திடலில் நடந்தது.


ப.அருளியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இதில் பங்கேற்றனர். உரையரங்கில் என் பெயரும் இடம்பெற்று இருந்தது. 


தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பேசி வந்திருக்கிறேன். ஆனால் மேடையேறுவது, மேடைப்பேச்சு என்பது இதுதான் முதல்முறை...


எந்தத் தயக்கமும் இல்லை: சரளமான உரை. தமிழினப் பகைவர்களைத், துரோகிகளை, அப்போதிருந்த தலைவர்களைக் கடுமையாகச் சாடினேன். இந்தச் சிறுவனின் ஆவேசப் பேச்சை அனைவரும் அமைதியாகக் கேட்டனர்.


பேச்சை முடிக்க வேண்டும். முடிப்பதற்கு முன்பாக, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழங்கினேன். அவ்வளவு தான் அரங்கம் அதிர்ந்தது. சிரிப்பொலியால்!


அவ்வளவு நேரம், தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றெல்லாம் முழங்கியவன், திடீரென “ஜிந்தாபாத்” வேற்று மொழி முழக்கத்தை முழங்கியது தான் ( வேண்டுமானால் “புரட்சி நீடூழி வாழ்க” என்று சொல்லி இருக்கலாம்) அனைவரது நகைப்பிற்கும் இடம்கொடுத்தது.


மேடையில் இருந்த அருளியார் சிரித்துக் கொண்டே என்னைத் தட்டிக் கொடுத்தார். எனக்கோ, பயங்கர வெட்கமாய்ப் போய்விட்டது. ச்சே, முதல் மேடை அரங்கேற்றத்திலேயே இப்படி ஆகிவிட்டதே என்று!


அப்போதிலிருந்து கொஞ்சம் நாள், தோழர்கள் என்னை “ஜிந்தாபாத் செங்குட்டுவன்" என்றே வேடிக்கையுடன் அழைத்து வந்தனர்..!





போராட்டக் களமானது வாழ்க்கை - எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்

1990... ஒரு முக்கியமான ஆண்டு. கலை இலக்கிய அமைப்பான நெம்புகோல், அரசியல் அமைப்பான மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஆகியவற்றில் தீவிர செயலாற்றத் தொடங்கினேன்... என் வாழ்க்கையைப் போராட்டக் களமாக்கினேன்...


போராட்டங்கள், கருத்தரங்கு, பொதுக்கூட்டம் என அந்த ஆண்டில் விழுப்புரத்தில் நிறைய நிகழ்வுகள். அத்தனையிலும் பங்கெடுத்தேன்.


விழுப்புரம் ரயில்வே மேம்பாலப் பணியைத் துரிதப்படுத்தச் சொன்ன போராட்டம், நியாயவிலைக் கடை பணியாளர்களின் தொடர் போராட்டம், பள்ளிகளில் நடக்கும் கட்டாய நன்கொடை எதிர்ப்புப் போராட்டம், பாவேந்தர் நூற்றாண்டு விழா, ஐயா ஆனைமுத்து பங்கேற்ற இட ஒதுக்கீடு ஆதரவு கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளைச் சொல்லலாம்.


குறிப்பாக, ரயில்வே மேம்பாலம் தொடர்பாக அனைத்து அமைப்புகள் பங்கேற்ற தர்ணா போராட்டத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு நெம்புகோல் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.


மஜஇக சார்பில் விழுப்புரம், பனையபுரம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று உரை நிகழ்த்தினேன். போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக விழுப்புரம் நகரில் தொடர்ந்து பல நாட்கள் நிதி திரட்டியதையும் மறக்க முடியாது!


இந்த 90இல் தான் புதுச்சேரி சன்டே மார்க்கெட்டில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டது, விழுப்புரத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்தது போன்ற நிகழ்வுகளும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் அரங்கேறின...





புதன், 28 ஜூன், 2023

என் வாழ்க்கையின் திசை மாற்றத்தின் தொடக்கம் - எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்

8- ம் வகுப்பு வரை மூன்று பள்ளிகளைப் பார்த்துவிட்டு, 9ம் வகுப்புக்கு விழுப்புரம் திரு.காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடியெடுத்து வைத்தேன்.

 

தொடக்கப்பள்ளி ஆசிரியரான என் தந்தையார் திமுக அனுதாபி. பெரியார் பற்றாளர். அவர் மூலமாக எனக்குள் கடவுள் மறுப்புக் கொள்கை கொஞ்சமாக ஊடுருவியிருந்த நேரம்.

 

என் வகுப்புக்கு ஆங்கில ஆசிரியராக வந்த த.பாலு முற்போக்குக் கொள்கை உடையவர். என்னைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். மார்க்சிய நூல்களை வாசிக்கக் கொடுத்தார். புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அவ்வப்போது நடைபெறும் அறைக்கூட்டங்களுக்கும் அழைப்பு வரும். நானும் பங்கேற்று வந்தேன்!

 

இதற்கிடையில் என் வீட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த டான்சி போர்மேன் வைத்திலிங்கம், திக காரர். அவரிடம் நான் நிறைய அரசியல் பேசுவேன்.

 

எப்படியும் இந்தப் பையனை பிடித்துப்போட வேண்டும்என முடிவுசெய்தார். அதில் வெற்றியும் பெற்றார். திக-வில் அரங்க.பார்த்தீபன் போன்ற நண்பர்கள் அறிமுகமானார்கள். நண்பர் வி.ஆர்.ரவிச்சந்திரன், சுயமரியாதை பிரச்சார வெளியீடுகளை தொடர்ந்து என்னிடம் கொடுத்து வாசிக்கச் செய்தார்.

 

மண்டல் அறிக்கை விவகாரம் அரசியல் களத்தில் சூடுபிடித்திருந்த நேரம். ரயில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திக பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கினேன்.

 

தொடர்ந்து, மண்டல் அறிக்கைக்கு ஆதரவாக 1.8.1989 அன்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். வைத்திலிங்கம், அவரது கருப்புச் சட்டையை எனக்குக் கொடுத்தார். தொளதொள வென்று இருந்தது. அணிந்து கொண்டேன். தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். “வயதில்லைஎனும் காரணமாக என் மீது மட்டும் வழக்கு இல்லை. ஆனாலும் தோழர்களுடன் நாள் முழுவதும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இருந்தேன்.

 

கல்லூரிக்குச் சென்றிருக்க வேண்டும். கனாக்கால அனுபவங்களை இரசித்திருக்க வேண்டும். ஆனால் காவல் நிலையம் நோக்கி சென்றேன்.

 

என் வாழ்க்கையின் திசை மாற்றத்தின் தொடக்கம் இது...