ஞாயிறு, 3 மே, 2020

செஞ்சியார்

வைகோ தலைமையில் அப்போது தனி அணி உருவாகவில்லை. அதற்கான அடிப்படை முகாந்திரங்கள் நடந்து வந்த நேரம் அது.

அப்போது தான் “விழுப்புரம் பகுதிக்கு நிருபர் தேவை” – எனும் விளம்பரத்தை தினகரன் நாளிதழில் பார்த்தேன். நிச்சயம் பெற்றே தீர வேண்டும். சிபாரிசு தேவை. குறிப்பாக, வைகோ ஆதரவாளர்களாக தினகரன் உரிமையாளர் கேபிகே மற்றும் செஞ்சியார் போன்றவர்கள் இருந்தனர். செஞ்சியார் அவர்களின் சிபாரிசு கிடைத்தால் போதும். 

திமுக பிரமுகர் மரகதபுரம் பன்னீர் அவர்களை அணுகினேன். அவரும் செஞ்சியாரிடம் நேரிடையாகப் பரிந்துரைத்தார்: “செங்குட்டுக்கு நீங்க வாங்கித் தரணும்.”

இதனையேற்றுக் கொண்ட செஞ்சியார் அவர்கள், “உங்களைத் தெரியும் என்று நம்ம அணியினர் கிட்ட கடிதங்களை வாங்கி வாங்க” என்று அனுப்பி விட்டார்.

கடிதங்கள் வாங்கும் படலம் தொடங்கியது.

விழுப்புரம் நகர கழக செயலாளர் வி.என்.வாசன், நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் தெ.பாண்டியன், தொண்டர்படை புல்லட் பி.மணி, வழக்கறிஞர்கள் உலகநாதன், பி.எஸ்.மன்னப்பன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் பாபு கோவிந்தராஜ் ஆகியோரிடம் கடிதங்கள் பெற்றேன்.

ஒருநாள் இரவு அரசூர் சென்றேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அரசூர் பாலு அவர்களிடம் கடிதம் பெற்றேன். இதேபோல், இரவு நேரத்தில் கண்டமங்கலம் சென்று, முன்னாள் பெருந்தலைவர் தாமோதரன் அவர்களிடம் கடிதம் பெற்றேன். அப்போது மின்சாரம் இல்லாத சூழலில் லாந்தர் வெளிச்சத்தில் அவர் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

இத்தனைக் கடிதங்களுடன் ஒருநாள் சென்னை பயணம். மரகதபுரம் பன்னீர் அழைத்துச் சென்றார். செஞ்சியார் அவர்களுடன் நேரிடையாக கேபிகே அவர்களைச் சந்திக்கத் திட்டம்.

நாங்கள் போன நேரத்தில் தான் தனி அணிக்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வந்தன. ஒருநாள் முழுக்க எம்எல்ஏ ஹாஸ்டலில் தவமிருந்தேன்.

அடுத்த நாள் என்னை அழைத்த செஞ்சியார் அவர்கள், “என்னால் நேரில் வர இயலாது. கடிதம் கொடுக்கிறேன்” என லட்டர் பேடை எடுத்து கார் மீது வைத்து எழுதத் தொடங்கினார்.

“மதிப்பிற்குரிய அண்ணார் கேபிகே அவர்களுக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி இராமச்சந்திரன் எழுதியது.
தினகரன் பத்திரிகை செய்தியாளராக விழுப்புரம் பகுதிக்கு கழகத் தோழர் நண்பர் செங்குட்டுவன் அவர்களை நியமிக்கக் கோருகிறேன். அவருக்கு எல்லா தகுதிகளும் நிரம்ப உண்டு. செய்தி சேகரிக்கும் அனுபவம் உள்ளவர். அவரை செய்தியாளராக நியமிக்க பரிந்துரை செய்யக் கோருகிறேன்.”


இதனைத் தொடர்ந்து 27.8.1993இல் தினகரன் அலுவலகத்தில் நேர்காணல். செய்தி ஆசிரியர் முத்துப்பாண்டியன், எடுத்துச் சென்ற கடிதங்களில் செஞ்சியார் கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டார்.

1993 செப்டம்பர் 17 முதல் ஏழு ஆண்டுகள், தினகரன் நிருபராக என் பணி தொடர்ந்தது! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக