1980களின் இறுதி. தமிழீழ விவகாரம் தமிழக இளைஞர்களிடையே
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நேரம் அது. தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும்
அமைப்புகளும் தீவிரமாகக் களப்பணியாற்றிக் கொண்டிருந்தன.
அப்போது நான்,
மார்க்சிய லெனினிய அமைப்பில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், தமிழின விடுதலைக்காகப்
போராடும் அமைப்பினரிடமும் தொடர்பில் இருந்தேன்.
தமிழ்நாடு இளைஞர்
மற்றும் மாணவர் பேரவை இங்குக் குறிப்பிடத்தகுந்தது. இந்த அமைப்பினைச் சேர்ந்தத்
தோழர்கள் பலரும் அவ்வப்போது என்னைப் போன்றவர் களை விழுப்புரத்தில் சந்தித்துப்
பேசி வந்தனர். பெரும்பாலும் இவை, இரகசிய சந்திப்புகளாகவே இருக்கும்.
அப்படி அறிமுகமானத்
தோழர்களில் ஒருவர்தான், புதுவை கோ.சுகுமாரன். எத்தனை நாள், எத்தனைமுறை
சந்தித்திருப்போம் என்றெல்லாம் தெரியாது. பல்வேறு இடங்களில் நடந்தப் பொதுநிகழ்ச்சிகளிலும்
பங்கேற்று இருக்கிறோம்.
தோழர் சுகுமாரன்
போன்றவர்களின் தோழமையின் விளைவாக, தமிழ்நாடு விடுதலைக் குறித்தானச் சிந்தனையும்
என்னுள் எழுந்தது.
காலங்கள் உருண்டோடின.
என் கவனம் பத்திரிகைத்துறையின் மீது சென்றது. முழு நேரப் பத்திரிகையாளனாகவும்
ஆனேன். தோழர் சுகுமாரன், மனித உரிமை ஆர்வலராக தமிழகம் முழுதும் அறியப்பட்டார். எங்களுக்கு
இடையிலான சந்திப்பு எப்போதாவதுதான்.
இந்த நிலையில்தான்,
கடந்த வாரம் நடந்த வரலாற்றுப் பயணத்தில், ஆண்டுகள் பல கடந்த நிலையில் நாங்கள்
சந்தித்துக் கொண்டோம். கீழ்வாலையில், கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.
இனிய சந்திப்பு. அப்போதெல்லாம்
துடிப்புமிக்க இளைஞர்கள். இப்போதும் எங்களது சிந்தனை இளமையாக இருப்பதாக ஒரு
நினைப்பு!
இதனை, உங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோசம்தான், நண்பர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக