அனுப்புநர்:
எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்,
ஒருங்கிணைப்பாளர்:
அருங்காட்சியகம் அமைப்பு - கூட்டமைப்பு,
விழுப்புரம்.
அலைபேசி: 9944622046.
பெறுநர்:
திருமிகு. ஆணையர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை,
சென்னை.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆணையர் அவர்களுக்கு,
பொருள்: விழுப்புரம் அருங்காட்சியகத்திற்கான மாற்று இடம் எனும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோருதல் - விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கக் கோருதல் தொடர்பாக.
வணக்கம்.
விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைய வேண்டும் என்பது எங்களின் கால்நூற்றாண்டைக் கடந்த கனவு. இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 4.8.2022 அன்று ரூ.5 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணை வெளியிடப்பட்டு ஓராண்டாகப் போகும் நிலையில் கடந்த 11ம் தேதி அன்று மரியாதைக்குரிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து அருங்காட்சியகப் பணிகளைத் துரிதப்படுத்தக்கோரி மனு அளித்தேன். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் தற்போது தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மதிப்பிற்குரிய ஆணையர் அவர்களின் கடிதம் ஒன்று, கடலூர் அருங்காட்சியகக் காப்பாட்சியர் அவர்களின் மூலமாக கடந்த புதனன்று (26.07.2023) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்ததாகவும் அதில், "விரிவான புதிய அருங்காட்சியகம் அமைவதற்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிகிறேன்.
மேலும், "தற்போது பெருந்திட்ட வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடம் நெடுஞ்சாலையில் இருந்து உள்ளடங்கி இருப்பதால் பார்வையாளர்கள் வருவதற்குக் குறைவான வாய்ப்பு இருப்பதாகவும்" தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் அறிகிறேன்.
விழுப்புரத்தில் அருங்காட்சியகத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டாகிவிட்டது.
நிலநிர்வாக ஆணையர் அவர்களின் முன்நுழைவு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு மட்டுமே நிலுவையில் உள்ளன. இவையும் கிடைத்துவிட்டால் பணிகளைத் தொடங்கி விடலாம். இதற்கான நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் துரிதப்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் த.மோகன் இ.ஆ.ப. அவர்கள் கடந்த 2021 செப்டம்பரில் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
07.01.2022 அன்று அருங்காட்சியகங்கள் துறை உதவி இயக்குநர் திருமதி. துளசிபிருந்தா அவர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் 12.01.2022 அன்று விழுப்புரம் வருகை தந்த தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் திரு.எஸ்.ஏ.இராமு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
இதன் பின்னரே விழுப்புரம் அருங்காட்சியகத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்காணும் நிகழ்வுகள் நடந்தேறி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது திடீரென அருங்காட்சியகம் அமைக்க புதிதாக இடம் கேட்பது என்பது பணிகளை மேலும் தாமதப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.
தற்போது விழுப்புரத்தில் அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பெருந்திட்ட வளாகம், நகரத்தின் மையப்பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள இடமாகும். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்களில் சில நூறு பேர்களாவது அருங்காட்சியகம் பக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மாவட்ட மைய நூலகம் இந்த வளாகத்திலேயே இருப்பதால் கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக மாணவர்கள் எளிதில் வந்து செல்லுவதற்கு ஏதுவான இடமாகவும், பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் இருக்கிறது.
புறநகரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர் வருகையே கேள்விக்குறியாகிவிடும் என்பது தான் நடைமுறை உண்மை. 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' எனும் நிலை ஏற்படலாம்! பார்வையாளர்களை அருங்காட்சியகம் நோக்கி இழுத்து வர (இதுதான் எதார்த்தம்) கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.
எனவே, மரியாதைக்குரிய ஆணையர் அவர்களின் நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்ய பணிவுடன் வேண்டுகிறேன்.
அனைத்து நிலைகளிலும் ஏற்புடையதாகவும் நிதி ஒதுக்கீட்டிற்கும் பணிகளைத் தொடங்குவதற்குத் தயாராகவும் இருக்கின்ற, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அருங்காட்சியகம் அமைவதற்கும், அதற்கானப் பணிகளை துரிதப்படுத்தவும் ஆவண செய்யுமாறும் மதிப்பிற்குரிய தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
(கோ.செங்குட்டுவன்)
ஒருங்கிணைப்பாளர்,
அருங்காட்சியகம் அமைப்பு- கூட்டமைப்பு, விழுப்புரம்.
22.07.23
விழுப்புரம்.
நகல்:
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
விழுப்புரம்.
உயர்திரு. மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,
விழுப்புரம்.
இணைப்பு:
விழுப்புரம் அருங்காட்சியகம் தொடர்பான எமது முன்னெடுப்புகள் சில...