ஞாயிறு, 10 நவம்பர், 2024

தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த கடலூர் முதுநகர் இல்லத்தில் ...

நேற்றைய (10.11.24) பொழுது இனிய பொழுதாக கழிந்தது கடலூரில்...

விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் மகன் (ஜெயில் வீரன்) வழிப் பெயர்த்திகளான மஞ்சக்குப்பம் ஜான்சிராணி திருநாராயணன், குறிஞ்சிப்பாடி தாரா சூரியமூர்த்தி, விழுப்புரம் சந்திரா முரளி, தீர்த்தான் பாளையம் ஆறுமுகம் ஆகியோர், கடலூர் முதுநகர், சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள தங்களது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.

ஆமாம்; இந்த வீட்டில் தான் அஞ்சலை அம்மாள் அவர்கள் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார்!

ஏராளமான வரலாற்று நினைவுகளைச் சுமந்து நிற்கிறது, சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள இந்த வீடு.

வீரஞ்செறிந்த பெண்மணியை ஈன்றெடுத்த புகழ் மண்ணில், அவர்தம் நேரடி வாரிசுகளுடன் நெருக்கமாக அமர்ந்து உரையாடியது, மனதிற்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

சுண்ணாம்புக்கார தெருவின் பின்புறத்தில் தான் காந்தி பூங்கா அமைந்துள்ளது. பூங்காவின் முகப்பில் அஞ்சலை அம்மாள் அவர்களின் முழு உருவச்சிலை, தமிழ்நாடு அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.

சிலைதான், ஆனாலும் கம்பீரம் குறையாமல் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நல்வாய்ப்பினையும் அவர்தம் குடும்பத்தினர் எனக்கு வழங்கினர். அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்!

விழுப்புரத்தில் இருந்து இவ்வளவு தூரம் என்னை அழைத்துச் சென்று வரலாறு நிகழ்வினை ஏற்படுத்தித் தந்திருக்கும் மகாத்மா காந்தி பாடசாலை நிர்வாகி இரவீந்திரன் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக