வியாழன், 8 டிசம்பர், 2016

சங்கு ஊதுமா?





இன்றைக்குச் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தச் சம்பவம்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
அப்போது, கண்ணப்பநாயனார் தெருவில் குடியிருந்தோம். இதனால் பெரும்பாலும் நண்பர்களுடன், அருகிலுள்ள நகராட்சிப் பூங்காவில்தான் வாசம்.
ஒருநாள் இரவு 8மணி. திடீரென எங்கள் கூட்டத்துக்கு ஒரு யோசனை. பூங்கா வாட்ச்மேன் வெளியில் இருந்தார்.
அங்கிருந்த அறைக்குள் நுழைந்த நாங்கள், சின்னதாக இருந்த அந்தக் கடிகாரத்தை எடுத்தோம். மணி 9ஆக திருத்தப்பட்டது.
பின்னர் வாட்ச்மேனிடம் சென்று, ‘மணி 9ஆகுது என்ன சங்குப் புடிக்கலியா?கேட்டோம்.
பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடிவந்த அவர், மணி என்ன என்று பார்த்தார். கடிகாரம் 9ஐ காட்டியது. உடனே சங்கை ஒலிக்கச் செய்துவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் பார்க்க வேண்டுமே! ஏகப்பட்டபேர் பூங்காவுக்கு வந்துவிட்டனர்.
‘மணி 8தான் ஆவுது. அதுக்குள்ளே சங்கு போட்டுட்டுயே என்று வாட்ச்மேனிடம் சண்டைப்போடுகின்றனர்.
ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்ந்த அந்த மனிதர், ‘கடிகாரம் பாஸ்டா ஓடியிருக்கு என்று சொல்லி சமாளித்தார்.
உண்மையில் நாங்கள் அப்படி செய்திருக்கக் கூடாதுதான். விளையாட்டுப் புத்தி எங்களை செய்ய வைத்துவிட்டது. பிறகு, வருத்தப்பட்டோம்.
ஆமாம். இப்படித்தான். காலை 9 மணி, பிற்பகல் 12மணி, இரவு 9மணி மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போதும் நகராட்சிப் பூங்காவில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தச் சங்கை விழுப்புரம்வாசிகள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
பல சமயங்களில் நம்முடைய நேரத்தை நமக்கு நினைவூட்டி வந்தது இந்தச் சங்கு.
ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இது, திடீரென தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. நிறுத்திக் கொண்டது என்றுகூட சொல்ல முடியாது. நிறுத்திவிட்டார்கள். அதுதான் உண்மை.
ஒலி மாசடைகிறது என்று காரணம் சொன்னார்கள்.
இப்போதைய வாகனங்களின் ஓயாத இரைச்சலை ஒப்பிடும்போது, பூங்காவில் ஒலித்த சங்கின் ஒலி அப்படி ஒன்றும் பெரிதல்ல.
இந்த சத்தங்களையெல்லாம் அனுமதித்திருக்கும் அரசாங்கம்,

நகராட்சிப் பூங்காவில் இருக்கும் சங்கை மீண்டும் ஒலிக்கச் செய்யலாம்..!  

வெள்ளி, 2 டிசம்பர், 2016

“மனுசங்கடாபாடலுடன் நின்றுவிடலாமா..?





செங்கதிரைப் பாய்ச்சும் சூரியனைச் சுமந்த
அந்த உடல் இப்போது
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்குள் சென்றுவிட்டது!

அவரது எழுத்துக்களைப் போலவே
அவரது உடலும்கூட இந்தச் சமுதாயத்துக்குப் பயன்படும்.

எந்தத் தருணத்திலும் கலங்காத
எங்கள் பழமலய்
இன்குலாப் உடலைப் பார்த்துக்
குலுங்கிக் குலுங்கி அழுதாராம்,
தோழர் இரவி நேற்றிரவுச் சொன்னார்.

அவரதுப் பேனாவைப் போலவே
மரணமும்கூட எல்லோரையும் அசைத்துவிட்டது.

அந்த மகத்தான மக்கள் கவிஞனுக்கு
எழுந்து நின்று வணக்கம் சொல்லுவோம்.

இந்த நேரத்தில் எனக்கு ஒன்று கேட்கத் தோணுது,
பலரும் ஏன் “மனுசங்கடா பாடலுடன் நின்று விடுகின்றனர்?

அந்தப் பாடல் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய கீதம்
என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு காலத்தில் நானும் கிடைக்கும் இடங்களில் எல்லாம்
அதைப் பாடித் திரிந்தவன்தான்.

ஆனாலும் அதையும் தாண்டி...  
மதத்தைக் கடந்து அவர் நடந்து வந்தப் பாதை
மார்க்சீய லெனினிய புரட்சிகர அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டது
இதனால் அவர் எதிர்கொண்ட இன்னல்கள்
ஆனாலும் அந்தக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தது
தோழர் அப்புவின் நினைவாக எழுதிய “ஏதோ ஒருநாள்
உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது “தோண்டிகளுக்கு அவர் விடுத்த வேண்டுகோள்
இராசராசனின் பிம்பத்தை அடித்து நொறுக்கிய “கண்மணி ராஜம்
திமுக அரசு வழங்கிய விருதைத் திருப்பி அளித்தது
அவரது நாடக ஆக்கங்கள்...

இன்னும் எவ்வளவோ விசயங்களை விரிவாகப் பேச வேண்டும்.
இப்போதுப் பேசாவிட்டால் நாம் எப்போது பேசப் போகிறோம்?
அடுத்த டிசம்பர் 1இல் மீண்டும் ஒப்பாரி வைக்கும் போதா?
 

சனி, 26 நவம்பர், 2016

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோயில்



வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகியப் பூந்தோட்டம். நடுவே அந்தணர்களுக்கான அக்ரகாரம். கிழக்கிலும் மேற்கிலும் மேல் மற்றும் கீழ் வன்னியர் தெருக்கள். வடக்கே பூந்தோட்டம் பாட்டை. மற்றும் பூந்தோட்டம் பெயரிலான மேட்டுத் தெரு, நெடுந்தெருக்களும் இருக்கின்றன.




விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் அமைந்திருக்கும் பூந்தோட்டம் பகுதியைத்தான் சொல்கிறேன். நகரத்தின் ஒருபகுதியாக இருந்தாலும் இன்றும் இந்தப் பகுதி ஒரு கிராமம்தான். வருவாய்த்துறை ஆவணங்களும் அப்படித்தான் குறிப்பிடுகின்றன.  


ஊர் என்றிருந்தால் குளம் இருக்க வேண்டுமே. இருக்கிறதே..! மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்று நீர் இந்தக் குளத்தை வந்தடைய வழிவகைச் செய்துள்ளனர்.
இந்தக் குளக்கரையில்தான் ஆதிவாலீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.


கோயிலில், முதலாம் இராசராசன் காலக்க ல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் இந்த ஊரை வடகரை பிரம்மதேயம் என்றும், நிருபதுங்க செயந்தாங்கி சதுர்வேதி மங்கலம் என்றும், ஸ்ரீஜனநாத சதுர்வேதி மங்கலம் என்றும்   குறிப்பிடுகின்றன.

கோயில் கொண்டுள்ள இறைவன், திருவாலீஸ்வரத்துப் பரமசுவாமி என்று குறிப்பிடப் பட்டுள்ளார்.

இப்போது, ஆதிவாலீஸ்வரர்க் கோயில் என்றழைக்கப்படுகின்றது.

சோழர்கால கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயிலின் திருச்சுற்றில் அழகியச் சிற்பங்களும் காணப்படுகின்றன.


80களின் இறுதியின் வாலீஸ்வரர்க் கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுப்பதற்கு ஆய்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். காரணம், அப்பகுதி குடியிருப்புகள் கோயிலை நெருக்கிக் கொண்டிருந்ததுதான்.

பின்னர் அந்த ஆக்கிரமிப்புகள் ஒருவாறாக அகற்றப்பட்டன. இப்போது கோயில் விசாலமாகக் காட்சியளிக்கிறது. சிற்பங்களை இரசிக்கலாம். கல்லெழுத்துக்களையும் வாசிக்கலாம்.

மேலும், கோயில் திருச்சுற்றில் அம்மன் ஆலயம், நாயன்மார்கள் உருவங்கள், பைரவர், நவக்கிரகங்கள் என  ஆலயம் முழுமைப் பெற்றிருப்பதும் நல்ல முறையில் வளர்ச்சிப் பெற்றிருப்பதும் நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

எல்லாம் பூந்தோட்டம் மக்களின் உழைப்புதான்.

இன்று (26.11.16) மாலைகூட, சனிப் பிரதோஷம் என்பதால் நல்ல கூட்டம். நகரத்தின் பல்வேறு பகுதியினரும் நூற்றுக்கணக்கில் வந்துக் குவிந்திருந்தனர்.

புகைப்படங்களும் அப்போது எடுக்கப்பட்டதுதான்..!    

சனி, 19 நவம்பர், 2016

சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் இன்று (19.11.16) என்னை அதிர வைத்த காட்சிகள்தான்



மாநிலத்தின் தலைநகராம், சென்னை மாநகரம் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், மாநகரின் பாதாளச் சாக்கடைகள் இன்னமும் மனிதர்களைக் கொண்டுதான் சுத்தம் செய்யப்படுகிறது. சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் இன்று (19.11.16) காலை என்னை அதிர வைத்த காட்சிகள்தான், உங்கள் பார்வைக்குப் புகைப்படங்களாக...    



வெள்ளி, 4 நவம்பர், 2016

கிளியூர் மலையமான்கள்

திருமுடிக்காரி. திருக்கோலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிநடத்திய மலைய மன்னன்.

முள்ளூரில் இவனை எதிர்த்த ஆரிய மன்னர் பலர், இவனது ஒரே வேல் படைக்கு அஞ்சி ஓடினார்கள் என்பதை நற்றிணைப் பாடல் (170) ஒன்று கீழ்க்காணும் வகையில் புகழ்ந்துப் பேசுகிறது:

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு   

காரியின் வழித்தோன்றல்கள், திருக்கோலூரையும் சுற்றுவட்டப் பகுதிகளையும் வழிநடத்தினர். இம்மலையமான்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் கிளியூர் மலைய மான்களாவர்.

இவர்கள் குறித்து ஆய்வறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (நூல்: பிற்கால சோழர் சரித்திரம்) தரும் தகவல்கள் பின்வருமாறு:

கிளியூர் மலையமான்கள் முதற்குலோத்துங்கச் சோழன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். இவர்கள் தென்னார்க்காடு ஜில்லாவில் அதன் வடமேற்குப் பகுதியாய் அமைந்திருந்த சேதி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். மலையமான் மரபினர். இவர்கள் வழிவழி ஆண்டு வந்தமை பற்றி அந்நாடு மலையமான் நாடு எனவும் மலாடு எனவும் வழங்கப்பட்டு வந்தது உணரற்பாலது.

இவர்கள் சேதிராயர் எனும் பட்டமுடையவர்கள். கிளியூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர்கள். குலோத்துங்கச் சோழனது ஆட்சி காலத்தில் சேதி நாட்டிலிருந்து அரசாண்ட சிற்றரசர்கள்.

கிளியூர் மலையமான் பெரிய உடையானான இராசராச சேதிராயன், சந்திரன் மலையனான இராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுல ராசன், சூரியன் மரவனான இராசேந்திர சோழ மலையகுல ராசன், சூரியன் பிரமன் சகாயனான மலையகுல ராசன்.

இவர்களில் இறுதியில் குறிப்பிடப்பெற்ற மூவரும் உடன்பிறந்தாராகவும் இராசேந்திர சோழ மலையமானுக்கு நெருங்கிய தொடர்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.

இவர்கள் எல்லோரும் குலோத்துங்கச் சோழனது ஆட்சியின் முற்பகுதியில் இருந்தவராவர். இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலிருந்த சேதி நாட்டுச் சிற்றரசன், கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்திமல்லனான இராசேந்திர சோழச் சேதிராயன் என்போன். இவன் திருக்கோவலூரிலுள்ள திருமால் கோயிலுக் கும் சித்தலிங்கமடத்தில் உள்ள சிவன் கோயிலுக்கும் நிவந்தங்கள் அளித்துள்ளான்.

மேலும், இறையூரன் இராசராச சேதிராயன் என்பவனைப் பற்றிச் சொல்லும்போது, ‘குலோத்துங்கனுக்குப் படைத்தலைவனாயிருந்தமையோடு அவன்பால் பேரன்புடையவனாகவும் இருந்தவன் என்கிறார் சதாசிவத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவலூர், சித்தலிங்கமடம் மட்டுமின்றி ஜம்பை, அரகண்ட நல்லூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களிலும் கிளியூர் மலையமான்களின் கொடை குறித்தக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த மலையமான்கள் வன்னிய வகுப்பினர் என்பதற்கானக் கல்வெட்டுச் சான்று இருப்பதாகத் தெரிவிக்கிறது தமிழ் வளர்ச்சி இயக்ககம் வெளியிட்ட ‘தமிழ்நாட்டு வரலாறு வரலாறு சோழ பெருவேந்தர் காலம் எனும் நூல்.

நாட்டின் தலைநகராக இருந்ததோடு, ஆட்சி நடத்தும் தலைவர்களையும் கொடுத்த ஊர் கிளியூர்.


