‘இன்னும் கொஞ்ச
நாள்லப் பாருங்க, ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டால், இந்தத் தண்ணீரில் தெளிவாத்
தெரியும்’.
1996இல்
அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், விழுப்புரத்தில் கோலியனூரான்
கால்வாய்ச் சீரமைப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசியது இன்னமும் நினைவில்
நிற்கிறது.
பணிகள் முடிந்தப்
பிறகு, யாராவது ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிட்டார்களா? அது தெளிவாகத்
தெரிந்ததா? எனும் விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.
ஆனாலும்கூட, கால்வாயில் ஆக்கிரமிப்புகள்
அகற்றப்பட்டு, முழு அளவில் சீரமைப்புப் பணிகள் நடந்தன என்பது உண்மைதான்.
கோலியனூரான் கால்வாயின் கரைகள், மாட்டு
வண்டிகள் செல்லுமளவுக்கு அகலமாக இருக்குமாம். என் தந்தையார் சொல்ல, நான் கேட்டது.
விழுப்புரம் பூந்தோட்டம், சாலாமேடு,
மருதூர் உள்ளிட்ட 6 ஏரிகளுக்குத் தென்பெண்ணையாற்றின் தண்ணீரை முகர்ந்துச் சென்ற,
கோலியனூரான் கால்வாய் அப்போது, ஊருக்கு அழகாய்த்தான் இருந்திருக்கும்.
காலங்கள் மாறின. ஆக்கிரமிப்புகள்
தலைதூக்கின. கரைகள் சுருங்கின. கால்வாய் கழிவுநீர்
சாக்கடையாய்ப் போனது. விழுப்புரத்தின் கூவமாய் ஆனது, கோலியனூரான் கால்வாய்.
இந்த நிலையில்தான், 1996 திமுக ஆட்சியில்
இதன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரவேற்கப்பட்ட, பாராட்ட
நடவடிக்கைதான்..!
கால்வாய், பொதுப்பணித்துறையின்
கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் பராமரிப்பை விழுப்புரம் நகராட்சி மேற்கொள்கிறது.
கட்டுப்பாடும் இல்லை... பராமரிப்பும்
இல்லை... மீண்டும் ஆக்கிரமிப்புகள். பழைய நிலைமைக்கேச் சென்றது, கோலியனூரான்
கால்வாய்.
ஏறக்குறைய, பதினெட்டு ஆண்டுகளுக்குப்
பிறகு, இந்தக் கால்வாய்க்கு இப்போது மீண்டும் விமோசனம் பிறந்துள்ளது. தனலட்சுமி
கார்டன் துவங்கி, சீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
கோலியனூரான் கால்வாய் இப்போது அகலமாகவும்,
ஆழமாகவும் காட்சியளிக்கிறது. மகிழ்ச்சிதான். வரவேற்போம்... பாராட்டுவோம்...
மீண்டும் மீண்டும் நம் நினைவுக்கு வருவது
கட்டுப்பாடும், பராமரிப்பும்தான். அது, இல்லாவிட்டால், இந்தப் பணிகள் அனைத்தும்
வீண்தான்.
தொடர்புடைய அரசுத் துறைகளும்,
ஆட்சியாளர்களும் இதனை கவனத்தில் கொள்வார்கள் என நம்புகிறோம்..!
(இணைப்பில் இருக்கும் பழைய படங்கள்
(தனலட்சுமி கார்டன் பகுதி) 2016ஆம் ஆண்டின் இறுதியிலும், புதிய படங்கள் (அதே
பகுதியில்) கடந்த சில நாள்களுக்கு முன்பும் எடுக்கப்பட்டவை)