புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரி மாணவர்களுடன் அண்மையில், தொல்லியல்
பயணம் மேற்கொண்டோம் அல்லவா? காலையில் கீழ்வாலையில் தொடங்கியப் பயணம், மாலை, செஞ்சி
அருகே உள்ள சிங்கவரத்தில் நிறைவுற்றது.
பள்ளிகொண்டுள்ள அரங்கநாதரை தரிசிக்க, மலைமீது ஏறிச்சென்றோம். பூசையில்
ஈடுபட்டிருந்த பட்டாச்சார்யார், இளையவர். தமிழிலேயே அருச்சனை செய்தார். வந்திருந்த
அனைவருக்கும் மகிழ்ச்சி!
அடுத்துத் தல வரலாறு சொன்னார். அப்போது, ‘சிங்கவரம் அரங்கநாதர்
ஆண்டுக்கு ஒருமுறை அருகிலுள்ள மேலச்சேரிக்கு எழுந்தருளுகிறார். அங்கு அமைந்துள்ள
ராஜா தேசிங்கின் ஜீவ சமாதிக்குச் சென்று வருகிறார்’ என்றார்.
ராஜா தேசிங்குக்கு ஜீவ சமாதியா? நான் புருவத்தை உயர்த்தினேன்.
பூசை எல்லாம் முடிந்த பிறகு, பட்டாச்சார்யரை நெருங்கினேன்.
‘தல வரலாற்றில் நீங்கள் சொன்னது சரிதான்.
ஆனால், ராஜாதேசிங்கு இறந்தது, வளத்தி சாலையில் அமைந்துள்ள கடலி என்ற இடத்தில். அவர்
உடல் தகனம் செய்யப்பட்டது, செஞ்சிக் கோட்டைக்குள். இதில், எங்கிருந்து வந்தது அவர்
ஜீவ சமாதி? அதுவும் மேலச்சேரியில்?’ என்று
பட்டாச்சார்யரைக் கேட்டேன்.
அந்த இளைஞரோ, ‘சார் நான் இந்தக் கோயிலுக்கு
வந்து நான்கைந்து மாதங்கள்தான் ஆகிறது.
நாமக்கல் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு இந்தப் பகுதியைப் பத்தி
அவ்வளவா தெரியாது, எனக்கு முன்பு இருந்தவர்கள் என்னிடம் சொல்லி விட்டுப்
போனதைத்தான் நான், வருகிறவர்களிடம் சொல்கிறேன். நீங்கள் சொல்லும் விவரங்கள்
குறித்து மேற்கொண்டு நானும் தெரிந்து கொள்கிறேன் சார்’
என்றார்.
பரவாயில்லை. உண்மையை
ஒத்துக்கொண்டார். எனக்கு மகிழ்ச்சிதான்.
சரி, பிறகு எதற்கு
சிங்கவர அரங்கநாதர் மேலச்சேரி சென்று வருகிறார்?
சிங்கவரத்துக்கு
அடுத்துள்ள இந்தக் கிராமத்தில் பல்லவர் காலக் குடைவரை (சிகாரி பல்லவேசுரம்)
அமைந்துள்ளது. இக்குடைவரைக்கு அருகில் சாவடி மண்டபம் என்றழைக்கப்படும் கல் மண்டபம்
ஒன்று இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில், சிங்கபுரத்து அரங்கநாருக்காக கட்டப்பட்ட
தீர்த்தக்கரை மண்டபம் என்கிறது இங்குள்ள கல்வெட்டு.
இதன்படி, சிங்கவரக்
கோயில் உற்சவர், தை அமாவாசையில் மேலச்சேரிக்கு எழுந்தருள்வதாகத் தெரிவிக்கிறார்கள்,
ஆய்வாளர் இரா.கலைக்கோவன், மு.நளினி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக