வியாழன், 30 ஏப்ரல், 2020

விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார்

முதல்முறை… தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநருடன் இவரது அலுவலகத்தில் சந்தித்தேன். முன்பின் அறிமுகமில்லை. ஆனால், என் “பழைய பேப்பர்” நூலினை  நினைவு கூர்ந்தார். ஆச்சரியமடைந்தேன்.

அப்புறம், மீண்டும் ஒருமுறை தனியாகச் சென்று சந்தித்தேன். அவரது நூலக முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

இடையில், நம்ம விழுப்புரம் குழுவினர் நிகழ்விலும், கரிகால சோழன் பசுமை மீட்புப்படை நண்பர்களின் மாரத்தான் நிகழ்விலும்கூடுதல் நேரங்கள் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.


மற்றபடி, வெளியில் நிகழ்வுகளில் ஏதேனும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், “சார், நலமா இருக்கீங்களா” என பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வோம்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்களுடனான நமதுப் பழக்கம் இவ்வளவே.

ஆனாலும் இவர்தம் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை நண்பர்கள் வாயிலாக ஓரளவு அறிந்துள்ளேன்.

சத்தம் போடாமல் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்.

குறிப்பாக, இந்தப் பேரிடர் நேரத்தில் ஓடி ஓடிப் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

இதில் சிலவே வெளியே தெரிந்துள்ளன. இன்னும் பல வெளியில் வராதவை. இதுதான்,  வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பார்கள்.

மகிழ்ச்சி. உங்கள் பணித் தொடரட்டும்… வாழ்த்துகள் சார்..!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

சன் டிவி நிருபர்

1997 – 99. விழுப்புரம் மாவட்ட சன் டிவி செய்தியாளர் பணி.

வடக்கே ஓங்கூரில் இருந்து தெற்கே சின்னசேலம் வி.கூட்ரோடு வரை நம் சாம்ராஜ்யம் விரிந்திருந்தது.

இந்த இடைப்பட்ட பகுதியில் எது நடந்தாலும், எந்த விபத்து நடந்தாலும் நாம் தான் போக வேண்டும். செல்போன் போன்ற தொடர்புகள் எல்லாம் இல்லாத காலம் அது!

சிதம்பரத்தில் வாண்டையார் சகோதரர்கள் கைது செய்யப்பட்டது, புதுவையில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டது, கூவாகம் திருவிழா, விழுப்புரத்தில் ஜானகிபுரம், காட்பாடி ரயில்வே கேட் பிரச்சனைகள் போன்றவற்றை பதிவு செய்தது மறக்க முடியாது!

இவற்றில், ரயில்வே கேட் தவிர்த்து மற்ற செய்திகளில் “சன் செய்திகளுக்காக கோ.செங்குட்டுவன்” என நம் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஆமாம், சிறப்பு செய்திகளில் நம் பெயர் வருவது பெரிய விஷயம்!

அப்போது, 24 மணி நேர செய்தி சேனல் கிடையாது. தினசரி மூன்று முறை தான் செய்தி. நாம் நினைத்த விரும்பிய செய்திகளை எல்லாம் அனுப்பவும், ஒளிபரப்பவும் முடியாது.

நிர்வாகத்தில் ஒன்மேன் ஆர்மி தான். எதை ஏற்பது எதை விடுப்பது எனும் முடிவுகள் செய்தி ஆசிரியர் மட்டுமே எடுப்பது. செய்தி எடுக்கப் போகும் முன்பு அவரிடம் அது எந்த நேரமாக இருந்தாலும் ஒப்புதல் பெற வேண்டும்.

ஒருமுறை, முக்கிய பிரமுகர் ஒருவரின் சாராய டேங்கர் பிடிபட்டது. எஸ்.பி.ரவி பார்வையிட்டார். இதுபற்றி கேட்ட போது, “உங்களுக்கு எஸ்.பி.தான் சம்பளம் தருகிறாரா?” எனத் துணைக் கேள்வி எழுப்பப்பட்டது.

இன்னோரு சமயம், செஞ்சியில் மேம்பாலத்தை அமைச்சர் தா.கி.திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியைத் தவிர்க்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், மேற்கண்ட இரண்டு செய்திகளும் என் மூலமாக அல்லாமல், வேறு வழிகளில் சென்று ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கன.

அது எப்படி என்பதை இதுநாள் வரை நான் அறியேன்.

குறைந்த சம்பளத்தில் நிறைவான பணி செய்தோம்.

சொந்தமாக கேமரா வாங்குங்கள் என ஆலோசனை வழங்கப்பட்டு, கடன்காரனானோம்.

பேருதான் பெத்த பேரு. வேறு வழியில்லை. இரண்டே ஆண்டுகளில் அந்த நிர்வாகத்தில் இருந்து தானாக வெளியே வந்தோம்.

இப்போது தகவல் அறிகிறேன்: அந்த ஒன்மேன் ஆர்மி வெளியேற்றப்பட்டார் (அ) வெளியேறினார் என்று. இந்த நிர்வாகத்தில் ஏறக்குறைய28 ஆண்டு காலம் அவரதுப் பணி என்கிறார்கள்.

அவர் வெளியேறியது, வெளியேற்றப்பட்டது காரணம் யாது தெரியவில்லை?

----------------

சன் டிவியில், விழுப்புரம் மாவட்ட செய்தியாளரான எனக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.1000.

இது, முதன்முதலில் எனக்கு வழங்கப்பட்ட காசோலை.

அப்போதெல்லாம் வங்கிக் கணக்கு எதுவும் கிடையாது.

அதோ ஆரம்பிப்போம்.. அதோ ஆரம்பிப்போம் என்று மாதங்கள் செல்ல...

காலாவதியான இந்தக் காசோலையும் என்னுடனேயே தங்கிவிட்டது!

வியாழன், 23 ஏப்ரல், 2020

விழுப்புரம் கோ.செங்குட்டுவன் - முகநூல் நேரலையில்



நேரலை… முதல் முயற்சி… கன்னி முயற்சி…

பொதுக்கூட்டங்களில் மேடைகளில் பேசி இருக்கிறோம். அந்த அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன.

ஆனால், இணையத்தில் நேரலை என்பது நமக்கு இதுதான் முதல்முறை. 45இல் இருந்து ஒருமணி நேரம் வரை இருக்கலாம் என்பது நெறியாளர்களின் கருத்து.

ஆனாலும் நீண்ட நேரம் இழுக்காமல் சுருக்க வேண்டும் என நான் கருதினேன்.

வளவள வென்று இருக்கக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ஒருமணி நேரத்தில் சொல்லிவிட முடியாது.

அதேநேரம், முக்கியமான வரலாற்றுத் தடயங்களைப் பதிவு செய்தாக வேண்டும்!

கடந்த இரண்டு நாள்களாக கடுமையான மன அழுத்தம்.

வெறுமனே ஸ்கிரீன் முழுக்க நம் முகத்தைக் காட்டுவது, நிச்சயம் பார்வையாளர்களுக்கு சலிப்பைத் தரும்.

தொடர்புடைய இடங்களின் புகைப்படங்களைக் காட்டினால்? தீடீர் யோசனை தலைகாட்டியது.

உரையைத் தொகுப்பது மிகப்பெரிய காரியமாக இருந்தாலும், உரையின் ஊடாக பொருத்தமானப் படங்கள் வர வேண்டும்.

இதற்காக, 104 புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டன. பின்னர் அவை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தும் பணி.

அப்புறம், ஷீட்டிங்கிற்கு நமது வசந்த மாளிகை சரிப்பட்டு வருமா? வேறு இடத்தைத் தேடலாமா?

அப்புறம், லைட்டிங் போன்ற தொழில்நுட்பப் பிரச்சனைகள் தலைகாட்டின.

என் மனைவி, மகள், மகன் எல்லோருமே ஒருவழி ஆகிவிட்டார்கள். அந்தளவுக்கு நான் கொடுத்த நெருக்கடி!

பக்கத்து வீட்டில் இருந்து சில பொருள்கள் இரவலாகப் பெறப்பட்டன. நண்பர் பாரதாதாசன் கொடுத்த லேப்டாப் உரிய நேரத்தில் கை கொடுத்தது.

மகள் புனிதவதி, மகன் சித்தார்த்தன் – இந்தப் பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

சரியான நேரத்தில் எல்லாம் ஓரளவு சரியாக அமைந்துவிட நேற்றைய (23.4.2020 வியாழன்) நேரலை ஓரளவு சிறப்பாகவே அமைந்ததாகக் கருதுகிறேன்.

மாவட்டம் முழுவதும் வரலாற்றுத் தடயங்கள். எல்லாவற்றையும் சொல்வது சாத்தியமல்ல. இதனால் பல பகுதிகள் விடுபட்டு இருக்கலாம்.

இரவு 10 மணி. ஏராளமான நண்பர்கள் தங்கள் தூக்கத்தைத் தியாகம் செய்து கண்டு, கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி!

குறிப்பாக, இந்த இணையவழி உரைத் தொடருக்கு ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சுபாஷினி அவர்களுக்கும் இவற்றை நெறிப்படுத்தி வரும் தேன்மொழி, விவேகானந்தன் ஆகியோர் மிகவும் நன்றிக்கு உரியவர்கள்..!

இந்த நேரலையைத் தவறவிட்டவர்களுக்காக யுடியூப் இணைப்பு...

https://youtu.be/sUoC_JzbLKE


ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

விழுப்புரம் கலவரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

Villupuram riot not communal at outset
Official failed to curb
Aunti – socials, says panel

மே 1, 1979 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைப்பு செய்தி இது!

1978 ஜுலை 25 – 28 . கலவர பூமியானது, விழுப்புரம்.

மிகப்பெரிய வகுப்பு மோதல். தாழ்த்தப்பட்டவர் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். சதாசிவம் நியமிக்கப்பட்டார்.

விழுப்புரம் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் அறிக்கை 1979 மார்ச் இறுதியில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின் விவரங்களைச் சொல்கிறது, மேற்காணும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.


விழுப்புரம் கலவரம்: தினமணி செய்தி

பழைய பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டு இருந்தேன்.

தினமணி, 1.5.1979 நாளிதழ் கண்ணில்பட்டது.

முதல் பக்கத்தில் உள்ள 5 கால செய்தியின் தலைப்பு இப்படியாக இருக்கிறது:

“விழுப்புரம் கலவரங்கள்: “சமூக விரோதிகள் துவக்கியதே”
சதாசிவம் கமிஷன் அறிக்கை தாக்கல்
ரெவினியூ, போலிஸ் அதிகாரிகள் செயல்பாடுக்குக் கண்டனம்”

செய்தியின் உள்ளே, ‘சதாசிவம் கமிஷன் அறிக்கை’ பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது.


திங்கள், 13 ஏப்ரல், 2020

விழுப்புரம்: இந்த ஆண்டு இலட்ச தீபம் இல்லை

“என் வாழ்க்கையில் இலட்ச தீபம் இல்லாமல் நான் பார்த்ததில்லை” மிக நீண்ட அனுபவசாலி மாதிரி பேசினான், என் 14 வயது மகன் சித்தார்த்தன். நான் சொன்னேன், “தம்பி என் அனுபவத்திலேயே நான் இப்படி பார்த்தது இல்லை.”

விழுப்புரத்தின் ஒட்டுமொத்த அனுபவமே இப்படி இருந்திருக்காது தான்.

இந்த ஊரின் ஒரே விழா, ஆஞ்சநேயர் கோயில் சார்ந்து நடைபெறும் இந்த இலட்ச தீபத் திருவிழா தான்.

திருவிழா என்னவோ பத்து நாள் தான். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் களைகட்டும் திரு.வி.க. வீதி.

கூடவே, தேர்வுகள் அனைத்தும் முடிந்து, கோடை விடுமுறையும் சேர்ந்து கொள்ளும். கொண்டாட்டத்திற்குக் கேட்கவே வேண்டாம்!

பத்திரிகையாளராக இருந்த போது, அல்சர் எனப் பொய் சொல்லி, ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் விடிய விடிய திருவிழாவில் சுற்றி வந்து இருக்கிறேன்.

 இப்படியான ஏராளமான அனுபவங்கள் உங்களில் பலருக்கும் இருக்கும்.

கொரோனோ அத்தனையையும் முடக்கிப் போட்டு விட்டது.  இந்த ஆண்டு இலட்ச தீபம் இல்லை. வெறிச்சோடி கிடக்கிறது திரு.வி.க.  வீதி!


வருடப்பிறப்பு,
வழக்கத்தை விட முடியாத பலரும் வந்து  கோயிலுக்கு வெளியே விளக்கேற்றி செல்கின்றனர்.



(இன்று 14.04.2020 செவ்வாய் காலையில் எடுத்தப் புகைப்படங்கள்)

சனி, 4 ஏப்ரல், 2020

விழுப்புரத்தில் மயான அமைதி

காதைக் கிழிக்கும் டிரம்ஸ் சத்தங்கள் இல்லை…

அச்சுறுத்தி மிரள வைக்கும் ஆ ஊ ஆர்ப்பாட்டங்கள் இல்லை…

ஒப்பாரிப் பாடல்களுடன் செல்லும் “இரதங்கள்” இல்லை…

முகத்துக்கு நேராக வீசப்படும் பிண மாலைகள் இல்லை…

தலைதெறிக்க ஓட வைக்கும் பட்டாசுகள் இல்லை…

ஒன்றிரண்டு சடலங்களும் கூட கண நேரத்தில் கடந்து சென்று விடுகின்றன…


மயானம் அமைந்துள்ள, விழுப்புரம் கன்னியர்குளம் சாலையில்,
இப்போது தான் மயான அமைதியைப் பார்க்கிறேன்..!