கண்டேன்… கண்டேன்… கோப்பெருஞ்சிங்கனைக் கண்டேன்…
ஆ.கூடலூர் (ஆயந்தூர் கூடலூர்). விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் முகையூருக்கு முன்னதாகவே இருக்கும் கிராமம்.
இங்கிருக்கும் குளக்கரையில் புதிதாக எழுந்து நிற்கிறது: தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் ஆலயம்.
கிராமத்தில் பல்வேறு இடங்களில் கிடைத்திட்ட இறை சிற்பங்கள் பல, மேற்காணும் ஆலய வளாகத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன.
இதோ, விநாயகர் சன்னதியையொட்டி இரண்டு சிற்பங்கள் வெளியே நின்றிருக்கின்றன.
அதில் ஒருவர் கைகளை கூப்பி வணங்கிய நிலையில் நின்றிருக்கிறார். இவரை “ரிஷி” என வணங்கி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.
சுமார் மூன்று அடி உயரம் இருக்கும் இவரைச் சற்று உற்று நோக்குவோம்.
முகத்தில் முறுக்கிய மீசை. கழுத்திலும் கைகளிலும் அழகிய ஆபரணங்கள். நன்றாக சரிந்தத் தொந்தி. இடைகள், குறுவாள்களைத் தாங்கி நிற்கின்றன. இடையைச் சுற்றி அழகான ஆடை.
இந்த உருவம், வேறொருவரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறதே! ஆமாம். சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் நின்றிருப்பர் நம் நினைவில் வருகிறார்.
ஆம். அவரே தான் இவர்!
இவரே தான் அவர்!
அவர் வேறு யாருமல்ல; காடவராய மன்னன் கோப்பெருஞ்சிங்கன்.
கெடிலம் நதிக்கரையில் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தியவர். “சகலபுவன சக்கரவர்த்தி, அவணியாளப் பிறந்தான், பரதம்வல்ல பெருமான், தமிழ்நாடு காத்தான்” உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர்!
இவர் காலத்தில் ஏராளமான கோயில்களுக்கு எண்ணற்ற திருப்பணிகள். திருவெண்ணெய்நல்லூர் – திருவாமாத்தூர் – திருக்கோவிலூர் …
என இப்பகுதிக் கோயில்களின் பட்டியல் இன்னமும் நீளும்!
கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் தில்லை கிழக்கு கோபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது.
செஞ்சியை அடுத்த அண்ணமங்கலத்தில் பாறையில் புடைப்புச் சிற்பமாக இடம்பெற்று இருக்கிறார்.
அதற்கடுத்து, ஆ.கூடலூர் கிராமத்தில் தான், இதோ இங்கு தான் நமக்குத் தனிச் சிற்பமாகக் காட்சி தருகிறார் கோப்பெருஞ்சிங்கன்.
அந்த வகையில் வரலாற்றில் இடம்பெறுகிறது, ஆயந்தூர் கூடலூர்.
உடன் வந்து உதவிய உள்ளூர் நண்பர் ஆசிரியர் திரு. மூர்த்தி,
வழிகாட்டி உதவிய திருமதி. Mangai Ragavan
பயணத்தில் உதவிய Radhakrishnan Rajendran
ஆகியோருக்கு நம் நன்றிகள்..!
அன்புடன்,
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக