வியாழன், 1 பிப்ரவரி, 2018

அரசு மருத்துவமனைகள் என்றாலே இப்படித்தானா..?

ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குள் சென்று. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்றுதான் போனேன்.

இடதுகை தோள்பட்டையில் மாதக்கணக்கில் வலி. விழுப்புரம் அரசு மருத்துவ மனைக்குச் சென்று, எலும்பு மருத்துவரைச் சந்தித்தேன். உபயம்: செய்தியாளர்-நண்பர் சீதாராமன்.

டாக்டர் நன்றாகத்தான் பார்த்தார். ‘எக்ஸ்ரே எடுத்துட்டு வாங்க’ துண்டுச் சீட்டைக் கையில் திணித்தார். எங்கே போவது சில நிமிடங்கள் திணறினேன். ‘ஓபியில இருந்து நேராகப் போங்க வழிகாட்டினார்கள்.

ஆமாம் பழைய இடம்தான் பழைய இடம் என்றால், தொழில்துறை அமைச்சர் செ.மாதவன் என்று திறந்து வைத்தாரோ, 1973இல் இருந்தே, எக்ஸ்கதிர் நிலையம் இந்தக் கட்டடத்தில்தான் இயங்கி வருகிறது.

எக்ஸ் கதிர்நிலையத்தை அடைவதற்கு முன், சிதலமானத் தார்ச் சாலையில் நடக்க வேண்டும். வழியில் நான்கைந்து பாழடைந்தக் கட்டடங்கள். மரங்கள் அடர்ந்திருக்கும்



.

மேலும், ஆங்காங்கே தண்ணீர் பாக்கெட்டுகள், முடிச்சுகள், மதுபாட்டில்கள். போதாக்குறைக்குத் திறந்தவெளி கழிப்பிடம்வேறு.

இக்காட்சிகளையெல்லாம் கண்டபின்புதான், நாம் எக்ஸ்கதிர் நிலையத்தை அடைய முடியும்.  

விழுப்புரம் அரசு மருத்துவமனையின் மற்றப் பகுதிகள் ஓரளவுப் பரவாயில்லை. பழைய கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காலையிலேயே, சுத்தம் செய்துவிடுகின்றனர்.

இவற்றிற்கு விதிவிலக்காக இருப்பது, எக்ஸ்கதிர் நிலையத்துக் போகும் இந்த வழிதான்.


ஒருவேளை, அரசு மருத்துவமனைகள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி விட்டுவைத்து இருக்கிறார்களோ, என்னவோ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக