செவ்வாய், 26 டிசம்பர், 2017

விழுப்புரம் மருதூர் ஏரி...

மருதூர்ப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வசித்தவன். அந்த வகையில் இந்த ஏரியும், ஏரி சார்ந்த நிலங்களும் எனக்கு மிகவும் பரிச்சயம்.


ரயில்வே லைனில் அமர்ந்து கொண்டு, கிழக்கில் அழகிய வயல்வெளிகளையும், மேற்கில் நீண்டு வளைந்துள்ள இந்தப் பிரம்மாண்ட ஏரியையும் இரசித்துக் கொண்டுப் பாடப்புத்தகத்தை மண்டையில் ஏற்ற முயற்சித்தக் காலங்கள் மறக்க முடியாதவை.

ஆர்வ மிகுதியால் ஒருமுறை ஏரியில் இறங்கி நடந்து, மேடுப்பள்ளங்களைக் கடந்து, கன்னியாகுளம் சாலையை அடைந்திருக்கிறேன்.

மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்பு என்பது 1980களின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. அதன் மேற்குப் பகுதியில் அப்போதே வீடுகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

1991ஆம் ஆண்டில், ஒரு பெருமழை. ஏரி நிரம்பியது. ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டியவர்களுக்குச் சிக்கல். வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்தது. ஒருநாள் இரவோடிரவாக, ஏரியின் கிழக்குக் கரையை உடைத்துவிட்டனர்.

இதனால் ஆர்ப்பரித்தத் தண்ணீர் விளைநிலங்களைச் சூழ்ந்தது. இதனை அடைப்பதற்குக் பாடுபட்ட மருதூர் விவசாயப் பெருமக்களுடன், செய்தியாளனாக ஏரிக்குள் இடுப்பளவுத் தண்ணீரில் நின்றிருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியல.

ஆண்டுகள் உருண்டோடின. ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன. மருதூர் ஏரியில் மேற்குப் பகுதி கட்டடங்களால் சுருங்கியது.


இந்த ஏரியைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் இன்றும் விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது.

மருதூர் ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியில் நல்ல நண்பர்கள் சிலர் இறங்கியுள்ளனர். பாராட்ட வேண்டும். இதன் விளைவாக, இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் தலையிட்டுள்ளது.


நம் முன்னோர் சேகரித்து வைத்தச் சொத்துக்களில் ஒன்று, விழுப்புரம் மருதூர் ஏரி மீட்டெடுக்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக