சென்னையின் 41ஆவது புத்தகக் காட்சி
நேற்றுடன் நிறைவடைந்தது. எப்படியும் பங்கேற்றுவிட வேண்டும் என ‘வைகை’யைப் பிடித்துப் போய்ச்சேர்ந்தேன்.
பச்சையப்பன் கல்லூரி வாசலிலேயே, சாலையைக் கடக்க என்னுடன் கைகோர்த்தார்,
தோழர் மு.ஞானசூரியன் (திருக்குறளாரின் மகனார்). நேரே கிழக்கு பதிப்பக அரங்குக்குச்
சென்றோம். ‘கூவம் அடையாறு பக்கிங்காம்’ நூலினைத்
தேடிப்பிடித்து எடுத்த ஞானசூரியன், அதில்
கையெழுத்திட்டுக் கொடுக்கச் சொன்னார். கூச்சத்துடன் கையெழுத்திட்டேன்.
அரங்கத்தில் இருந்த எழுத்தாளர்கள் மருதன், ஹரன்பிரசன்னா ஆகியோருடன்
கலகலப்பான ஒரு சந்திப்பு. புத்தகக் கண்காட்சிகள், பதிப்பாளர்கள், வாசகர்கள்,
எழுத்தாளர்கள் குறித்தான விசயங்கள், கும்பகோணம் டிகிரி காப்பியின் ஊடாகப்
பரிமாறிக்கொள்ளப்பட்டன.
அரங்கங்களைச் சுற்றிவந்தபோது, அந்த ஆளுமையை, எழுத்தாளர்-கவிஞர்-ஓவியர்-விமர்சகர் எனும் பன்முகத் தன்மைக்கொண்ட, இந்திரன் அவர்களைச்
சந்தித்தேன். ஒருவகையில் அவர் விழுப்புரம்வாசிதான். 1980களின் இறுதியில் விழுப்புரம் வங்கியில் பணியாற்றியபோது, இங்குள்ள
முற்போக்குச் சக்திகளுக்கு நன்கு அறிமுகமானவர்.
அரங்கத்தில் சந்தித்தபோது என்னுடைய ‘பழைய
பேப்பர்’ நூலினை அவரிடம் கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட இந்திரன்,
“இதே பெயரில் எழுத்தாளர் ஞானியும் ஒரு புத்தகம் எழுதியிருக்கார்” என்றார். புதிய தகவல்.
எழுத்து, ஓவியம், சிற்பம், அருங்காட்சியகம், தலித்
எழுத்தாளர்கள் என இந்திரன் அவர்களுடனானக் கலந்துரையாடல் நீண்டுக்கொண்டேச் சென்றது.
அப்போதுதான் நான் கேட்டேன், “தமிழ்
எழுத்தாளர்களுக்குப் பதிப்பகத்தார் கொடுப்பதாகச் சொல்லும் ராயல்டி என்பது பெரிய
பிரச்சனை. ஆனால், பெரும்பாலான எழுத்தாளர்கள் இதை பிரச்சனையாகவே நினைப்பதில்லையே?”
இதற்கு இந்திரனிடம் இருந்துப் பட்டென்று பதில் வந்தது. “தமிழ்
எழுத்தாளர்களுக்கு முதுகெலும்பில்லை. ‘நான்
உழைத்திருக்கிறேன். எனக்கானப் பணத்தைக் கொடு’ எனப் பதிப்பகத்தாரிடம்
போராட இவர்கள் தயாராக இல்லை. பதிப்பாளர்கள் காரில் போவதும், எழுத்தாளர்கள் பஸ்சில்
போவதுமான அவலம் இங்கதாங்க இருக்கு” என்றார் வேதனையுடன்.
இந்திரனின் இந்த பதில் குறித்து நான்
மட்டுமல்ல, எழுத்தை மூலதனமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் அனைவருமே யோசிக்க
வேண்டும்!