இதோ, அடுத்த மாதம் வந்தால், வயது 83 ஆகப்போகிறது!
தெருமுனையிலேயே நமக்காகக் காத்து நிற்கிறார்.. அன்புடன் கைப் பிடித்து, வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்...
உபசரிப்பு... உரையாடல் தொடர்கிறது...
மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ஐயா. வில்லியனூர் ந.வேங்கடேசன் அவர்கள்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 535 கல்வெட்டுகளும் இவருக்கு அத்துப்படி!
வரலாற்றில் வில்லியனூர், பல்லவன் கண்ட பனைமலைக் கோயில் உள்ளிட்ட 28 நூல்களுக்குச் சொந்தக்காரர்! அடிப்படையில் தமிழாசிரியர்... ஆனால் கல்வெட்டு ஆய்வாளராகப் பரிணமித்து நிற்கிறார்!
இவ்வளவு உழைப்பு, அறிவு, ஆற்றலுக்கும் நான் உரியவன் எனும் கர்வம், கொஞ்சம் கூட இவரிடம் எட்டிப் பார்க்கவில்லை!
"ஐயா, உங்களுடன் ஒரு புகைப்படம்" என்று சொன்னது தான் தாமதம்; ஒரு குழந்தையைப் போல உடன் வந்து ஒட்டி நிற்கிறார்!
சுமார் ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, "புறப்படுகிறேன்" என்றேன். "உக்காருங்க போகலாம்" ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்கிறார்.
வில்லியனூர் புறவழிச்சாலை வந்தவர், பஸ் வரட்டும் என காத்து நிற்கிறார். பஸ் வந்தவுடன் நம்மை ஏற்றிவிட்டு, கையசைத்து விடை தருகிறார்...
அதிசயத்து நிற்கிறேன்... ஐயா. வில்லியனூர் வேங்கடேசன் அவர்களைப் பார்த்து....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக