வியாழன், 23 ஏப்ரல், 2020

விழுப்புரம் கோ.செங்குட்டுவன் - முகநூல் நேரலையில்



நேரலை… முதல் முயற்சி… கன்னி முயற்சி…

பொதுக்கூட்டங்களில் மேடைகளில் பேசி இருக்கிறோம். அந்த அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன.

ஆனால், இணையத்தில் நேரலை என்பது நமக்கு இதுதான் முதல்முறை. 45இல் இருந்து ஒருமணி நேரம் வரை இருக்கலாம் என்பது நெறியாளர்களின் கருத்து.

ஆனாலும் நீண்ட நேரம் இழுக்காமல் சுருக்க வேண்டும் என நான் கருதினேன்.

வளவள வென்று இருக்கக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ஒருமணி நேரத்தில் சொல்லிவிட முடியாது.

அதேநேரம், முக்கியமான வரலாற்றுத் தடயங்களைப் பதிவு செய்தாக வேண்டும்!

கடந்த இரண்டு நாள்களாக கடுமையான மன அழுத்தம்.

வெறுமனே ஸ்கிரீன் முழுக்க நம் முகத்தைக் காட்டுவது, நிச்சயம் பார்வையாளர்களுக்கு சலிப்பைத் தரும்.

தொடர்புடைய இடங்களின் புகைப்படங்களைக் காட்டினால்? தீடீர் யோசனை தலைகாட்டியது.

உரையைத் தொகுப்பது மிகப்பெரிய காரியமாக இருந்தாலும், உரையின் ஊடாக பொருத்தமானப் படங்கள் வர வேண்டும்.

இதற்காக, 104 புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டன. பின்னர் அவை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தும் பணி.

அப்புறம், ஷீட்டிங்கிற்கு நமது வசந்த மாளிகை சரிப்பட்டு வருமா? வேறு இடத்தைத் தேடலாமா?

அப்புறம், லைட்டிங் போன்ற தொழில்நுட்பப் பிரச்சனைகள் தலைகாட்டின.

என் மனைவி, மகள், மகன் எல்லோருமே ஒருவழி ஆகிவிட்டார்கள். அந்தளவுக்கு நான் கொடுத்த நெருக்கடி!

பக்கத்து வீட்டில் இருந்து சில பொருள்கள் இரவலாகப் பெறப்பட்டன. நண்பர் பாரதாதாசன் கொடுத்த லேப்டாப் உரிய நேரத்தில் கை கொடுத்தது.

மகள் புனிதவதி, மகன் சித்தார்த்தன் – இந்தப் பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

சரியான நேரத்தில் எல்லாம் ஓரளவு சரியாக அமைந்துவிட நேற்றைய (23.4.2020 வியாழன்) நேரலை ஓரளவு சிறப்பாகவே அமைந்ததாகக் கருதுகிறேன்.

மாவட்டம் முழுவதும் வரலாற்றுத் தடயங்கள். எல்லாவற்றையும் சொல்வது சாத்தியமல்ல. இதனால் பல பகுதிகள் விடுபட்டு இருக்கலாம்.

இரவு 10 மணி. ஏராளமான நண்பர்கள் தங்கள் தூக்கத்தைத் தியாகம் செய்து கண்டு, கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி!

குறிப்பாக, இந்த இணையவழி உரைத் தொடருக்கு ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சுபாஷினி அவர்களுக்கும் இவற்றை நெறிப்படுத்தி வரும் தேன்மொழி, விவேகானந்தன் ஆகியோர் மிகவும் நன்றிக்கு உரியவர்கள்..!

இந்த நேரலையைத் தவறவிட்டவர்களுக்காக யுடியூப் இணைப்பு...

https://youtu.be/sUoC_JzbLKE


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக