புதன், 21 ஆகஸ்ட், 2019

அம்மா

"நீங்க மராத்தியா?"

எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களை அண்மையில் சென்னையில் சந்தித்த போது நான் எழுதிய “சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்” நூலினைக் கொடுத்தேன்.

வாங்கிப் பிரித்த அவரிடமிருந்துதான்  இப்படியான கேள்வி வந்தது.

அவரது இந்தக் கேள்விக்குக் காரணம், அந்த நூலினை என் அம்மாவுக்கு அர்ப்பணித்து இருந்தேன். அம்மாவின் பெயர், விட்டோபாய்.


தாத்தா வீரபத்திர படையாட்சி, தீவிர வைணவர். பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது பற்று கொண்டவர். ஆண்டுக்கு ஒரு முறை, பேரங்கியூரில் இருந்து பஜனை கோஷ்டிகளை அழைத்துக் கொண்டு பண்டரிபுரம் சென்று வருவார்.

இந்தப் பற்றுதலின் காரணமாகத்தான் பாண்டுரங்கனின் திருவிளையாடலில் வரக்கூடிய, விட்டோபாய், விட்டல்தாஸ், துக்காராம், ராணிபாய் போன்றவர்களின் பெயர்களைத் தன் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்து இருக்கிறார்.

என் அம்மாவின் பெயர்க் காரணத்திற்கான சிறு விளக்கம், நண்பர்களுக்காக.

விடுமுறைக் காலங்களில் உறவுகளுடன் பேரங்கியூரில் கூடுவோம். அப்போது கிராமத்தில் இருப்பவர்கள் என்னைப் பார்த்துக் கேட்பார்கள்: “விட்டா பையனா நீ?”

திருமண மண்டபங்களிலும் இன்னபிற விழாக்கள் நடைபெற்ற இடங்களிலும் கூட “விட்டா” மகனாகத்தான் அறியப்பட்டேன்.

அந்த அடையாளம் எனக்குள் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்தது.


எங்களின் அடையாளமாய்த் திகழ்ந்த, எங்களுக்கு அடையாளத்தை வழங்கிய அம்மா,

கிராம மக்களால் விட்டா என்று அன்போடு அழைக்கப்பட்ட, விட்டோபாய், எங்களை விட்டு மறைந்து, காற்றோடு கலந்து,

இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

அம்மா… உன் நினைவுகளைச் சுமந்தபடி…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக