புதன், 26 அக்டோபர், 2016

அரச மரம்...

அரச மரம்...
பௌத்தத்துடனும் சைவத்துடனும் மிகுந்தத் தொடர்புடையது.
அரசாணிக்கால் நடுதல்-திருமணத்தின் முக்கியச் சடங்குகளில் ஒன்று.
இதன் பூ, வேர், இலை, பட்டை ஆகியவை மிகுந்த மருத்துவக் குணம் உடையது.
அரச மரத்தைச் சுற்றிவந்து அடிவயிற்றைத் தொட்டுப்பார்-வழக்கத்தில் இருந்துவரும் சொலவடை.
இதுகுறித்து இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நிறைய இருக்குது.
திருவாளர் பண்ருட்டி இரா.பஞ்சவர்ணம் கூட, ‘அரச மரம் எனும் தலைப்பில் ஆய்வு செய்து தனி நூலே வெளியிட்டு இருக்கிறார். வாழ்த்துக்கள்.
நான் இங்குச் சொல்ல வந்தது, நம்ம விழுப்புரம் தெற்கு ஐயனார் குளத்தெருவில் இருக்கும் இரண்டு அரச மரங்களைப் பற்றி.
சிலஅடி தூர இடைவெளியில். நீண்டு உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. எப்படியும் இவற்றின் வயது 50க்கு மேலிருக்கலாம். எப்போதும் சலசலத்துப் பேசிக்கொண்டே இருக்கின்றன. காற்று இவற்றைத் தாலாட்டுவதால்.
இந்த மரங்களின் மகிழ்ச்சிக்குக் காரணம், கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவை, ஆற்றங்கரையில் இருந்தவை. ஐயனார் குளம்தானே இருக்கிறது. ஆறு எங்கே? நீங்கள் கேட்பது புரிகிறது. அவரசப்பட வேண்டாம்.
தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுக்கும் மழைநீரானது, கோலியனூரான் கால்வாய் வழியாக விழுப்புரத்துக்குள் வழிந்தோடி வரும்.
அப்படி வரும் நீரின் ஒரு பகுதி, சிறிய வாய்க்கால் மூலம் நான்குமுனைச் சந்திப்பு, பாகர்ஷா வீதி, மகாத்மா காந்தி வீதி, ஜோதி திடல் வழியாக ஐயனார் குளத்தைச் சென்றடையும்.
குறிப்பாக தெப்பத் திருவிழாவின் போது ‘தப தபவெனக் கொட்டும் நீரின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.
தென்பெண்ணையாற்றின் நீரைச்சுமந்து வருகிறதே அந்தக் கால்வாயின் கரைகளில் தான் இந்த அரச மரங்கள் நின்றிருந்தன.
இப்போது கால்வாய்கள் இல்லை. இந்தக் காரணத்தால் தென்பெண்ணை ஆற்று நீரும் இங்கு வருதவற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் அந்த சந்தோசத்தில் இந்த மரங்கள் நின்றிருக்கின்றன.
ஒரு மரம் டாஸ்மாக் கடையின் வாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு மரம் தனித்தன்மையுடன் நின்றுகொண்டுள்ளது.
இந்த மரம் நன்றாக வேர் விட்டுள்ளது. இங்கு தினமும் தண்ணீர் தெளித்துக் கோலம் போடப்படுகிறது. இதைச் செய்பவர்கள் அங்குள்ள ரிகஷா தொழிலாளக் குடும்பத்தினர்.
பருத்த அந்த மரத்தண்டுக்குக் கீழே, குட்டியானப் பிள்ளையார் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. தினமும் பூ, பொட்டு வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இதற்குப் பிண்ணனியில் பெரிய அரசியல் எதுவும் இருக்கவில்லை.
அரச மரத்தை வழிபடுகிறார்கள். கூடவே, வழக்கமாக அதன் அடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரையும் வைத்துவிட்டார்கள். அவ்வளவுதான்.  

இவர்கள் தங்கள் வேரினை மறக்காதவர்கள்!      


திங்கள், 10 அக்டோபர், 2016

விழுப்புரம் கவுன்சிராக இருந்த எஸ்.இராகவானந்தம்...

எம்.எல்.சி.யாகவும், அமைச்சராகவும் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் எஸ்.இராக வானந்தம். அவரும் அவரது மனைவியும் விழுப்புரம் நகரமன்றத்தில் கவுன்சிலராக இருந்திருக்கின்றனர். இது பலரும் அறிந்திராதத் தகவலாகும்.
உண்மைதான்.
கடலூரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.இராக வானந்தம், 1956இல் விழுப்புரம் கேபின் ஸ்டேஷன் மாஸ்டராக மாறுதலாகி வந்தார். தொடக்கத்தில் விருப்புரம் ரயில்வே காலனியிலும் பின்னர், மருதூர் அக்ரகாரத்திலும் அவரதுக் குடும்பம் வசித்துவந்தது.
மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியான இராகவானந்தம் அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். அனந்தநம்பியார் போன்ற தலைவர்களுடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்தார். அகில இந்திய அளவில் நடந்த ரயில்வே வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற இவர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலையானவுடன் சில நாட்கள் பணியில் இருந்த அவர் பிறகு அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா அவர்களை சந்தித்த இராகவானந்தம் தனது மனைவி மங்கலம்மாளுடன் தி.மு.க.வில் இணைந்து தீவிரஅரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
1964இல் நடந்த விழுப்புரம் நகரமன்றத் தேர்தலில் இராகவானந்தமும் அவரது மனைவி மங்கலம்மாளும் போட்டியிட்டு வெற்றிபெற்று, கவுன்சிலராகப் பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து 1966இல் சென்னைக்குக் குடியேறிய இராகவானந்தம், முழுநேர அரசியலில் ஈடுபட்டதுடன், எம்.எல்.சி., தமிழக அமைச்சர் பொறுப்புகளை வகித்தது அனைவராலும் அறியப்பட்டத் தகவல்களே.
இராகவானந்தம் விழுப்புரத்தில் இருந்த 10 ஆண்டுகள், அவரது சொந்த வாழ்க்கையிலும் அரசியலிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித்தந்தது.

அன்னாரது மகனார் இரா.விடுதலை சென்னைஉயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் களுள் ஒருவராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

வெள்ளி, 7 அக்டோபர், 2016

களையிழந்தக் கலையரங்கம்...


 

விழுப்புரத்தில் அப்போதெல்லாம் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் என்றால், நகராட்சி மைதானம்தான்.
மேடையெல்லாம் போட வேண்டியதில்லை. இருக்கவே இருக்கிறது, நகராட்சிக் கலையரங்கம். அதிலேயே மேடை அமைத்துக் கொள்ளலாம். கிழக்குப் பார்த்த முகம். சென்டிமென்ட் பரவாயில்லை!
இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்டத் தலைவர்கள் பலரும் இந்த மேடையில் உரையாற்றியதாக நினைவு.
மேடையின் முன்புறம் அமர்ந்துத் தலைவர்களின் பேச்சைக் கேட்ட ஆயிரக்கணக் கானவர்களில் நானும் ஒருவன். இதுபோன்ற நினைவலைகள் உங்களுக்குள்ளும்  எழலாம்.
பின்னர் வந்தக் காலங்களில் எல்லாம் மாறியது. மைதானத்தில் எந்த இடத்திலும் அவரவர் வசதிக்கேற்ப மேடையினை அமைத்துக் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய இருப்பை இழந்ததுக் கலையரங்கம். இந்த நிலை ஏற்பட்டு 10, 15 ஆண்டுகளாகியிருக்கும்.
அரசியல் கட்சிகளைப்போல், நகராட்சி நிர்வாகமும்கூட கலையரங்கத்தின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் கைவிட்டது.
இப்போது, விழுப்புரத்தின் பாழடைந்தக் கட்டடங்களில் ஒன்றாக மாறிவிட்டது இக்கலையரங்கம்.
இதனைச் சீரமைக்க வேண்டும் எனும் கோரிக்கை எங்கிருந்தும் எழவில்லை என்பது தான் அதிசயம்.  
நகராட்சி மைதானமே தன் முகத்தை இழந்தபிறகு, கலையரங்கம் களையிழந்ததில் வியப்பில்லை..!      

வியாழன், 6 அக்டோபர், 2016

காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்சம்



விழுப்புரம் ரயில் நிலையம் கடந்த நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை, ரயில்வேயின் முக்கிய கேந்திரங்களில் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. 

இங்கு பரந்துவிரிந்தப் பரப்பளவில் அமைந்திருந்த லோக்கோ ஷெட் இதற்கு முக்கியக் காரணமாகும்.

வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் பயணிக்கும் நீராவி என்ஜின்கள், இங்குவந்துதான் கரி மற்றும் தண்ணீரை நிரப்பிக் கொள்ளும். என்ஜின் ஒரு மார்க்கத்தில் இருந்து இன்னொரு மார்க்கத்திற்கு திருப்புவதற்கு லோக்கோ ஷெட்டுக்குள் எடுத்துச் செல்லப்படும்.

80களின் இறுதியில் நீராவி என்ஜின்களின் பயன்பாடு அற்றுவிட்டப் பிறகு, விழுப்புரம் லோக்கோ ஷெட்டின் முக்கியத்துவமும் மறைந்துவிட்டது. பழைய கட்டடமும், சில தடயங்களும் இதற்கான சாட்சிகளாக இன்றும் நிற்கின்றன.

குறிப்பாக, ரயில் நிலையத்தையொட்டியுள்ள கிழக்குப் பகுதியில் இன்றும் நின்று கொண்டிருக்கின்றன இந்தப் பிரம்மாண்ட, இரும்புத் தூண்கள். இவற்றை கடினமான கான்கிரீட் அடித்தளங்கள் தாங்கியுள்ளன.

என்ஜின்கள் தண்ணீர்ப் பிடிப்பதற்கு இந்தத் தூண்களும், இதில் பொறுத்தப்பட்டுள்ள சட்டங்களும் பயன்பட்டிருக்கலாம்..!

மறைந்துப் போன லோக்கோ ஷெட்டுக்கு மட்டுமல்ல, காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்ச அடையாளங்களாகவும் இவை காட்சித்தருகின்றன.