வியாழன், 30 டிசம்பர், 2021

மகான் படேசாயபு - சின்னபாபு சமுத்திரம்

 விழுப்புரம் புதுவை சாலையில் கண்டமங்கலம். இங்கு இருக்கும் சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையம். இங்க இருந்து 2 கிமீ போனால் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை அடையலாம். 

அழகான அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது. 

இதோ… மகான் படே சாயபு ஆலயம்.. சித்தர் பீடம்.

மகான் படே சாயபு.. இவர் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

மெளனம் தான் இவரது மொழி. விபூதியே இவர் தரும் பிரசாதம். 

இவரும் இவரது அன்பும் ஆற்றலும் புதுவை சுற்றுவட்டப் பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயம். 

சித்தராக நின்று இவர் செய்த சித்துக்கள் ஏராளம்.. ஏராளம்..

ராமரெட்டிக்குளம், மண்டகப்பட்டு, பண்ணக்குப்பம் திருக்கனூர் சின்னபாபு சமுத்திரம் உள்ளிட்டப் பகுதிகள் இன்றும் இவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பேசி வருகின்றன.

தன்னைத் தீண்டிய நாகத்திற்கே மோட்சம் அளித்தவர் என்பதால் மகானாக மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

மகான் படே சாயபு இசுலாமியர் தான். ஆனாலும் சிவனியத்தைத் தம்முள் ஏற்றுக் கொண்டவர்.

இமயமலை அடிவாரத்தில் புதைந்திருந்த உளிபடாத கல்லினை தன் கைகளால் தொட்டு இலிங்கமாக உருப்பெறச் செய்ததாக நம்பப்படுகிறது.

இசையின் மீது ஈடுபாடு கொண்டவர். கையில் தும்புரு எனும் இசைக் கருவியை ஏந்தி இருக்கிறார். இந்த இடத்தில் வீணாதார தட்சிணாமூர்த்தி நம் நினைவுக்கு வருகிறார்.

மகான் படே சாயபு சின்னபாபு சமுத்திரத்தில் வாசம் செய்தார். இங்கிருக்கும் மகிட மரத்தடி தான் இவரது ஞான ஸ்தலம். 

மகான் படே சாயபு 1868 பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார். 

பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் அவரது ஜீவ சமாதியை இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். 

மகானின் மூச்சுக் காற்று இன்றும் உலவுகிறது… அவரது அருளாசி இன்றும் தொடர்கிறது.. மக்கள் மனதில் இருக்கும் ஆழமான நம்பிக்கை. 

மேலும் விரிவான தகவல்களுக்கு... 

https://youtu.be/XcNMlZlDH0s

செவ்வாய், 7 டிசம்பர், 2021

மரக்காணம் கழுவெளி - பறவைகள் சரணாலயம்..

 விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் னு சொன்னதுமே நம்ம எல்லாருக்கும் நினைவுக்கு வர்றது இங்க இருக்கும் உப்பளங்கள் தான். தமிழ்நாட்டுல தரமான உப்பு உற்பத்திக்குப் பேர் போனது மரக்காணம் உப்பு.


ஆனால் மரக்காணத்தில் இன்னொரு அதிசயம் இயற்கை அதிசயம் இருக்கு. அதுதான் இயற்கையாக அமைந்த சதுப்பு நிலக்காடுகள்.

பரந்து விரிந்து காட்சி தரும் பக்கிங்காம் கால்வாய். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 400 கிமீ பயணித்து மரக்காணம் வந்தடையும் பக்கிங்காம் கால்வாய் தனது 3 வது கட்ட பயணத்தை இங்க இருந்து தான் தொடங்குது.

கிழக்கே வங்கக் கடல். வடக்கே பக்கிங்காம் கால்வாய். இவற்றின் அருகில் இருப்பதுதான் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநிலக் காடுகள்.. ஈரநிலம்.



தமிழ்நாட்டில் பழவேற்காடு அடுத்தபடியா மிகப்பெரிய சதுப்பு நிலப் பகுதியாக இருப்பது மரக்காணம் சதுப்பு நிலக்காடுகள்.

இந்த பகுதிக்கு இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல சைபீரியா ஆஸ்திரேலியா ரஷ்யா தாய்லாந்து இலங்கை ன்னு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பறவைகள் வந்து போகுதாம்.

பிளமேன்கோ ஓப்பன் பீல்டு பெலிகான் ஸ்டோக் னு பறவைகளின் பெயர்களைச் சொல்லிகிட்டே போகலாம்.

இதனால் மரக்காணம் பகுதியில பறவைகள் சரணாலயம் அமைக்கணும் அப்படி ங்கறது இந்தப் பகுதி மக்களோடு நீண்ட நாள் கோரிக்கை.. கனவு.

கழுவெளி எனப்படும் இந்தப் பகுதியில் இருக்கும் சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு 7 ஆயிரத்து 422 ஏக்கர். இதுல 4 ஆயிரத்து 220 ஏக்கர் தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

ஆனால் இந்தப் பரப்பளவு 600 சதுர கிலோமீட்டரில் இருந்து 75 சதுர கிலோமீட்டராக குறைஞ்சிடுச்சுன்னு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கு.

காரணம் இங்கு ஏற்பட்டு வரும் ஆக்கிரமிப்புகள்.


இவற்றில் இருந்து எல்லாம் இந்தக் கழுவெளி பகுதி மீட்கப்படணும் இங்க பறவைகள் சரணாலயம் அமைக்கணும் அப்படி ங்கறதுக்காக நண்பர் சர்வேஷ் குமார் போன்றவர்கள் தொடர் முயற்சி நடவடிக்கைகள்ல ஈடுபட்டு வந்தாங்க.

 

போன அதிமுக அரசாங்கத்தில் கூட வானூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்ரபாணி அவர்கள் இந்தக் கோரிக்கையை சட்டமன்றத்தில் வைச்சாரு.

 

மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பிலும் சொன்னாங்க.

 

இப்போது அது வடிவம் பெற்று இருக்கு.

 

ஆமாம் ங்க.

 

வானூர் மற்றும் மரக்காணம் பகுதிகளில் இருக்கும் கழுவெளி ஈர நிலம் உள்ளிட்ட 12 ஆயிரத்து 729 ஏக்கர் நிலத்தை பறவைகள் சரணாலயம் ஆக அறிவிக்கப்பட்டு இருக்கு. இதற்கான அரசாணையை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் நேற்று அதாவது 6.12.2921 அன்று வெளியிட்டு இருக்காங்க.

 

இந்த வகையில் தமிழ்நாட்டின் 16 வது பறவைகள் சரணாலயம் ஆக மரக்காணம் பறவைகள் சரணாலயம் அமையுது.

 

தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்த ஆணை பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பாக இருக்கும் னு மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்து இருக்கார்.

 

விழுப்புரம் மாவட்டத்தின் நீண்ட நாள் கனவு நனவானது. நமக்கும் மகிழ்ச்சி தான்.

 

இருக்கும் ஈர நிலம் சதுப்புநிலக் காடுகள் பாகாக்கப்படும் அப்படிங்கற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கு.

 

இது தொடர்பான காணொளி பதிவுக்கு.. 

https://youtu.be/vaHn-g1DcnI