கம்யூ.கட்சித்
தலைவர் பி.ராமமூர்த்தி எம்.பி.யின் “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்”
எனும் நூலினை
சமீபத்தில் வாசித்தேன்.
1983இல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ். 468 பக்கங்கள் உள்ள நூலின் விலை ரூ.10
தான். ஆச்சரியப்பட்டேன்.
மேலட்டையில், ஆரிய மாயையா? திராவிட மாயையா? எனும் சப் டைட்டிலும்
கொடுத்திருக்கின்றனர்.
இந்நூல் இதுகுறித்தும் பேசுகிறது என்பதைத் தெரிவிக்கும் உத்தி.
விடுதலைப் போரின் போது தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகளையும், இதில்
திராவிட இயக்கத்தின் பங்களிப்பையும் பேசும் இந்நூல், பின்னர் அதனையும் கடந்து
எம்.ஜி.ஆர். ஆட்சிவரை தொடர்கிறது.
“இந்த நூலை நான் எழுதும்போது, பொதுவாழ்க்கையில் 60 ஆண்டுகளுக்கும்
மேலாக எனக்கிருந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இந்தக்
காலகட்டத்தில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருகிற தலைவர்களையும், அவர்களுடைய
இயக்கங்களையும் நான் அனுபவப்பூர்வமாக அறிவேன். அவர்களுடன் நெருங்கிப் பழகியவன்
நான். சுதந்திர இயக்கத்தில் பல உப நதிகளில் நானும் இரண்டறக் கலந்தவன்.
இந்த நூல் முற்றிலும் என் ஞாபகத்திலிருந்தே எழுதப்பட்டுள்ளது. அதனால்
சிற்சில சம்பவங்களின் ஆண்டுகள் தவறாக இருக்கலாம். ஆனால் நிகழ்ச்சிகள் ஒன்றும்
தவறானதல்ல. இந்த நூலை வருங்கால தலைமுறையினருக்கு சமர்ப்பணமாக அளிக்கிறேன்” எனும் நூலாசிரியரின் முன்னுரை முக்கியமானது.
“ஜஸ்டிஸ் கட்சியின் கதை அனேகமாக 1937-ம் ஆண்டோடு முடிந்துபோன
ஒன்றாகும். இந்தக் கட்சி இருந்துவந்த காலம் பூராவிலும் இந்நாட்டின் தேசபக்தியும்
சுதந்திர வாஞ்சையும் கொண்ட எந்தவொரு இந்தியனும் பெருமைப்படக் கூடியதாக இல்லை.
மாறாக வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருந்தது.” என ஜஸ்டிஸ் கட்சியை விமர்சிக்கும் நூலாசிரியர்,
இதற்கானக் காரணக் காரியங்களையும் விளக்கியிருக்கிறார்.
நாடே எதிர்த்த சைமன் கமிஷனுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு,
மாண்டேகு செம்ஸ்போர்டுக்கு வரவேற்பு, ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு ஆதரவாக ஜஸ்டிஸ்
கட்சியினர் கொடுத்த அறிக்கை, என விவரித்துச் செல்கிறார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தை
நீக்குவதற்கு, பதினாரரை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி தனது சுண்டு
விரலைக்கூட அசைக்கவில்லை என்று குற்றம்சாட்டும் நூலாசிரியர், “இதுதான்
பிராமணல்லாதாரின் நலன் காத்த லட்சணம்!” என்கிறார்.
“அரண்மனைக்காரர்கள் சீமான்கள். துரைமார்களின் செல்லப்பிள்ளைகள். சரிகைக்
குல்லாக்காரர்கள்” என்று அண்ணா அவர்களால்
விமர்சிக்கப்பட்டவர்களைத் தான் தங்களது
மூதாதையர்கள், தாங்கள் அவர்களின் வழித்தோன்றல்கள் பரம்பரையினர் என்று இன்றைய
திராவிட இயக்கத்தினர் மார்தட்டிக் கொள்வதுதான் வியப்பானது–விந்தையானது –
வேடிக்கைக்கு உரியது” என எள்ளி
நகைக்கிறார்.
“திராவிடநாடு என்பது ஒரு கனவுதான் என்பதை திரு.அண்ணாதுரை உணர்ந்து
அவரே 1962-ல் அதைக் கைவிட்டுவிட்டார்” என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொண்ட கருணாநிதியும்,
எம்.ஜி.ஆரும் மலையாளி - கன்னடன் என மோதிக்கொண்டதையும் உரிய இடத்தில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, “பெரியார் செய்துவந்த நாத்திகப் பிரச்சாரத்துக்கு, கடவுள்
மறுப்பு பிரச்சாரத்துக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம். அவரைக்
கடவுளாக்கி சூடம் கொளுத்தி சாம்பிராணி தூபம் போட்டு பூஜை செய்வார்கள். அவருடைய
கொள்கைகளை சவக்குழியில் புதைப்பார்கள். இதுதான் திராவிட இயக்கத்திற்கு நேர்ந்துள்ள
கதி” என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட இயக்கம் நூற்றாண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த
வேளையில், பி.ராமமூர்த்தி எம்.பி.யின் இந்த நூல் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்!