இப்போது, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில், பெரியசெவலை அருகில் சின்னஞ்சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது..! 

வியாழன், 3 நவம்பர், 2016

விழுப்புரத்தின் கோட்டை...

என்னுடைய ‘விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் நூலின் தலைப்புகளில் ஒன்று  மேற்கண்டவாறு அமைந்திருந்தது. இதைப் பார்த்தப் பலருக்கும் ஆச்சரியம். விழுப்புரத்தில் கோட்டை இருந்ததா?
உண்மைதான். ஆச்சரியம் இருக்காதா பின்னே?
‘தென்னிந்தியப் போர்க்களங்கள் எனும் நூலில் 18ஆம் நூற்றாண்டில், ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் ஆட்சியின்போது இருந்ததாக 84 கோட்டைகளைப் பட்டியலிட்டுள் ளார் ஆய்வறிஞர் கா.அப்பாத்துரையார். இந்தப் பட்டியலில் ‘விழுப்புரம் கோட்டை இல்லை.
அப்புறம், எப்படி?
விழுப்புரம் கோட்டைக் குறித்தானக் குறிப்புகளைத் தெரிந்து கொள்ளவேண்டு மென்றால் நாம், புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் ‘டைரியைத்தான் புரட்ட வேண்டும்.
ஆற்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டு 400க்கும் மேற்பட்ட கில்லேதார்கள் ஆட்சி செய்துவந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான், அப்துல் ஜலீல். விழுப்புரம் கில்லேதார். 300 சேவகர்கள் மற்றும் குதிரை, ஒட்டகங்களுடன் விழுப்புரத்தில் கோட்டைக் கொத்தளங்களுடன் 1746வாக்கில் இவரது ஆட்சி நடந்திருக்கிறது.
ஆற்காடு நவாப் அன்வருதீன் மற்றும் அவரது மூத்த மகன் மாபூஸ்கான் ஆகியோருக்கு மிகவும் நெருங்கியவராக இவர் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பெரும்பாலான பாளையக்காரர்கள் மற்றும் கில்லேதார்கள் பிரெஞ்சு அரசுக்கு விசுவாசிகளாக மாறத்தொடங்கினர். ஆனால் விழுப்புரம் கில்லேதார், பிரிட்டி ஷாரின் ஆதரவாளராகவே தொடர்ந்தார்.
இது, அருகிலுள்ள புதுவையை ஆட்சி செய்து கொண்டிருந்த டூப்ளே தலைமையி லான பிரெஞ்சு அரசுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் கில்லேதாரை வீழ்த்த அவர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதற்கான நேரமும் வந்தது. 1750 மார்ச் 21ஆம் தேதி விழுப்புரம் கோட்டையின் மீது பிரெஞ்சுப் படை தாக்குதல் தொடுத்தது. அப்போது கோட்டையில் இருந்த அப்துல் ஜலீலும், சில ஆங்கிலேய வீரர்களும் அவர்களை எதிர்கொண்டனர்.
கடுமையான மோதல். துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. கில்லேதார் தரப்பில் 12 பேர் பலியானார்கள். இறுதியில் பிரெஞ்சுப் படையிடம் வீழ்ந்தது விழுப்புரம் கோட்டை. இந்தச் சண்டையின்போது கில்லேதார் அப்துல் ஜலீல் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பற்றிய தகவல் ஏதுமில்லை.
இதற்கிடையே 1752இல் விழுப்புரம் கோட்டையின் மீது தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ் படை, இக்கோட்டையை தனது வசமாக்கியது.
இப்படியாக வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றின் அடித்தளமாக விளங்கிய விழுப்புரம் கோட்டை 1803இல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டின் மத்தியில், கைலாசநாதர் கோயில் எதிரில் அரவை ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பூமியில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட 2 பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன.
இவை ஒவ்வொன்றும் 18 பவுண்ட் எடையுள்ளதாகும்.
இதில் ஒரு பீரங்கி சென்னை அரசு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொன்று, விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் மேடை அமைக்கப்பட்டு அதன்மீது நிறுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் சரி. கோட்டை- விழுப்புரத்தில் எந்த இடத்தில் இருந்தது?
இதற்கான விடை இன்னும் கிடைத்தபாடில்லை.
விழுப்புரம் பெருமாள் கோயில் தெருவில் ‘கோட்டை விநாயகர் வீற்றிருக்கிறார்.

ஒருவேளை, சித்தேரிக்கரை அல்லது மந்தக்கரைப் பகுதிகளையொட்டி கோட்டை அமைந்திருக்கலாம்....!