திங்கள், 24 ஜூலை, 2023

வரலாற்றில் பேரங்கியூர் கிராமம்

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தென்பெண்ணை ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்திருக்கும் கிராமம் தான் பேரங்கியூர்.


இந்த கிராமத்துக்குள் நுழைந்ததுமே என் சிறுவயது நினைவுகள் என்னை வந்து தொற்றிக் கொள்கின்றன.

ஆமாம். பேரங்கியூர் கிராமம் என் தாத்தா வீரபத்திர படையாட்சி பாட்டி தனலட்சுமி ஆகியோர் வாழ்ந்த ஊர். என் தாய் விட்டோபாய் பிறந்த மண். இந்த படத்துல குட்டிப் பையனா நின்னுட்டு இருக்கிறது நான் தான்.

சின்ன வயசுல ஸ்கூலுக்கு லீவு விட்டவுடன் இங்க வந்துடுவோம். அடுத்த ஒரு மாதம் நம் வாசம் இங்கதான். அந்த நினைவுகளை அசைபோட்ட படி இதோ பேரங்கியூருக்குள்ள நான் பயணிக்கிறேன்.

சின்ன சின்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்னமும் கிராமம் எனும் தனது தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது இந்தப் பேரங்கியூர். அப்போது பார்த்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி போஸ்ட் ஆஃபீஸ்.

பெரிதும் விவசாயத்தையே நம்பி இருக்கும் இந்தக் கிராமம் ஏரி மற்றும் ஆற்று நீரால் பயனடைந்து வருகின்றன. கிராமத்தின் மொத்த ஆயக்கட்டு 129.190 எக்டேர் என்கிறது இதோ இந்த பழைய கணக்கு ஒன்று.


நிலத்தின் வளத்துக்கு மட்டும் அல்ல வரலாற்றின் சிறப்புக்கும் உரியது பேரங்கியூர். இதோ இங்கிருக்கும் பல்லவர் கால அதாவது 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜேஷ்டா மற்றும் சோழர் கால சப்த மாதர்களின் சிற்பங்களே இதற்கு சாட்சி.

இங்கிருக்கும் வைணவர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்.

கோயிலின் வாயிலில் பார்த்தோம். பெண் தெய்வத்தின் சிற்பம். இவர் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.

கிராம மக்களின் வழிபடு தெய்வமாக விளங்குகிறாள் அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன். இங்கும் கூட பல்லவர் கால கொற்றவை காட்சி அளிக்கிறாள்.

பேரங்கியூர் கிராமத்தின் வரலாற்றுச் சிறப்பை நீடித்து நின்று இன்றும் சொல்கிறது அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்.

பராந்தக சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அருளே உருவாகக் காட்சியளிக்கிறார் திருமூலநாதர். இதோ அன்னை அபிராமி அழகே உருவாகக் காட்சியளிக்கிறாள்.

சோழர் கால கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயிலின் திருச்சுற்றில் அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் கோயில் திருச்சுற்றில் கல்லெழுத்துகளும். இவ்வூர் பேரிங்கூர் என்று அழைக்கப்பட்டு வந்தது உள்ளிட்ட பல தகவல்களைச் சொல்கின்றன இந்தக் கல்வெட்டுகள்.‌

இதோ இங்க பாருங்களேன். சோழர் கால அளவுகோல்.

அப்புறம் இணையர் ஒருவருடன் மட்டும் காணப்படும் ஐயனார் சிற்பம். மகாராஜ லீலாசனத்தில் அற்புதமாக அமர்ந்திருக்கும் இந்தச் சிற்பத்தின் காலம் பல்லவர் காலத்தின் இறுதி மற்றும் சோழர் கால தொடக்கம் னு சொல்லலாம். ஆமாம் ங்க ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவர் இந்த ஐயனார்.

2019 ஆகஸ்ட் இறுதியில் இந்தச் சிற்பத்தை ஆய்வு செய்து இந்த வரலாற்றை பேரங்கியூர் மக்களிடம் சொன்னோம். 

இப்ப இந்தக் கோயிலுக்கானத் திருப்பணிகள் வேகமா நடந்துட்டு வருது. 17.09.23 ல கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து இருக்காங்க.

பழமைவாய்ந்த ஐயனார் சிற்பம் தான் இங்க மூலவரா இருக்கப் போகிறார். மகிழ்ச்சி தான்.

ஐயனார் கோயிலுக்கானத் திருப்பணிகளுக்குப் பலரது உதவியையும் இவங்க நாடி இருக்காங்க.

இன்னும் இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் இந்த கிராமத்தில் இருக்கலாம். மீண்டும் மீண்டும் பேரங்கியூர் வரலாம். நான் மட்டும் இல்ல. நீங்களும் தான்.


(பேரங்கியூர் வரலாறு குறித்த அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ளிவிரிவான காணொளி கீழ்க்காணும் இணைப்பில்...)


https://youtu.be/v68q6EMUeMM

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக