செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

காஞ்சி பீடாதிபதி மறைந்தார்...


காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் அவர்களுக்கும் விழுப்புரத்திற்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு.

அவரதுத் தந்தையார் விழுப்புரம் இரயில்வே லோக்கோ ஷெட்டில் ஹெட்கிளார்க்காக  வேலைப் பார்த்தவர். அந்தக் காரணத்தினால் ஜெயேந்திரர் அவர்களின் தொடக்கக் காலப் படிப்பும் இங்குதான். விழுப்புரம் பீமநாயக்கன் தோப்புப் பள்ளிக்கூடத்தில்தான் அவர் பயின்றார்.

காஞ்சி பீடாதி அவர்கள் விழுப்புரம் சங்கர மடத்திற்கு எப்போது வந்தாலும், போலீஸ் எஸ்கார்டு வாகனம் பின்தொடரும். மடத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்படும். அவர் எத்தனைநாள் தங்கியிருக்கிறாரோ அத்தனை நாளும்!

அவரிடம் ஆசி பெறுவதற்காக பக்தர்கள் கூட்டம் வரிசைக்கட்டி நிற்கும். அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கியப் பிரமுகர்களும்கூட வருவார்கள்.

அப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் தவறாமல் விழுப்புரம் மடத்துக்கு ஆஜராகி விடுவோம். முகம் சுளிக்காமல், புன்சிரிப்புடன் பீடாதிபதி எங்களைச் சந்திப்பார். வழக்கம்போல் நான்தான் எடக்குமடக்காகக் கேள்விகளைக் கேட்பேன். அவரும் தயங்காமல் பதில் சொல்லுவார்.

இப்படித்தான் ஒருமுறை நான் கேட்ட ஒரு கேள்வியும் இவர் அளித்தப் பதிலும் மிகப்பெரிய சர்சைக்குள்ளானது. ஆனாலும் அவர் பத்திரிகையாளர்களை (என்னையும்) சந்திப்பதை ஒருபோதும் அவர் தவிர்க்கவில்லை.

ஒருமுறை, தான் படித்த விழுப்புரம் பீமநாயக்கன் தோப்புப் பள்ளிக்கூடத்தைப் பீடாதிபதி அவர்கள் சுற்றிப் பார்த்தார். அப்போது அங்கு வந்த திமுக நகரமன்றத் தலைவர் ஜனகராஜ் அவர்களுக்கு சால்லை அணிவித்து ஆசி வழங்கினார். இந்தச் செய்தியும், புகைப்படமும் அன்றைக்கு அரசியல் அரங்கில் முக்கிய விவாதப் பொருளாகப் பேசப்பட்டது.

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் நூலுக்காக நேர்காணல் வேண்டும். விழுப்புரம் மகாலட்சுமி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் 28.09.2010 அன்று, என்னைக் காஞ்சி மடத்துக்கு அழைத்துச் சென்றார். பீடாதிபதி அவர்களை அவரது அறையில் சந்தித்தேன்.

பொதுவாக அங்கு அவரிடம் ஆசி பெற வருபவர்கள் மேல்சட்டையைக் கழட்டிவிட்டுத் தான் உள்ளே செல்கிறார்கள். ஆனால் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. மேல்சட்டையுடனேயே, அவர் அருகில் நின்று, கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பதிவு செய்தேன்.

விழுப்புரம் பீமநாயக்கன் தோப்புப் பள்ளியில் தான் பயின்ற அந்த நாட்களை, தனக்குப் பாடம் நடத்திய தமிழ் வாத்தியாரை, அந்த உச்சிக்குடுமி வைத்த முதலியாரை, நினைவுகூர்ந்த அவர்,

‘மகா பெரியவர் விழுப்புரம் வந்திருந்தபோது என் தந்தையார் அவர் சந்தித்தார். அப்போது உன் மகனை வேதம் படிக்க அழைத்து வா என அவர் சொன்னதின் பேரில் நான் வேதம் படிக்கச் சென்றேன் என முதல் ஆவணி அவிட்டத்தின்போது நடந்த மறக்க முடியாத நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

ஆமாம். மறைந்த காஞ்சி பீடாதிபதி அவர்களை விழுப்புரமும் என்றும் மறக்காது..!    

ஜெயமோகனின் ‘அபிப்ராய சிந்தாமணி’



எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை.

கிழக்குப் பதிப்பகத்தார், அவரது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் வெளியான, ‘அபிப்ராய சிந்தாமணியினை அண்மையில் வாசித்தேன்.

தலையணை சைஸ். ஆனாலும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஜெயமோகன் அவர்கள் எழுதத் தொடங்கியக் காலத்தில் எழுதப்பட்ட ‘பகடிக் கட்டுரைகளின் தொகுப்பு அது. மொத்தம் 108 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதென்ன நூற்றியெட்டு? ஏதாவது காரணம் இருக்கக் கூடும்!

பெரும்பாலானக் கட்டுரைகளில் குமரி மாவட்ட பேச்சு வழக்குத்தான். ‘கொஞ்சு தமிழ் குமரி என தனியாக ஒரு கட்டுரையும் இருக்கிறது.

கட்டுரைகளின் ஊடாக, எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, நாகார்ஜுனன், சுந்தரராமசாமி, சாருநிவேதிதா ஆகியோர் வந்துச் செல்கின்றனர்.  

இரண்டாவது கட்டுரையான, ‘கனவின் கதை’, ‘நான் கடவுள் படத்துக்காக ஜெயமோகன், காசியில் தங்கியிருந்த அனுபவத்தின் பதிவு. சடலங்கள் எரிக்கப்படுவதை இயல்பாகச் சொல்லிச் செல்கிறார் ஆனாலும் நம்மைச் சற்று மிரள வைக்கிறது. மற்றபடி எல்லாம் பகடிகள்தாம்!

குறிப்பாக, புதுக்கவிதை எழுதப்போகும் இளைஞர்களுக்கு இவர் சொல்லும் சில ஆலோசனைகள் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது.

‘உங்களுக்கு ஒரு பெயர் தேவை. புனைபெயர்! புனைபெயர் இல்லாத கவிஞன் மல்லிகை சூடாத விலைமகள் போல. புனைபெயரில் என்ன இருக்கிறது என்று என்று எண்ண வேண்டாம். உங்கள் அனைத்துக் கவிதைகளுக்கும் அர்த்தம் அளிக்கும் முதல் புள்ளி புனைபெயர்தான் என்பது புதுக்கவிதையின் ஆரம்பப் பாடம் என்று தொடங்கும் இக்கட்டுரை,

‘புதுக்கவிதை எழுதுவதனால் என்ன லாபம் என்ற வினா எப்போதாவது வந்து உங்களை மதுக்கடை நோக்கி உந்தக்கூடும். புதுக்கவிதை எழுதுபவனுக்குப் பணமோ புகழோ கிடைப்பதில்லையாயினும் தமிழ் மக்களின் கவிதையுணர்வைக் குறை சொல்லவும் தமிழ்க் கவிதையின் தர வீழ்ச்சியைப்பற்றி வருந்தவும் உரிமை கிடைக்கிறது. இது வாழ்நாள் முழுக்கச் செல்லுபடியாகக் கூடியதுமாகும். ஆகவே எழுதுக கவிதை! என்பதாக முடிகிறது.

மேலும், நீங்களும் பின்நவீனத்துவக் கட்டுரை வனையலாம், நீங்களும் மேடைப் பேச்சாளாராகலாம், போன்ற கட்டுரைகள் இந்த வகையைச் சேர்ந்தவைதாம்.

மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் பொய்கள் என, 25 பொய்களை அடுக்கிச் செல்கிறார். ‘பாராட்டி எழுதும் விமரிசனங்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிப்பதில்லை. என்னை விமரிசிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. நான் ஒருபோதும் சன்மானத்தை வைத்து பத்திரிகைகளை அளப்பதில்லை. இலக்கிய வம்புகளை நான் படிப்பதே இல்லை. எனக்கு சாதிமத நம்பிக்கைகள் இல்லை. என் குழந்தைகள் கலப்புத் திருமணம் செய்துகொண்டால் ஆதரிப்பேன். ஆனால் அவர்களை கட்டாயப் படுத்த மாட்டேன். நான் டிவி சீரியல்களை பார்ப்பதே இல்லை (அதில் வரும் பெண்களை ஏறிட்டும் பார்க்க மாட்டேன் போன்ற பொய்கள் நம்மை இரசிக்க வைக்கின்றன. 

72ஆவது கட்டுரையான ‘அச்சுப் பிழை எள்ளல் துள்ளல்கள் நிறைந்தது. ‘என்னை மூத்திரம் நனைத்தாய் நீ எனும் புகழ்பெற்ற பின்நவீன ஆபாச கவிதை பலநூறு நுண்வாசிப்புகளுக்கு ஆளானதாம். ஆனால் உண்மையில் அதன் வரி இப்படி இருக்க வேண்டுமாம்: ‘என்னை மாத்திரம் நனைத்தாய் நீ
.
‘இப்போதெல்லாம் நான் அச்சுப் பிழைகளுக்குப் பழகிவிட்டேன் என்று சொல்லும் ஜெயமோகன்,  ‘வரலாறு தமிழுக்கு அளித்த ஒரு தனித்தன்மையாக ஏன் நாம் அச்சுப் பிழைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது? என்று நக்கலடிக்கிறார்.

ஓரிடத்தில், ‘தமிழர்கள் சாதிகளைப் பற்றியும் பாலுறவுப் பற்றியும் பேச மாட்டார்கள் ராப்பகலாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்என்கிறார் ஜெயமோகன்.
எனக்கு இது பகடியாகப் படவில்லை. எதார்த்தமாகவே தெரிகிறது!   

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ஆரோவில்லில் கலைஞர்...


விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அப்போதுதான், சர்வதேச நகரமாக உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்ட தமிழக அரங்கிற்கான அடிக்கல் நாட்டுவிழா, 1973ஆம் ஆண்டு, அக்டோபரில் நடந்தது. 

விழாவுக்குத் தலைமை அமைச்சர் நாவலர். இதில் பங்கேற்ற, முதல்வர் கலைஞர், தமிழக அரங்குக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதன் சுருக்கம் வருமாறு:

‘விழாத் தலைவர் நம் நாவலர் அவர்கள் புறநானூறு பாடிய பெரும்புலவன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து ஓதியிருக்கிறான் என்று குறிப்பிட்டார்கள்.

அவர் அப்படிக் குறிப்பிட்டபோது ஓர் இளம் நண்பர் வேகமாக என் பின்னே ஓடிவந்து ஒருவேளை அந்தப் புறநானூற்றுக் கவிஞன் இந்தக் கிராமத்திலேதான் பிறந்திருப்பானோ என்று என்னிடத்தில் கேட்டார்.

அவன் இந்தக் கிராமத்தில் பிறந்தானோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அந்த முழக்கம் தமிழ்நாட்டிலே இருந்து உலகுக்கு அறிவிக்கப்பட்டது என்பது புறநானூற்றுக் காலத்திலே மாத்திரம் அல்ல, அதற்குப் பிறகு பல்லாண்டு காலம் கடந்தபிறகு இப்போதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அறிவிப்பதும் தமிழ்நாட்டிலே இருந்துதான் என்று எண்ணுகிற நேரத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு பல்வேறு உணர்ச்சிகளுக்கு, பல்வேறு உன்னதமான நிலைகளுக்கு வழிகாட்டுகிற நாடாகும்.

ஆரோவில் என்றால் பிரெஞ்சு மொழியில் புதிய நகர் அல்லது புதிய வாழ்வு உதயம் என்று பொருள். பிரெஞ்சு மொழியில் சொல்லிப் பார்த்தாலும் அது பொருத்தமாக இருக்கிறது. ஆங்கிலத்தையும் தமிழையும் இணைத்துச் சொல்லிப் பார்த்தாலும் ஒரு வகையிலே இது பொருத்தமாக இருக்கிறது.

...உள்ளபடியே இது ஒரு மகத்தான சாதனையாகும். இந்த மகத்தான சாதனையினுடைய விளைவை உடனடியாக நாம் காணமுடியுமா என்றால் – நாளைக்கோ, நாளைய மறுநாளைக்கோ கண்டுவிட முடியுமா என்றால்- இயலாது.

ஆனால் இதற்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் இன்றைக்கே நிச்சயித்துக்கூற முடியும். அந்த எதிர்காலத்தை இப்போதே அமைத்துக் காட்ட இயலாது.

...ஒரு இணைப்பு – அதாவது ஒரு சங்கமம்  - மாநிலத்துக்கு மாநிலம் அல்ல – நாட்டுக்கு நாடு – உலகத்திலே இருக்கிற பல்வேறு நாடுகளுக்கு இடையே இங்கே உருவாகிறது.

நாங்கள் உலக அளவிலேகூட இணைப்பை விரும்புகிறவர்கள். இணையாமல் இருக்கிற தன்மையை எந்த நேரத்திலும் நாங்கள் விரும்பாதவர்கள். நாங்கள் என்றைக்கும் உலக அரங்கத்தில் இணைப்பை விரும்புகிறவர்கள்.

இந்த ஆரோவில் நகரம் நல்ல முறையிலே வளர்வதைத் தமிழ்நாடு அரசு தனக்குற்ற ஒரு இலட்சியமாகக் கொண்டு ஓத்துழைப்பை எந்த அளவுக்குத் தருமோ அந்த அளவுக்குத் தரும்.

இவ்வாறு கலைஞர் பேசினார்.

ஆரோவில் இன்று வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகவும் மாறியிருக்கிறது...

நினைவுகளுக்காக... விழுப்புரத்தார் (கோ.செங்குட்டுவன்)

வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஏ.கோவிந்தசாமி – வே.ஆனைமுத்து – எம்.சண்முகனார்



ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தில் மணி விளைச்சல் அமோகம். இதற்காக, இந்த மாவட்டத்துக்கு, ‘மல்லாக்கொட்ட ஜில்லா என்றப் பெயரும் உண்டு.

இதற்காக அமைக்கப்பட்ட தென்னார்க்காடு மாவட்ட நிலக்கடலை சந்தைக் குழுவில்       (South Arcot Groundnut Market Committee) பணியாற்றிய சிலர், பின்னாளில் அரசியல் ஜாம்பவான்களானத் திகழ்ந்தனர். அவர்கள்தாம், ஏ.ஜி. என்றழைக்கப்பட்ட திரு.ஏ. கோவிந்தசாமி, திரு.வே.ஆனைமுத்து, திரு.விழுப்புரம் எம்.சண்முகனார். 

ஏ.கோவிந்தசாமி
1940 முதல் 1951 வரை தென்னார்க்காடு மாவட்ட நிலக்கடலை சந்தைக் குழுவில்       (South Arcot Groundnut Market Committee) எழுத்தராகப் பணியாற்றினார்.
பின்னர் 1952இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு (தற்போதைய விழுப்புரம் மாவட்டம்) விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து 1957இல் வளவனூர் தொகுதியிலும், பின்னர் 1967இல் முகையூர் தொகுதியிலும் வெற்றி பெற்றார். 1967இல் அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
இவர் பதவியில் இருந்த 1967-69 ஆகிய காலக்கட்டங்களில் வேளாண்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். 
இதில், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மிகுபயன் தரும் தானிய ரக திட்டம், ஒரு போக நிலங்களை இருபோக நிலங்களாக்கும் திட்டம், சிறுபாசன வசதிகளைப் பெருக்கும் திட்டம் போன்றவற்றை குறிப்பிடலாம்.
இவரது அமைச்சர் பதவிக்காலத்தின் போதுதான் ஐஆர் 8, ஆடுதுறை 27 ஆகிய நெல் இரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பயிர்களை பாதிக்கும் பூச்சிகளைக் கொல்ல விமானம் மூலம் மருந்துத் தெளிக்கும் திட்டம் தென்னார்க்காடு, செங்கற்பட்டு, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது என்பதையும் இங்குக் குறிப்பிடலாம், 


வே.ஆனைமுத்து
1951இல் தென்னார்க்காடு மாவட்ட நிலக்கடலை சந்தைக் குழுவில் (South Arcot Groundnut Market Committee) எழுத்தராகக் கடலூரில் பணியைத் தொடங்கிய இவர், 1956 வரை சின்னசேலம், பண்ருட்டி, விருத்தசாலம், திருக்கோவலூர் ஆகிய இடங்களில் பணியாற்றினார். 

தந்தை பெரியாருடனான அரசியல் பணியில் தன்னைத் தீவிரமாக இணைத்துக் கொண்ட ஐயா வே.ஆனைமுத்து, தற்போது மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். 










விழுப்புரம் எம்.சண்முகனார்

மாநில கூட்டுறவு நிலவள வங்கியின் தலைவராக இருந்த இவர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பாசத்திற்குரியவர். திராவிட இயக்க முன்னோடிகளுள் ஒருவர். 

விழுப்புரம் நகரமன்றத்தில் 56 ஆண்டுகாலம் தொடர்ந்து உறுப்பினராக இருந்து சாதனைப் படைத்தவர். 

1947, 1952, 1969, 1986 ஆகிய காலக்கட்டங்களில் விழுப்புரம் நகரமன்றத் தலைவராக இருந்திருக்கிறார். 

மேலும், 1962, 1967, 1971 காலக்கட்டங்களில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் எம்.சண்முகனார் வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சனி, 17 பிப்ரவரி, 2018

சொந்த ஊர்ப்பற்று...

“உங்க ஊர்ல அப்படி என்ன இருக்கு? முன்பெல்லாம் இப்படி யாராவது கேட்டு விட்டால் எனக்குக் கோபம் வரும். என்னதான் இல்ல, இந்த விழுப்புரத்துல?

சோழர்காலக் கோயில்கள் இருக்கு, இசுலாமிய ஆட்சியின் பள்ளிவாசல் இருக்கு, ஆங்கிலேயர்களின் தேவாலயங்கள் இருக்கு. இவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மையப்புள்ளியா இந்த ஊர் இருக்கு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரயில் சந்திப்பு எங்க ஊர்லதான இருக்கு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காஞ்சி சங்கராச்சாரியார் (பெரியவர்) இங்கதான் பொறந்தாங்க. திருக்குறளார் இங்கதான வாழ்ந்து மறைஞ்சாரு. ஒருநாள் முழுக்க இரமணர் இங்க சுற்றித் திரிஞ்சிருக்காரே. இந்திய விடுதலைப் போராட்டத்திலும், பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும் இந்த மண்ணின் பங்கு மகத்தான தல்லவா?

பாரதியின் வெளியீடுகள் விடுதலை வீரர்களை ஊடுருவியதும், கலைஞர் தனது முதல் நாடகத்தை அரங்கேற்றியதும், எழுத்தாளர் ஜெயகாந்தன் அரசியல் அரிச்சுவடியைக் கற்றுக் கொண்டதும், எழுத்தாளர் சிவசங்கரிக்கு விசாலப் பார்வை ஏற்பட்டதும் இந்த விழுப்புரத்தில்தானே?

குட்டைப் பாவாடை அணிந்த அந்தச் ‘சட்டைக்காரர்கள் பெருமளவில் உலவியதும் இங்கதான!

இப்படியெல்லாம் பதில் சொல்லத் தொடங்கியதன் விளைவு – தேடல் – ஐந்து ஆண்டுகால உழைப்பு – ஏறக்குறைய 270 பக்கங்களில் “விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்நூலாக உருவெடுத்தது!

2011 பிப்ரவரியில் சத்தமில்லாமல், வெளியீட்டு விழா எனும் ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல், என் சொந்த வெளியீடாக, முதல் பிரசவம் நிகழ்ந்தது! அடுத்த இரண்டு மாதங்களில் இரண்டாவதுப் பதிப்பையும் பார்த்தது. இது என்னைப் பொறுத்த வரையில் சாதனைதான்.

விழுப்புரத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நூல், 2500 வீடுகளில் இன்று வாசம் செய்து கொண்டிருக்கிறது. இன்னமும் கேட்கிறார்கள், கையிருப்பில் இல்லை.

இதற்காக என்னுடன் இணைந்து வடம் பிடித்திழுத்த, என் கண்ணீரை துடைத்து விட்டக் கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் நிறையபேர். அத்தனைபேரும் நன்றிக்கு உரியவர்கள். புழுதிப்படர்ந்த விழுப்புரம் தெருக்களில் என் கால்களைச் சுமந்து நடந்த என் செருப்புகளும்கூட!   

“விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் நூலில் சொல்ல மறந்த விசயங்கள் இன்னும் பல இருக்கலாம். ஆனாலும், சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லிவிட்டதாகவே நினைக்கிறேன்.

வெளியூர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் இப்போதும் வருத்தத்துடன் சொல்வார்கள், “இப்படியான ஒரு செயலுக்காக அந்த ஊர் உங்களை உச்சிமுகர்ந்துக் கொண்டாடியிருக்க வேண்டும்.

அப்படியெல்லாம் நடந்ததா? என் உழைப்புக்கானச் சரியான அங்கீகாரம் இந்த மண்ணில் கிடைத்ததா? அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது நடந்திருக்கலாம். இதுபற்றியெல்லாம் நான் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கவில்லை. வாழுங் காலத்தில், சொந்த மண்ணில் எவனுக்குத்தான் அங்கீகாரம் கிடைத்தது?

எனக்குள் மிகப்பெரிய சந்தோசம், நிம்மதி. என்னை ஈன்றெடுத்த விழுப்புரம்  மண்ணுக்கு உரிய மரியாதையை நான் செய்துவிட்டேன். இன்னமும் செய்து கொண்டிருப்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நண்பர்களே, உங்களைப் போன்றோரின் உதவிகளுடன், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எனதுப் பயணம்..!

அன்புடன், விழுப்புரத்தார் என்கிற கோ.செங்குட்டுவன்.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

விழுப்புரத்தில் மயானக்கொள்ளை











விழுப்புரத்தில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று,
இந்த மயானக் கொள்ளைத் திருவிழா...

அடடா..! ஊரே ஒன்று திரள்கிறது.

பிற்பகல் மூன்று மணியிருக்கும் அதோ, எம்.ஜி.ரோடில் இருந்து ஸ்ரீ ரேணுகா
அங்காள பரமேஸ்வரி புறப்பட்டுவிட்டாள். ஆஹா என்ன ஆக்ரோஷம்... என்னவொரு வேகம்?

உடன், ஆர்ப்பரித்து வரும் மக்கள் வெள்ளம்.

முன்னதாக அலகுக் குத்தியும், வேல் தரித்தும், கட்டைக் கால்களிலும் பல்வேறு வேடமிட்டு, பக்தி பரவசத்துடன் ஆடிவரும் பக்தர்கள்.

சாமியை வரவேற்கத்தான், கன்னியாகுளம் சாலையின் இருமருங்கிலும் திரண்டிருக்கும்  பொதுமக்கள். இதில், திடீர் திடீரென்று மருள்வந்து ஆடும் பெண்கள்.

சாமி, இடுகாட்டை நெருங்கியதும்,  பூக்கள், காசுகள், காய்கறிகள் என தங்கள் நேர்த்திக் கடனை அங்காளம்மன் மீது வாரியிறைக்கும் பக்தர்கள். நிச்சயம் தங்கள் வேண்டுதலை இவள் நிறைவேற்றுவாள் என்பதில் இம்மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை!

இடுகாட்டின் உள்ளே, தங்களால் இயன்ற வகையில், மூத்தோர்  வழிபாடு சிறப்பாகவே நடந்தது.

ஆம். சங்க காலத்தில் தொடங்கிய அந்த நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியை, இன்றும் விழுப்புரம் இடுகாட்டில் காண்கிறோம்.

விழுப்புரத்தில் இன்று (15.02.2018) பிற்பகல் நடந்த மயானக் கொள்ளைத் திருவிழாவின் புகைப்படங்கள்...

உங்களுக்காக... உங்கள் விழுப்புரத்தார் (கோ.செங்குட்டுவன்)  

வியாழன், 1 பிப்ரவரி, 2018

அரசு மருத்துவமனைகள் என்றாலே இப்படித்தானா..?

ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குள் சென்று. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்றுதான் போனேன்.

இடதுகை தோள்பட்டையில் மாதக்கணக்கில் வலி. விழுப்புரம் அரசு மருத்துவ மனைக்குச் சென்று, எலும்பு மருத்துவரைச் சந்தித்தேன். உபயம்: செய்தியாளர்-நண்பர் சீதாராமன்.

டாக்டர் நன்றாகத்தான் பார்த்தார். ‘எக்ஸ்ரே எடுத்துட்டு வாங்க’ துண்டுச் சீட்டைக் கையில் திணித்தார். எங்கே போவது சில நிமிடங்கள் திணறினேன். ‘ஓபியில இருந்து நேராகப் போங்க வழிகாட்டினார்கள்.

ஆமாம் பழைய இடம்தான் பழைய இடம் என்றால், தொழில்துறை அமைச்சர் செ.மாதவன் என்று திறந்து வைத்தாரோ, 1973இல் இருந்தே, எக்ஸ்கதிர் நிலையம் இந்தக் கட்டடத்தில்தான் இயங்கி வருகிறது.

எக்ஸ் கதிர்நிலையத்தை அடைவதற்கு முன், சிதலமானத் தார்ச் சாலையில் நடக்க வேண்டும். வழியில் நான்கைந்து பாழடைந்தக் கட்டடங்கள். மரங்கள் அடர்ந்திருக்கும்



.

மேலும், ஆங்காங்கே தண்ணீர் பாக்கெட்டுகள், முடிச்சுகள், மதுபாட்டில்கள். போதாக்குறைக்குத் திறந்தவெளி கழிப்பிடம்வேறு.

இக்காட்சிகளையெல்லாம் கண்டபின்புதான், நாம் எக்ஸ்கதிர் நிலையத்தை அடைய முடியும்.  

விழுப்புரம் அரசு மருத்துவமனையின் மற்றப் பகுதிகள் ஓரளவுப் பரவாயில்லை. பழைய கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காலையிலேயே, சுத்தம் செய்துவிடுகின்றனர்.

இவற்றிற்கு விதிவிலக்காக இருப்பது, எக்ஸ்கதிர் நிலையத்துக் போகும் இந்த வழிதான்.


ஒருவேளை, அரசு மருத்துவமனைகள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி விட்டுவைத்து இருக்கிறார்களோ, என்னவோ..!