அப்போதெல்லாம் ‘நெம்புகோல்’ அமைப்பின் சார்பிலான அறிக்கைகள் என் பெயரில் பத்திரிகைகளில் பிரசுரமாகும்!
அதிலும் குறிப்பாக ‘தினப்புரட்சி’ நாளிதழில் நிறைய பிரசுரமாகும். இந்நாளேடு, பாமக சார்பில் நடத்தப்பட்டது. முற்போக்கு அமைப்புகளுக்கான முகாமாகத் திகழ்ந்தது.
அப்போது தான் தோழர்கள் சொன்னார்கள்: “நீங்கள் ஏன் பத்திரிகையாளர் ஆகக் கூடாது?”. அந்த முயற்சியில் இறங்கினேன்.
இதற்கிடையில் 17.81991 அன்று பேராசிரியர் கல்யாணி அவர்களின் ஏற்பாட்டில் டியூஷன் ஒழிப்பு மாநாடு நடந்தது. அதில் தினப்புரட்சி ஆசிரியரும் பாமக தலைவருமான பேராசிரியர் தீரனும பங்கேற்றார். மாநாடு முடித்து இரவு அவரது வேனில் தான் நாங்கள் விழுப்புரம் திரும்பினோம்.
அப்போது பேராசிரியர்கள் பழமலய், கல்யாணி ஆகியோர் தீரனிடம் சொன்னார்கள்: “ இவர் எழுத்துப் பணியில் ஆர்வம் உடையவர். தினப்புரட்சியில் நிருபராக வேண்டும் என்று விரும்புகிறார்”. இதை கனிவுடன் கேட்ட தீரன் அவர்கள், “சரி. விண்ணப்பம் போடச்சொல்லுங்கள்” என்றார். விழுப்புரம் வந்தவுடன் நானும் விண்ணப்பித்தேன்.
இரண்டு மூன்று மாதங்கள் உருண்டோடின. இதற்கிடையில் 1991 டிசம்பர் மாத இறுதியில் சென்னை பயணமான பேராசிரியர் பழமலய் அவர்கள் என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.
சென்னை சென்றதும், நேராக வன்னிய தேனாம்பேட்டை, நாட்டுமுத்து நாயக்கன் தெருவில் இயங்கி வந்த தினப்புரட்சி அலுவலகம் சென்றோம். அங்கு ஆசிரியரிடம் என்னை பேராசிரியர் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
அடுத்த சில நிமிடங்களில் தனது கையெழுத்துடன் கூடிய அடையாள அட்டையை பேராசிரியர் தீரன் அவர்கள் என்னிடம் வழங்கினார்.
“இவர் தினப்புரட்சி நாளேட்டின் பகுதிநேர நிருபராகப் பணிபுரிகிறார்”.
21.12.1991ம் தேதி தினப்புரட்சி நிருபர் ஆனேன்! 20 ஆண்டுகால பத்திரிகை பிரவேசம் அன்று தொடங்கியது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக