சனி, 10 செப்டம்பர், 2022

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்


பாரதி குறித்து அண்மையில் நான் வாசித்த, என்னை உலுக்கிய புத்தகம் “ பாரதி நினைவுகள்”. நூலாசிரியர்: யதுகிரி அம்மாள்.


பாரதியின் நெருங்கிய நண்பர் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரின் மூத்த புதல்வி. பாரதியின் அபிமான புத்திரி.


பாரதி புதுவையில் இருந்த போது இருவரது குடும்பமும் மிகவும் நெருக்கமாக இருந்தது. 


யதுகிரி அம்மாள் பாரதியின் மடியில் தவழ்ந்த குழந்தை. அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்த சிறுமி. அவருடன் வாதிட்டு விளக்கம் பெற்ற பெண்மணி.


அந்த வகையில் பாரதி குறித்த இவரது எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.


இந்நுலைப் பதிப்பித்து வெளியிட்ட பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன், “பாரதியின் அன்புக்குப் பாத்திரமான சிறுமி என்ற கோணத்திலிருந்து பாரதியை ஒரு மனிதராக, குடும்பத் தலைவராக நம் முன் கொணர்ந்து நிறுத்துகிறார் யதுகிரி அம்மாள். இதில் அவர் கையாளும் ‘வீட்டு நடை’ அவரது நூலுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது.”


உண்மை தான். 1912 முதல் 1918 வரையிலான அரிய விஷயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் யதுகிரி அம்மாள். 


“பாரதியார் வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தன் நோக்கத்தின் படியேதான் நடக்கும் படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே.”


“செல்லம்மா எவ்வளவு முறையிட்டும் பாரதியார் மௌன விரதத்தை மாதக்கணக்காக அனுஷ்டித்தார். ஒருதரம் நாற்பது நாள் விரதமிருந்து கவிதைகள் செய்தார்.”

“பாரதியார் முன்போல் இல்லை. அவர் போக்கு வேகமாய் மாறிக்கொண்டு வந்தது. யாரோ அவரை தப்பு வழிகளில் இழுக்கிறார்கள் என்று தோன்றிற்று. ஆனாலும் யாராலும் அவர் போக்கை மாற்ற முடியவில்லை. செல்லம்மாவின் வேண்டுகோள்களையும் தள்ளிவிட்டு அவர் முன்போகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. 


பாரதி: யதுகிரி நான் புதிய வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.


நான்: அது என்ன வழி?


பாரதி: சாகாமல் இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்கப் போகிறேன்.


நான்: எல்லா அதிசயமும் செய்யலாம். ஆனால் சாகாமல் இருக்க முடியாது என்று எல்லோரும் சொல்கிறார்கள். நீர் அதைக் கண்டுபிடித்தால் மிகவும் அதிசயமே. 


பாரதி: நான் பிரயத்தனப்படுகிறேன். அது கட்டாயமாக எட்டும் என்று தோன்றுகிறது.”


நான் அவரை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக்கூடு! சிவப்பான கண்கள்! துர்ப்பலமான உடம்பு! பார்க்க சகிக்கவில்லை! 

என் மனதில் இருப்பதை அறிந்து கொண்டவர் போல, “நான் புதிய வழியில் யோகசாதனம் செய்கிறேன். அதனால் உடம்பு இளைத்திருக்கிறது“ என்று அறிவித்தார்.


“சித்திரை மாதம் புறப்படுகிற தினம் காலையில் பாரதியார் வந்திருந்தார்.  ஷேமலாபங்களை விசாரித்து விட்டு எங்கள் வீட்டு வாசலிலே முக ஷவரம் செய்து கொண்டார். “இன்று ஷவரத்துக்கு நாள் நல்லாயில்லை என்று செல்லம்மா தடுத்தாள். அதற்காக இங்கே செய்து கொண்டேன் “ என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக